Showing posts with label ஜாதகா கதைகள். Show all posts
Showing posts with label ஜாதகா கதைகள். Show all posts

தண்ணீர் ஊற்று

                                  தண்ணீர் ஊற்று
பிரம்மதத்தன் முன்பு காசியை ஆண்ட போது போதிசத்வர் சாதவாகன வம்சத்தில் பிறந்து வளர்ந்து பெரியவராகி ஐநூறு வண்டிகளை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்து வந்தார்.

ஒரு முறை அவரது குழு ஒரு பாலைவனப் பகுதியை அடைந்தது. அது அறுபது மைல் நீளமானது. பொடிமணல் சூடேறினால் காலைப் பொசுக்கி விடும். பகல் வேளையில் நெருப்பாய் கொதிக்கும் அந்தப் பாலைவனம் இரவில் சட்டெனக் குளிர்ந்துவிடும். நடுப்பகலின் போது அந்தப் பாலைவனத்தில் செல்லவே முடியாது.

எனவே அங்கு செல்லும் பயணிகள் தமக்கு வேண்டிய உணவுப் பொருள்களையும் குடி நீரையும் உடன் எடுத்துச் செல்வார்கள். கூடியவரையில் இரவில் பயணம் செய்து அந்தப் பாலை வனத்தைக் கடக்க முயல்வார்கள். இரவில் திசை காட்ட நட்சத்திரங்களே அவர்களுக்கு உதவும்.

ஒரே இரவில் அந்தப் பாலை வனத்தைக் கடக்க முடியாவிட்டால் மறுநாள் காலையில் வண்டிகளை வட்ட வடிவில் நிறுத்தி மேலே கெட்டித் துணிகளைக் கட்டி அதன் நிழலில் பயணிகளும் மாடுகளும் தங்க ஏற்பாடு செய்து கொள்வார்கள். அங்கேயே நீர் குடித்தும் சாப்பிட்டும் அன்றையப் பகல் பொழுதைப் போக்கிவிட்டு மாலையானதும் மீண்டும் பயணத்தைத் துவக்குவார்கள்.

அவர்கள் தம்மோடு போதிய அளவு நீரை எடுத்துப் போய் வந்ததால் அவர்களுக்கு எவ்வித சிரமமும் தோன்றாமல் இருந்து வந்தது.

போதிசத்வரும் இம்மாதிரியே பயணம் செய்து ஐம்பது மைல்.தூரத்தைக் கடந்து விட்டார். இன்னும் கொஞ்ச தூரமே இருந்ததால் ஒரு இரவில் கடந்து போய் விடலாமென எண்ணி தம்மிடம் மிகுந்த உணவையும் நீரையும் கொட்டி விட்டு பயணத்தைத் தம் குழுவுடன் துவக்கினார்.

முதலில் செல்லும் வண்டியில் இருப்பவன் தான் நட்சத்திரங்களைப் பார்த்து திசை அறிந்து செல்லக் கூடியவன். மற்ற வண்டிகள் அவனது வண்டியின் பின்னால் செல்லும். மாலையில் கிளம்பிய அவன் சற்று நேரத்தில் தன்னையும் அறியாமல் தூங்கிவிட்டான்.

அதனால் அவனது வண்டி சற்று வளைந்து போய் பாதையை விட்டுத் திரும்பி மீண்டும் பாலைவனத்திற்குள்ளாகவே போகலாயிற்று. அதைப் பின் பற்றி மற்ற வண்டிகளும் சென்றன. முதல் வண்டிக்காரன் விடியும் வேளைக்குத்தான் கண்விழித்தான். அப்போது நட்சத்திரங்களைப் பார்த்து விட்டு தன் வண்டி போக வேண்டிய திசையில் போகாமல் நேர் எதிராக வந்த வழியே பாலை வனத்திற்குள் போய்க் கொண்டிருப் பதைக் கவனித்தான்.

உடனே அவன் தன் வண்டியைத் திருப்பி "எல்லோரும் வண்டிகளைத் திருப்புங்கள். நாம் மறுபடியும் பாலைவனத்திற்குள்ளே வந்து விட்டோம்" என்றான். வண்டிகளை எவ்வளவு வேகமாக ஓட்டியும் அவர்களால் பாலைவனத்தைக் கடக்க முடியாமல் முதல் நாள் காலையில் தங்கிய இடத்திற்குத் தான் போய்ச் சேர முடிந்தது. அங்கேயே தங்கி விடலாம். ஆனால் குடிக்க நீர் வேண்டுமே.


வண்டிகளை வட்ட வடிவில் நிறுத்தி கூடாரம் போடப்பட்டது. ஆனால் அன்று பகல் முழுவதும் எல்லோரும் அங்கே தங்கி இருக்க வேண்டும். வண்டி மாடுகளும் இருக்க வேண்டும். இவர்களுக்கு குடிக்க நீரும் உணவு தயாரிக்க நீரும் தேவை. என்ன செய்வது? எனவே கவலையுடன் இளம் வெயிலில் போதிசத்வர் சுற்றிப் பார்க்க சற்று தூரத்தில் தர்ப்பைப்புல் அடர்ந்து வளர்ந்து இருந்ததைக் கண்டார். நிலத்துக்குள் ஈரப்பசை இருந்தால் தானே அந்தப் பாலைவனத்தில் புல்வளர முடியும் என எண்ணி அந்த இடத்தைத் தோண்டச் சொன்னார். எல்லோருமாகச் சேர்ந்து தோண்டினார்கள். இருபது அடி தோண்டியதும் பாறை தென்பட்டது.

இனி தண்ணீர் எங்கே இருக்கும் என எல்லோரும் சந்தேகப்பட்டார்கள். போதிசத்வரோ பாறை மீது காது வைத்துக் கேட்டு விட்டு "இதன் அடியே நீர் இருக்கிறது. இதனைப் புரட்டி நகர்த்துங்கள்"என்றார். பலருக்கும் அங்கே தண்ணீர் இருக்குமா என்ற சந்தேகமே ஏற்பட்டது. பாறை மிகப் பெரியதாக இருந்து அசைந்து கொடுக்கா விட்டால் என்ன செய்வது என்றும் கூறினார். ஆனால் போதிசத்வரோ "முயன்றால் முடியாதது எதுவும் இல்லை" என்று கூறி பாறையை நகர்த்தச் சொன்னார்.

அந்தக் கல்லைப் பெயர்த்து ஒருவன் நகர்த்தவே அந்த இடத்திலிருந்து தண்ணீர் பீறிட்டு பனை உயரத்திற்குப் போய் கீழே விழுந்தது. எல்லோரும் மகிழ்ந்து போய் முதலில் தம் தாகத்தைத் தணித்துக் கொண்டு நீரைப் பாத்திரங்களில் எடுத்துப் போனார்கள். அதன் பின் கூடாரத்தில் சமையல் தயாராகியது. எல்லோரும் சாப்பிட்டு விட்டு மாலையானதும் அங்கிருந்து கிளம்பி நேர் வழியில் சென்றனர். தண்ணீர் வந்த இடத்தில் போதிசத்வர் ஒரு கம்பத்தை நாட்டினார்.

அயல் நாட்டில் தம் சரக்குகளை இலாபத்திற்கு விற்று போதிசத்வர் ஊர்திரும்பி வந்து தானதர்மங்களைச் செய்து சுகமாக வாழ்ந்தார்.

முன் யோசனை

                                       முன் யோசனை!
பிரம்மதத்தன் காசியை ஆண்ட போது போதிசத்தவர். ஒரு வணிகரின் குடும்பத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே அவர் வியாபாரத்தின் நெளிவு சுளிவுகளை அனுபவம் மிக்க வியாபாரிகளிடமிருந்து கற்று அறிந்து கொண்டார். எந்த விஷயத்தையும் நன்கு ஆராய்ந்து அவசரப் படாமல் அவர் முடுவு எடுத்து வந்தார். அவரது வியாபாரம் பெருத்த அளவில் நான்கு திக்குகளிலும் நன்கு நடந்து வந்தது.

காசியில் மந்தமதி என்ற வியாபாரி இருந்தான். அவன் எதையும் அவசரப்பட்டு செய்பவன். ஒரு முறை போதிசத்வர் வண்டிகளில் வியாபாரச் சரக்குகளை ஏற்றிக் கொண்டு புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது மந்தமதி வந்து அவரிடம் தானும் அவர் போகும் வழியில் செல்லப் போவதால் அவரோடு சேர்ந்து தன் வண்டிகளை ஓட்டிக் கொண்டு வருவதாகக் கூறினான்.

அதைக் கேட்ட போதிசத்வர் 'மந்தமதி! நம் இருவர் சரக்கு வண்டிகளும் ஒரே பாதையில் செல்லும் போது சாலை அடைபட்டு மற்றவர்களின் போக்குவரத்திற்கு இடைஞ்சலே ஏற்படும். இதைத் தவிர்க்க நம்மில் யாராவது ஒருவர் முதலில் புறப்பட வேண்டும். மற்றவர் அதற்கு நாலைந்து நாட்கள் கழித்துப் புறப்பட்டால் மற்றவர்களுக்கு நம்மால் இடைஞ்சல் இருக்காது"என்றார்.

அப்போது மந்தமதி தன் மனதில் "நான் முதலில் புறப்பட்டுச் சென்றால் என் சரக்குகளை விற்று லாபம் அடைவேன். முதலில் நான் சாலையில் செல்வதால் அதில் செளகரியமாகப் பயணம் செய்ய முடியும். வழி நெடுக உள்ள புல்லை என் மாடுகள் மேய்த்து கொண்டே செல்லும். அதனால் அவற்றிற்காக நான் செய்ய வேண்டிய செலவு மிச்சம். வழியிலுள்ள மரங்களின் காய்களும் கனிகளும் எனக்கே
முதலில் பறித்துக் கொள்ளக் கிடைக்கும். தண்ணீரும் நன்கு கிடைக்கும். என் சரக்கு முதலில் செல்வதால் அந்தந்த ஊர்களில் நான் சொல்லும் விலைக்கே வாங்கிக் கொள்வார்கள்" என்று எண்ணினான்.

மந்தமதி அவரிடம் தான் முதலில் சரக்குகளுடன் செல்வதாயும் பிறகு அவர் சில நாட்கள் கழித்துப் புறப்படலாம் என்று கூறவே போதிசத்வரும் அப்படியே செய்வதாக ஒப்புக் கொண்டார். மந்தமதியும் அதற்காக மகிழ்ந்து போனான்.

மந்தமதி செல்ல வேண்டிய இடம் வெகு தூரத்தில் இருந்தது. வழியில் ஒரு பாலைவனம் வேறு இருந்தது. அதனால் பயணத்தில் அதைக் கடக்கப் போதிய நீரைப் பீப்பாய்களிலும், உணவையும் எடுத்துக் கொண்டு தன் சரக்கு வண்டிகளுடன் புறப்பட்டான். வியாபாரத்தில் தான் போதிசத்வரை முந்திவிட்டதாக எண்ணித் திருப்தி அடைந்தான். அவன் சில நாட்கள் பயணம் செய்தபின் பாலைவனப்பகுதியை அடைந்தான்.

அப்போது அவன் எதிரே ஒரு அழகிய வண்டி வந்தது. அதில் உயர் ஜாதி எருதுகள் பூட்டப்பட்டிருந்தன. அதில் ராஜா போன்ற ஒருவன் கம்பீரமாக உட்கார்ந்திருந்தான். அந்த வண்டியின் முன்னும் பின்னும் காவல்காரர்கள் வாள்கள், கத்திகள், ஈட்டிகள் என்று கைகளில் ஏந்திக் கொண்டு வந்தார்கள். வண்டியின் சக்கரங்களில் சேறு அப்பி இருந்தது. எல்லோருடைய தலைகள் மீது தாமரை காம்புகளும் கைகளில் தாமரை மலர்களும் இருந்தன.

வண்டியில் அமர்ந்திருந்த கனவான் போலிருந்தவன் "அடேயப்பா! ஒரே மழை. அதோ தென்படும் காட்டில் நீர் நிறைந்துள்ளது. ஏரிகளில் நீர் நிறைந்து கிராமங்களுக்குள் புகுந்து விட்டது. நீங்கள் அங்கே போவதால் உங்கள் பீப்பாய்களிலுள்ள நீரைக் கொட்டிவிட்டு புதிதாக நீரை நிரப்பிக் கொள்ளுங்கள்." என்று கூறினான். அந்த வண்டியில் இருந்தவனும் அவனோடு வந்த ஆட்களும் மனிதர்களைக் கொன்று தின்னும் ராட்சஸர்கள். அவ்வழியே வருபவர்களைப் பேச்சால் மயக்கி
அவர்களைத் தாகத்தாலும் பசியாலும் தவிக்கவிட்டு இறந்து போகச் செய்து அந்த உடல்களைத் தின்று விடுவார்கள்.

இதை அறியாத மந்திமதி தன் வண்டிகளில் இருந்த பீப்பாய்களில் இருந்த தண்ணீரைக் கொட்டிக் காலி செய்தான். பிறகு பயணத்தைத் தொடரவே அந்த கனவான் காட்டிய காட்டை அடைய முடியவில்லை. அவன் போகப் போக அந்தக் காடும் நகர்ந்து போய்க் கொண்டே இருந்தது. எங்கும் மழை பெய்த தடயமும் இருக்கவில்லை. மந்தமதியும் அவனது ஆட்களும் தண்ணீருக்குத் தவித்து நாவறண்டு இறந்து போனார்கள். அவர்களது வண்டிகளை இழுத்து வந்த எருதுகளும் இறந்துபோயின. இறந்துபோன மனிதர்களையும் எருதுகளையும் ராட்சஸர்கள் தின்றனர். மிகுந்த எலும்புகளை அந்தப் பாலைவனத்திலேயே விட்டு விட்டுப் போனார்கள்.

மந்தமதி கிளம்பிப் போய் பதினைந்து நாட்களான பிறகே போதி சத்வர் தம் வண்டிகளில் சரக்குகளில் நீரையும் உணவையும் எடுத்துக் கொண்டு சென்றார். எல்லோரும் பாலைவனப் பகுதியை அடைந்த போது போதி சத்வர் தம் ஆட்களிடம் "இந்தப் பகுதி அபாயகரமானது என்று கேள்விப் பட்டிருக்கிறேன். இங்கு மனிதமாமிசத்தை விரும்பி உண்ணும் ராட்சஸர்களின் நடமாட்டம் உள்ளது எனவும் கேள்வி பட்டிருக்கிறேன். அவர்கள் பயணிகளிடம் நயமாகப் பேசி ஏமாற்றி அவர்களைத் தம் வலையில் சிக்க

வைப்பார்களாம். எனவே நீங்கள் என்னிடம் கேட்காமல் எதையும் செய்யக் கூடாது" என்று எச்சரித்தார். அவர்கள் கொஞ்ச துரத்தில் அழகிய வண்டியில் வரும் கனவான் போன்ற வனையும் அவனது ஆட்களையும் பார்த்தார்கள்.

அந்த கனவான் போலிருந்தவன் மந்தமதியிடம் கூறியது போலவே போதிசத்வரிடம் சொன்னான். போதிசத்தவரோ "நீங்கள் சொல்லி முடித்தாகிவிட்டதல்லவா? உங்கள் வழியே போங்கள். தண்ணீரைக் கண்ட பிறகே எங்கள் பீப்பாய்களிலுள்ள நீரைக் கொட்டிவிட்டுப் புதிதாக நிரப்பிக் கொள்வோம்" என்றார். அதைக் கேட்ட அந்த ராட்சஸர்கள் "உங்கள் சிரமத்தைக் குறைக்கலாம் என்று எண்ணியே இதைக் கூறினோம். இதன்படி நடப்பதும் நடக்காததும் உங்கள் இஷ்டம்" என்று சலிப்புடன் கூறினார்கள். போதி சத்வரோ அவர்கள் கூறியதை ஏற்காததால் எதுவும் பேச முடியாமல் மெளனமாகச் சென்றார்கள். போதிசத்வரும் "பார்த்தீர்களா? நாம் வந்த இவ்வளவு தூரத்தில் மழை பெய்யவே இல்லை. ஈரக் காற்றும் வீசவில்லை. ஆகாயத்தில் ஒரு மேகம் கூடத் தெண்படவில்லை.எனவே இவர்கள் சொன்னது எல்லாம் பொய் என்றும் இவர்கள் மனிதர்களைக் கொன்று தின்னும் ராட்சஸர்கள் என்றும் புரிந்து கொண்டேன். நம்மை ஏமாற்றப் பார்த்தார்கள். முடிய வில்லை. நமக்கு முன் இங்கு வந்த மந்தமதியையும் அவனது ஆட்களையும் ஏமாற்றிக் கொன்று விட்டார்கள் போலிருக்கிறது" என்றார்.

அவர்கள் கொஞ்சதூரம் போனதும் மனித எலும்புக் கூடுகளையும் எருதுகளின் எலும்புகளையும் கண்டார்கள். மந்தமதி கொண்டு சென்ற சரக்குகளைக் கண்டு அவர்கள் அவற்றையும் தம்மோடு எடுத்துப் போய் விற்று லாபம் அடைந்தார்கள். போதிசத்வரின் முன் யோசனையால் ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை

.

தங்கக் கிண்ணம்

வெகு காலத்திற்கு முன் போதி சத்வர் ஒரு நாட்டில் பழைய பாத்திர வியாபாரம் செய்து வந்தார். பழைய பாத்திரங்களை நியாயமான விலைக்கு வாங்கிக் கொண்டு அதற்கான விலையையோ அல்லது வேறு புதுப்பாத்திரங்களையோ அவர் கொடுப்பார். அவரைப் போலவே அவ்வூரில் பேராசை பிடித்த மற்றொரு பழைய பாத்திர வியாபாரியும் இருந்தான். அவன் மோசடி வியாபாரம் செய்து வந்தான்.

ஒரு முறை தலைநகரிலிருந்து வேறொரு நகருக்கு அவர்கள் இருவரும் போனார்கள். அந்நகருக்கு முன் உள்ள ஆற்றைப் படகில் ஏறிக்கடந்து சென்று நகரை அடைந்தார்கள். இருவரும் தம் வியாபாரத்தை அந்த ஊரில் தொடங்கினார்கள்.

அந்த ஊரில் ஒரு பணக்காரக் குடும்பம் மிகவும் நொடித்துப் போய் ஏழையாகி துன்பப்பட்டுக் கொண்டிருந்தது. அக்குடும்பத் தலைவி வீட்டிலுள்ள பாத்திரங்களை அவ்வப்போது விற்று குடும்பத்தைக் காப்பாற்றி வந்தாள். அந்த வீட்டிலிருந்த எல்லாப் பாத்திரங்களும் இவ்வாறு போய் விட்டன. ஒரே ஒரு பாத்திரம் தான் மிஞ்சி இருந்தது. அது பாசி பிடித்துக் கருப்பாகி இருந்தது. உண்மையில் அது தங்கக் கிண்ணம். வெகு நாட்களாக உபயோகப் படுத்தாததால் அழுக்கேறி நிறம்மாறி இருந்தது.

தெருவில் 'பழைய பாத்திரம் வாங்குகிறேன்' என்ற குரல் கேட்டு அந்த வீட்டுத் தலைவி பாத்திரக்காரனை அழைத்தாள். அப்படி வந்தவன் பேராசை பிடித்த பாத்திரக்காரன். அவனிடம் அக்குடும்பத் தலைவி அந்தப் பழைய பாத்திரத்தைக் காட்டவே அவன் அதை வாங்கிப் பார்த்தான். அது தங்கத்தால் ஆனது என்று அவனுக்குத் தெரிந்து
விட்டது. ஆனால் வீட்டுத் தலைவிக்கு அது தெரியவில்லை எனக் கண்டு அவன் அவளை ஏமாற்றத் திட்டம் போட்டான்.

எனவே அவன் அப்பாத்திரத்தை தூர விட்டெறிந்து "இதை யார் வாங்குவார்கள்? இதற்கு பத்துக் காசுதான் தருவேன்" என்று ஒரேயடியாக அடாவடி செய்தான். வீட்டுத் தலைவியோ "என்னப்பா ஒரு வெள்ளிக் காசாவது கொடு" என்று கெஞ்சினாள். அவனோ பிகு செய்து கொண்டு 'முடியாது' எனக் கூறி விட்டு எழுந்து போய் விட்டான்.

அந்தப் பேராசைக்காரன் போனவுடன் போதிசத்வர் குரல் கொடுத்தவாறே வந்தார். அப்போது அந்த இல்லத்தலைவி "சரி, இவனிடமாவது இந்தப் பாத்திரத்தைக் கொடுத்து ஒரு வெள்ளிக் காசு வாங்கி இன்றையப் பொழுதை ஓட்டலாம்" என எண்ணி அவனை வீட்டினுள் கூப்பிட்டு அந்தக் கிண்ணத்தைக் காட்டினாள்.

போதிசத்வர் அதைப் பார்த்து விட்டு அது தங்கக் கிண்ணம் எனக் கண்டு "அம்மா, இது விலை உயர்ந்த தங்கக் கிண்ணம். இதனை நான் எடுத்துக் கொண்டு விலை கொடுக்கிறேன். இது ஆயிரம் வெள்ளிக்காசுகள் பெறும். என்னிடம் ஐநூறு வெள்ளிக்காசுகளும் சில வெள்ளிப்பாத்திரங்களும் உள்ளன. அவற்றைக் கொடுக்கிறேன். எனக்கு ஊர் திரும்ப ஐந்து வெள்ளிக் காசுகளை வைத்துக் கொண்டு மீதம் கொடுக்கிறேன்" என்றார்.

வீட்டுத் தலைவியும் "அப்படியா! இது இவ்வளவு விலை பெறுமா?சற்று முன் வந்த ஒருவன் இது


ஐந்து காசு கூடப் பெறாது எனத் தூக்கி எறிந்தானே. அவன் என்னை ஏமாற்றப் பார்த்தான் போலிருக்கிறது" எனக் கூறினாள். போதிசத்வரும் பணத்தையும் வெள்ளிப் பாத்திரங்களையும் கொடுத்து விட்டு அந்தத் தங்கக் கிண்ணத்தை வாங்கிக் கொண்டு ஆற்றின் கரைக்குப் போய் படகில் ஏறினார். படகும் அங்கிருந்து செல்லலாயிற்று.

போதிசத்வர் போன சற்று நேரத்திற்கெல்லாம் அந்தப் பேராசை பிடித்த வியாபாரி அந்த வீட்டிற்கு வந்து "கொடு அம்மா அந்த பாத்திரத்தை. போனால் போகிறது என்று நீ கேட்டபடியே ஒரு வெள்ளிக்காசைக் கொடுக்கிறேன்" என்றான்.

வீட்டுத் தலைவியோ "ஏய் மோசக்காரா! என்னை ஏமாற்றி ஆயிரம் வெள்ளிக் காசுகள் விலை பெறும் தங்கக் கிண்ணியை ஒரு வெள்ளிக் காசுக்கா வாங்கிக் கொண்டு போகப் பார்க்கிறாய்? போ போ.வேறொரு வியாபாரி எனக்கு அதற்கு உரிய நியாயமான விலையைக் கொடுத்து விட்டு பாத்திரத்தை வாங்கிக் கொண்டு போய் விட்டார்" எனக் கூரி படாரென்று கதவைச் சாத்திக் கொண்டு போய் விட்டாள்.

அடடா! ஒரு வெள்ளிக் காசு கொடுத்து ஆயிரம் வெள்ளிக்காசுகள் பெறுமான பாத்திரத்தைத் தட்டிக் கொண்டு போக நினைத்ததை இந்த போதிசத்வர் வந்து கெடுத்து விட்டாரே என்று அந்தப் பேராசைக்கார வியாபாரி ஆத்திரம் கொண்டான். அவன் வேக வேகமாக ஆற்றின் படகுத்துறைக்கு ஓடினான்.

ஆனால் அப்போது போதிசத்வர் ஏறிச் சென்ற படகு ஆற்றில் பாதி தூரத்திற்கு மேல் சென்று விட்டது.

அதைக் கண்ட பேராசைக்காரனின் ரத்தம் கொதித்தது. கொழுத்த லாபம் வர இருந்தது போதிசத்வரால் கையை விட்டுப் போய் விட்டதே என எண்ண எண்ண அவன் நெஞ்சம் விம்மியது. ரத்த ஓட்டம் அதிகரிக்க அவன் இதயம் வெடித்துக் கீழே விழுந்து இறந்தான். போதிசத்வரின் நேர்மையால் ஏமாற இருந்த ஒரு குடும்பம் நிறையப் பணம் பெற்று நன்கு வாழ வழி ஏற்பட்டது.

நரகவாசம்

 
பிரம்மதத்தன் காசியை ஆண்ட போது அந்நகரில் புகழ்பெற்ற வியாபாரி ஒருவன் இருந்தான். அவனது மகன் மித்திரவிந்தன். அவன் புரிவதெல்லாம் பாவச் செயல்களே. இதனால் மனமுடைந்து அவனது தந்தை இறந்து போனான். அவனது தாயோ "இனிமேலாவது நல்லது செய்து புண்ணியம் சம்பாதி. கெட்ட காரியங்களைச் செய்யாதே" என்று அவனுக்கு அறிவுரை கூறினாள்.

ஒருநாள் அவனது தாயார் "இன்று பெளத்த விகாரத்தில் பிரசங்கம் செய்ய யாரோ வருகிறார்களாம். இரவு முழுவதும் பிரசங்கம் நடக்குமாம். போய் நீயும் கேட்டு விட்டு வா. உனக்கு நாளை செலவிற்குப் பணம் கொடுக்கிறேன்" என்றாள். மறுநாள் தன் செலவிற்குப் பணம் கிடைக்கிறதே என எண்ணி மித்திரவிந்தன் அவ்வாறே செய்வதாகக் கூறிப் போனான். ஆனால் அவன் பெளத்த விகாரத்திற்குச் சென்று பிரசங்கமா கேட்டான்? பிரசங்கம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க மித்திரவிந்தன் ஒரு மூலையில் போய் படுத்துத் தூங்கினான். காலையானதும் எழுந்து முகம் கழுவிக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

அவன் தான் சொன்னபடி கேட்ட தற்காக அவனது தாய் மகிழ்ந்து போய் நல்ல சமையல் செய்து சாப்பாடு போட்டாள். பிறகு அவன் தன் கைச்செலவிற்காகத் தாயாரிடம் இருந்து நூறு ரூபாய் வாங்கிக் கொண்டு வீட்டிலிருந்து கிளம்பி சென்றான்.

அந்த நூறு ரூபாயைக் கொண்டு வியாபாரம் செய்து சிறுகச் சிறுக இலாபம் அடைந்து முடிவில் இருபது லட்சம் ரூபாய் எப்படியோ சேர்த்து விட்டான். எல்லாம் அநியாய வழியில் சம்பாதித்ததுதான். அந்தப் பணத்தோடு அயல்நாடுகளில் வியாபாரம் செய்ய அவன் கப்பலில் கிளம்பிச் சென்றான்.
கிளம்பு முன் தாயாரிடம் தான் மேலும் லாபம் அடைய அயல்நாடுகளுக்கு வியாபாரம் செய்யப் போவதாகக் கூறவே அவளும் "மகனே, நீ எனக்கு ஒரே மகன். இப்போது தான் உன்னிடம் நிறையப் பணம் இருக்கிறதே. இன்னமுமா சம்பாதிக்க வேண்டும்? இருப்பதை தான தர்மம் என்று புண்ணிய காரியங்களில் செலவு செய்து சுகமாக இருக்கலாமே" என்று கூறித் தடுத்தாள். ஆனால் அவன் தன் தாயின் பேச்சைக் கேட்காமல் அவளைப் பிடித்துக் கீழே தள்ளி விட்டு இரண்டு அடிகள் கொடுத்து அவளை எழுந்து வராமல் செய்து விட்டு கிளம்பிப் போனான். அவன் ஏறிச் சென்ற கப்பல் எட்டாவது நாளன்று நடுக்கடலில் நின்று விட்டது. அது முன்னே செல்லவில்லை.

அது கண்டு கப்பலில் இருந்த மாலுமிகள் "இந்தக் கப்பலில் யாரோ ஒரு பாவி இருக்கிறான். அவன் யார் எனத் திருவுளச் சீட்டு போட்டுக் கண்டு பிடிக்கலாம். அவனை ஒரு படகில் ஏற்றிக் கடலில் விட்டு விட்டால் நம் கப்பல் நகரும்" என்றனர்.

மறுநிமிடமே திருவுளச்சீட்டு போடப்பட்டது. மித்திரவிந்தனின் பெயர்தான் முதல் தடவையில் வந்தது. மேலும் இரண்டு தடவைகள் போட்டுப் பார்த்த போதிலும் அவன் பெயர் தான் வந்தது. உடனே ஒரு படகை கடலில் இறக்கி அதில் மித்திரவிந்தனை வைத்து அவர்கள் விட்டு விட்டார்கள். அவனது படகு எங்கோ செல்ல அக்கப்பலும் அங்கிருந்து நகர்ந்தது.

மித்திரவிந்தனின் படகு வெகு நாள்களுக்குப் பிறகு ஒரு தீவை அடைந்தது. அவன் அத்தீவில் இறங்கியதும் ஒரு படிகக்கல் மாளிகையைப் பார்த்தான். அந்த மாளிகையில் நான்கு பெண் பிசாசுகள் வசித்து வந்தன. அவை ஒரு வாரகாலம் அனைத்து சுகபோகங்களை அனுபவித்தும் அடுத்த வாரம் தாம் செய்த பாவங்களுக்குப் பிராயச்சித்தம் செய்து கொண்டு கடும் விரதங்களைக் கடைப் பிடித்தும் வந்தன.

மித்திரவிந்தன் அப்பிசாசுகளுடன் ஒரு வாரகாலத்தைச் சுகமாகக் கழித்தான். அடுத்த வாரம் விரதம் என்றதும் அவன் அவற்றிடம் சொல்லிக் கொள்ளாமல் கூடத் தன் படகில் ஏறிக் கிளம்பி விட்டான்.
அப்படகு பல நாள்களுக்குப் பிறகு அவனை இன்னொருதீவில் கொண்டு போய் விட்டது.

அத்தீவில் எட்டு பிசாசுகள் இருந்தன. அவற்றோடும் ஒருவாரகாலம் சுகமாக இருந்து விட்டு அவன் தன் படகில் கிளம்பிச் சென்றான். அடுத்த தீவில் பதினாறு பிசாசுகளுடனும் அதற்கு அடுத்த தீவில் முப்பத்திரெண்டு பிசாசுகளுடனும் ஒவ்வொரு வாரம் சுகமாகக் கழித்து விட்டு வேறொரு தீவை அடைந்தான்.

அந்தத் தீவில் ஒரு பெரிய நகரம் தென்பட்டது. அதைச் சுற்றிலும் பெரிய மதில் சுவரும் நான்கு தலை வாசல்களும் இருந்தன. அது உண்மையில் நரகலோகம். ஆனால் மித்திரவிந்தன் கண்களுக்கு அது அழகிய நகரமாகத் தோன்றியது அதற்குள் அவன் சென்றான்.

நகரில் ஒரு வீதியில் ஒரு மனிதன் நிற்க அவன் தலை மீது ஒரு பெரிய சக்கரம் சுழன்று கொண்டிருந்தது. அது கனமாயும் அதன் ஆரக்கால்கள் வாள் போல் கூராகவும் இருந்தன. சக்கரம் அவனது தலைக்குள் நன்கு அழுந்திச் சுழன்றதால் ஆரக்கால்கள் தலை மீது பட்டு இரத்தம் வடியச் செய்து கொண்டிருந்தன. அவன் சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்ததால் அவனால் சிறிது கூட ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு அசைய முடியவில்லை. வலியால் அவன் மிகவும் பலமாக அலறிக் கொண்டிருந்தான்.

இதை எல்லாம் கண்டும் மித்திரவிந்தன் அவனை அந்நகரத்தின் மன்னன் என நினைத்தான். அவன் தலை மீது சுழன்ற சக்கரம் கிரீடம் போல அவன் கண்களுக்குப் பட்டது. அவனைப் பிணைத்திருந்த சங்கிலிகள் தங்க ஆபரணங்களாக அவனுக்குத் தோன்றின.
 
தனக்கு அது கிடைத்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்றும் தானும் அந்த நாட்டின் மன்னனாகி விடலாம் என்றும் நினைத்தான்.

இவ்வாறு நினைத்துக் கொண்டு மித்திரவிந்தன் அந்த மனிதனை அணுகி "ஐயா! உங்கள் தலை மீதுள்ள கிரீடத்தை நான் சற்று நேரம் அணிந்திருக்க அனுமதிப்பீர்களா?" என்று கேட்டான்.

அவனோ "இது கிரீடமல்ல, சக்கரம்" எனவே, மித்திரவிந்தன் "எனக்குக் கொடுக்க இஷ்டப்படாமல் இப்படி ஏதோ ஒரு சாக்கு சொல்கிறீர்களே" என்றான். இதைக் கேட்ட அம்மனிதன் தன் பாவத்திற்கு ஒரு முடிவு வந்து விட்டதென எண்ணி "ஆகா, கொடுக்கிறேன்" எனக் கூறி அந்த சக்கரத்தை எடுத்து மித்திர விந்தனின் தலை மீது வைத்து விட்டுப்போய் விட்டான். தாயை அடித்தவர்களுக்கு நரகத்தில் அப்படி ஒரு தண்டனை என மித்திரவிந்தன் அறிந்திருக்கவில்லை தான். சக்கரம் அவனது தலை மீது வைக்கப்பட்ட பின்புதான் மித்திரவிந்தனுக்கு அதன் வலியும் உண்மையும் புரிந்தது.

இந்திரனாக இருந்த போதிசத்வர் ஒருமுறை நரகலோகத்தைக் காண வந்தார். அவர் மித்திரவிந்தன் இருந்த இடத்திற்கு வந்தபோது அவன் அவரிடம் "என் மீது இரக்கம் காட்டுங்கள். இந்தச் சக்கரத்தினிடம் இருந்து எப்போது நான் விடுதலை பெறுவேன்?" என்று கேட்டான்.

அப்போது போதிசத்வர் "உன்னிடம் எவ்வளவோ பணம் இருந்தும் மேலும் மேலும் சம்பாதிக்க வேண்டும் என்றே ஆசைப்பட்டாய். பிசாசுகளுடன் வசித்தாய். மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய உயர் நெறிகளை ஏற்கவில்லை. இதனை நீயே கேட்டு வாங்கிக் கொண்டாய். எனவே உன் ஆயுட்காலம் முடியும் வரை உனக்கு இந்த நரகவாசம்தான்" எனக் கூறினார்.

மித்திரவிந்தனும் கண்ணீர் வடித்துத் தன் விதியை நொந்தவாறே நரகத்தில் வசிக்கலானான்.
 

தகுதி எது?

 
போதிசத்வர் பிரம்மதத்தன் காசியை ஆண்ட காலத்தில் அவனது. பண்டகசாலை அதிகாரியாக இருந்தார். அரசாங்கத்திற்கு வாங்கும் எந்தப் பொருட்களையும் மதிப்பிட்டு விலை கொடுப்பது பண்டகசாலை அதிகாரியின் வேலை. அவரும் பொன், குதிரை, தங்க, வெள்ளி நகைகள், பாத்திரங்கள் முதலிய வற்றிற்குச்சரியான மதிப்புப்போட்டு விலை கொடுத்து வாங்கி வந்தார். விலைக்கு விற்றவர்களும் அவர் கூறிய விலை நியாயமானதே என்று ஏற்று மகிழ்ச்சியுடன் அந்த விலைக்கான பணத்தை வாங்கிச் சென்றனர்.

ஆனால் ஒரு நாள் திடீரென காசி மன்னன் மனதில் போதிசத்வர் கொடுக்கும் விலையைப் பற்றி சந்தேகம் ஏற்பட்டது. அப்போது தன் அறை சன்னலைத் திறந்தான். தோட்டத்தில் நெற்றி வியர்வை நிலத்தில் விழ தோட்டக்காரன் அங்கு வேலை செய்து கொண்டிருப்பதை அவன் பார்த்தான். அவர் "ஆகா! இந்தத் தோட்டக்காரன் எவ்வளவு உண்மையாக வேலை பார்க்கிறான்.

இவனை போதிசத்வருக்கு பதிலாகப் பண்டகசாலை அதிகாரியாக நியமிக்கிறேன். இப்படி உண்மையாகப் பாடுபடுபவன் எல்லா வேலைகளிலும் உண்மையுடன் நடந்து கொள்வான்" என எண்ணி உடனேயே அவனை அப்பதவியில் அமர்த்தினார். போதிசத்வரை வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.

புதிய அதிகாரிக்கு வியாபாரத்தில் அனுபவம் இல்லாததால் தன் இஷ்டம் போல் பொருட்களின் விலைகளை மதிப்பிடலானான். அது மிகமிகக் குறைவாக இருந்தாலும் தாம் அரசாங்கத்திற்கு கொடுக்கிறோமே என பயந்து பொருளை விற்பவர்கள் அந்த அதிகாரி கொடுத்த விலையை வாங்கிக் கொண்டு மனம் புழுங்கியவாறே சென்றனர். ஒரு நாள் அயல் நாட்டிலிருந்து ஒரு குதிரை வியாபாரி தன் ஐநூறு உயர் ரக குதிரைகளை விற்க காசிக்கு வந்தான். புதிய அதிகாரி அக்குதிரைகளை மதிப்பிட்டு விட்டு "இவற்றின் மதிப்பு அரைப்படி அரிசியே. இவனுக்கு அரைப்படி அரிசியைக் கொடுத்து போய் குதிரைகளை நம் லாயத்தில் கட்டுங்கள்" என்றான்.
குதிரை வியாபாரி திகைத்துப் போனான். அவன் அந்த விலைக்கு விற்கச் சம்மதிக்காமல் நேராக போதிசத்வரிடம் போய் நடந்ததைக் கூறி, "இது அநியாயம். ஐநூறு குதிரைகளின் விலை அரைப்படி அரிசியாம்! நீங்களே சொல்லுங்கள், இது அக்கிரமம் இல்லையா? இப்படியா என் வியாபாரத்தில் மண்ணைப் போட வேண்டும்?" என்றான்.

போதிசத்வரும் "இந்தப் புது அதிகாரியை சந்தோஷப் படுத்த முதலில் அவனுக்குக் கொஞ்சம் பணம் கொடு. பிறகு அவர் குதிரைகளுக்கு மதிப்புப் போட்ட விலை மிகச் சரியானதே என்றும் ஆனால் அந்த அரைப்படி அரிசியின் விலை என்ன என்பதை அரச சபையில் எல்லோர் முன்னிலும் சொல்ல வேண்டும் எனக்கேட்டுக் கொள். அவன் இதற்கு இணங்கினால் நாளை அரச சபைக்கு அழைத்துப் போ. நானும் அங்கு வந்து உனக்கு நியாயம் கிடைக்கச் செய்கிறேன்" என்றார்.

அந்தக் குதிரை வியாபாரியும் போதிசத்வர் கூறியது போலவே புதிய அதிகாரியைக் கண்டு கொஞ்சம் பணம் கொடுத்து, அரச சபைக்கு வந்து அந்த அரிசியின் விலையை அவனால் கூற முடியுமா என்று கேட்டான்.

அந்த அதிகாரியும் "ஏன் முடியாது? நாளையே நான் அரச சபையில் அதன் விலையைக் கூறுகிறேன்" என்றான். மறுநாள் அரசசபையில் ஏராளமான மக்கள் கூடி இருந்தார்கள். போதிசத்வரும் அரசரின் அனுமதி பெற்று வந்து அமர்ந்திருந்தார்.

அப்போது அந்தக் குதிரை வியாபாரி பண்டகசாலை அதிகாரியோடு அரசனின் முன் வந்து "அரசே இவர் என் குதிரைகளின் விலை அரைப்படி அரிசி என்றார். அந்த அரைப்படி அரிசியின் விலை என்ன என்பதை இவர் இப்போது கூற வேண்டும்" என்றான்.

அரசனும் "அப்படியா! ஐநூறு குதிரைகளின் விலை அரைப்படி அரிசி என்றால் அந்த அரைப்படி அரிசியின் விலை என்ன?" என்று கேட்டார். அரசனுக்கு அதற்கு முன் என்ன நடந்தது என்பது தெரிய வில்லை. பண்டகசாலை அதிகாரியும் சற்றும் தயங்காமல் "அந்த அரைப் படி அரிசியின் விலை இந்தக் காசி ராஜ்யமும் இதன் கீழே உள்ள மற்ற நாடுகளும் எவ்வளவு விலை பெறுமோ அவ்வளவு விலையாகும்" என்றான்.
இந்தப் பதிலைக் கேட்டதும் அனைவரும் 'கொல்'லென்று சிரித்தார்கள். கைதட்டிக் கேலி செய்தார்கள். அப்போது வேறு ஒரு வியாபாரி "அரசே! இவ்வளவு நாட்களாக நம் நாட்டை விலை மதிப்பிட முடியாதது என எண்ணி வந்தோம். இந்த அதிகாரி தன் அபார அறிவால் நம் நாட்டோடு மற்ற நாடுகளையும் சேர்த்து விலை மதிப்பு போட்டு அரைப்படி அரிசி எனக் கூறி விட்டாரே ஆகா! என்ன அறிவு எவ்வளவு திறமை" என்று நையாண்டி செய்தான்.

அப்போது போதிசத்வர் எழுந்து "இந்த அதிகாரி கூறுவது உண்மையே. இவரைக் கேலி செய்யாதீர்கள். ஐநூறு குதிரைகளின் விலை அரைப்படி அரிசி என்றார். அவர் அரைப்படி அரிசி விலை என்ன என்று கேட்ட போது அவர் இந்த நாடும் இதன் கீழுள்ள நாடுகளும் சேர்ந்த விலை என்றார். எனவே ஐநூறு குதிரைகளின் விலை இந்த நாடும் இதன் கீழுள்ள நாடுகளும் பெறும் மதிப்பிற்குச் சமம் என்று ஆகிறது. எனவே அந்த வியாபாரிக்கு இந்த விலை கொடுப்பது சரிதானே" என்றார். இதைக் கேட்ட எல்லோரும் திகைத்துப் போனார்கள். தகுதி இல்லாத ஒருவனுக்கு உயர் பதவி அளிப்பதால் எவ்வளவு கெடுதல் விளையும் என்பதை அரசனும் அப்போது தான் உணர்ந்தார். உடனே அந்த அதிகாரியை விசாரிக்கவே அவன் முன்தினம் நடந்ததை எல்லாம் கூறி தான் அந்த வியாபாரியிடம் பணம் பெற்றுக்கொண்டு அரச சபையில் குதிரைகளின் விலையைக் கூற இசைந்ததையும் சொன்னான்.

உடனே அரசன் "இப்படி நீ லஞ்சம் வாங்கியதால் உன்னை இப்போதே இப்பதவியில் இருந்து நீக்குகிறேன்" என அவனை நீக்கி விட்டு சத்வரையே மீண்டும் அப்பதவியில் அமர்த்தினான்.
 

கோட்டை நாய்கள்

 
பிரம்மதத்தன் காசியை ஆண்ட காலத்தில் போதிசத்வர் ஒரு நாயாகப் பிறந்து நாய்களின் கூட்டத்திற்குத் தலைவராக விளங்கினார். ஒரு நாள் அந்நாட்டு மன்னன் தன் ரதத்தில் எங்கோ போய் விட்டு அரண்மனைக்கு வந்தான். தன் ரதத்தை நிறுத்தி விட்டு அவன் உள்ளே சென்றான். அப்போது கோட்டைக்குள் வளர்க்கப்படும் நாய்கள் ஓடி வந்து குதிரைகளுக்குப் போடப்பட்டிருந்த கடிவாளங்களைக் கடித்து தோல் துண்டுகளைத் தின்று விட்டு ஓடிப் போய் விட்டன.

சற்று நேரத்திற்கெல்லாம் வெளியே வந்த மன்னன் தன் குதிரையின் கடிவாளங்கள் கடிக்கப் பட்டிருப்பதையும் சற்று தூரத்தில் சில நாய்கள் ஓடிக் கொண்டிருப்பதையும் கண்டான். தன் விலையுயர்ந்த கடிவாளங்கள் நாசமாக்கப்பட்டது கண்டு அவன் கோபம் கொண்டு நாட்டிலுள்ள நாய்களை எல்லாம் அடித்துக் கொல்லும்படித் தன் வீரர்களுக்குக் கட்டளை இட்டான்.

வீரர்களும் நாட்டில் தெருவில் கண்ட நாய்களை எல்லாம் அடித்துக் கொல்லலானார்கள். நாய்கள் எல்லாம் பயந்து ஓடிப் போய்த் தம் தலைவராக நாய் உருவில் இருந்த போதிசத்வரிடம் போய் அரசனின் கட்டளையைக் கூறிப் பல நாய்கள் இறந்து போனதையும் கூறின.

போதிசத்வரும் "நான் இப்போதே அரச சபைக்குப் போய் அரசனுக்கு நல்லது கூறி இந்த உத்தரவை ரத்து செய்து நியாயம் வழங்கச் சொல்கிறேன்" எனக் கூறி விட்டு அரச சபைக்குச் சென்றார். அங்கு அவர் அரண்மனைக்குள் நுழைந்து எப்படியோ தர்பார் மண்டபத்திற்குள் போனார். பிறகு அவர் அங்கு அரசன் சிம்மாசனத்தின் அடியே புகுந்து வந்து அரசனின் முன் நின்றார்.
அப்போது காவல் வீரர்கள் அந்த நாயை அடிக்க முயலவே அரசன் அவர்களைத் தடுத்து "இது ஏதோ சொல்ல வந்திருக்கிறது. அது என்ன என்று கேட்போம்" என்றான்.

போதிசத்வரான நாயும் "அரசே, நாட்டிலுள்ள நாய்களை எல்லாம் அடித்துக் கொல்லும்படி உத்தரவு போட்டிருக்கிறீர்களே. இது எதற்காக?" என்று கேட்டது. அரசனும் "அவை என் தேர்க் குதிரைகளின் கடிவாளங்களைத் கடித்து அந்தத் தோலைத் தின்று விட்டன. விலை உயர்ந்த கடிவாளங்கள் நாசமாகி விட்டன. இதுதான் நாய்களின் குற்றம்" என்றான்.

அப்போது போதிசத்வர் "அந்தக் கடிவாளங்களை கடித்தது எந்த நாய்கள் என்று தெரியுமா?" என்று கேட்க அரசனும் "தெரியாது" என்றான். அப்போது போதிசத்வர் 'அரசே! குற்றம் செய்தவன் யார் என்று கூடத் தெரியாமல் மொத்தமாக எல்லோரையும் தண்டிப்பது நியாயமா? உங்கள் வீரர்கள் இந்த நாட்டில் உள்ள எல்லா நாய்களையும் அடித்துக் கொல்லப் போகிறார்களா?"என்றுகேட்டார்.அரசனும் "நாட்டிலுள்ள, நாய்களை எல்லாம் கொல்லும்படி உத்தரவு போட்டேன். கோட்டைக்குள் நான் வளர்க்கும் நாய்களுக்கு இந்த உத்தரவுஇல்லை "என்றான். போதிசத்வரும் "உங்களுக்குக் குற்றம் புரிந்த நாய்கள் எவை என்பது தெரியாது. ஆனால் கோட்டைக்குள் இருக்கும் நாய்களை ஒன்றும் செய்யக் கூடாது என்கிறீர்கள். இது பாரபட்சம் காட்டுவதாகும். வெறுப்பு கொண்ட அறிவற்ற செயலாகும். ஒரு அரசனிடம் ஒருவருக்கு ஒரு நீதி மற்றொருவருக்கு இன்னொரு நீதி என்று இத்தகைய குணங்கள் இருக்கக் கூடாது," என்றார்.

அது கேட்டு அரசன் சற்று யோசித்து "அப்படியானால் என் விலையுயர்ந்த கடிவாளங்களைக் கடித்த நாய்கள் எவை என்று நீ கண்டுபிடி. அவைகளை தண்டிக்கிறேன். மற்ற நாய்களை ஒன்றும் செய்யாமல் விட்டு விடுகிறேன்" என்றான்.

போதிசத்வரும் "இந்தக் குற்றத்தை செய்தது உங்கள் கோட்டை நாய்கள். அதை நான் நிரூபித்துக் காட்டுகிறேன்" என்றார் "அப்படி செய்தால் என் உத்தரவை உடனே ரத்து செய்கிறேன்" என அரசன் கூறினான்.
உடனே போதிசத்வர் கோட்டை நாய்களைக் கொண்டு வரச் சொன்னார். அவற்றிற்கு அவர் கொட்டை முத்து போட்டு அரைத்த விழுதை மோரில் கலந்து குடிக்க வைத்தார்.

சற்று நேரத்திற்கெல்லாம் அந்த நாய்கள் வாந்தி எடுத்தன. அவை எடுத்த வாந்தியில் அவை கடித்துத் தின்று இன்னமும் ஜீரணமாகாத கடிவாளத்தோல் துண்டுகள் வெளியே வந்து விழுந்தன.

அதைக் கண்ட அரசன் ஆச்சரியப் பட்டு நிற்கவே போதிசத்வரும் "அரசே அரண்மனைப் பணியாட்கள் உங்கள் கோட்டை நாய்களுக்கு சரியான உணவு கொடுப்பதில்லை. உணவுக்காகப் பணம் வாங்கிக் கொண்டு அதில் பெரும் பகுதியை அமுக்கிக் கொண்டு விடுகிறார்கள். அதனால் பசியால் இந்தக் கோட்டை நாய்கள் வாடுகின்றன. நீங்கள் இதை சரி செய்யுங்கள்" என்றார்.அரசனுக்கு நாய் வடிவில் போதி சத்வரே வந்திருக்கிறார் என்பது தெரிந்து விட்டது. அவன் போதி சத்வர் உபதேசித்த அறிவரைகளைக் கவனமாகக் கேட்டான்.

கோட்டைக்குள் நாய்களுக்கு உணவு கொடுக்கப் பொறுப்பேற்றவர்களை விசாரித்து அவர்கள் குற்றவாளிகளே எனக் கண்டு அவர்களை வேலையிலிருந்து நீக்கிக்கடுமையாக தண்டித்தான்.

அந்த நாய்களை வளர்க்கும் பணிக்கு புதியவர்களை நியமித்தான். அவன் அவர்களிடம் "நீங்கள் இந்த நாய்களைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து வரவேண்டும். தெரிந்ததா?" என்றும் கூறினான்.

அது மட்டுமல்ல, நாட்டிலுள்ள நாய்களுக்கும் உணவு அளிக்க ஏற்பாடு செய்தான் அந்த அரசன். இவ்வாறு போதிசத்வரின் நற்போதனைகளால் அரசனுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் நல்வாழ்வு கிடைத்தது.
 

நகரைத்தாக்க வந்த நரி


 
வெகு காலத்திற்கு முன் போதிசத்வர் காசியில் ஒரு உயர் குடும்பத்தில் பிறந்து எல்லா சாஸ்திரங்களையும் கற்று மிகச் சிறந்த பண்டிதராக விளங்கினார். அதனால் காசி மன்னன் அவரைத் தன் ஆஸ்தானப் புரோகிதராக நியமித்துக் கொண்டான். போதிசத்வர் பல பழைய கிரந்தங்களைத் தணிக்கை செய்து வந்த போது அவற்றில் ஒன்றில் ஒரு அற்புத மந்திரத்தைக் கண்டு கொண்டார். அது சக்திவாய்ந்ததது. அதை உச்சரித்தால் எப்படிப் பட்ட பலசாலியான எதிரியும் பணிந்து போயாக வேண்டும். 
 
 
 இந்த மந்திரத்தைத் தெரிந்து கொண்டும் போதிசத்வருக்கு யாரையும் படிய வைத்துத் தன் அடிமை போல நடத்த விருப்பம் இல்லை. அதை மறந்து மறைந்து போக விடக் கூடாது என அவர் எண்ணினார். ஒருநாள் ஒரு காட்டிற்குள் மக்கள் நடமாட்டமே இல்லாத ஒரு பகுதியில் ஒரு உயர்ந்த பாறை மீது அவர் உட்கார்ந்து தாம் கற்ற அந்த அற்புத மந்திரத்தைப் பல முறை உரத்த குரலில் கூறினார். மாலையானதும் அவர் அப்பாறை மீதிருந்து கீழே இறங்கி நகருக்குத் திரும்பிச் செல்லலானார். 
 
அப்போது அந்தப் பாறையின் பின்னால் இருந்து ஒரு நரி ஓடி வந்து அவரைக் கண்டு வணங்கி "மகா பண்டிதரே! நீங்கள் கூறிய மந்திரத்தை நான் மனப்பாடம் செய்து விட்டேன். உங்களுக்கு மிக்க நன்றி" எனக் கூறி விட்டு அங்கிருந்து ஓடியது. சக்திவாய்ந்த மந்திரத்தைத் தந்திரசாலியான நரி கற்றது சரியல்ல என நினைத்து அவர் அந்த நரியைப் பிடிக்க முயன்றார். ஆனால் அப்போது மிகவும் இருட்டி விட்டதாலும் நரி புதர்களுக்கு இடையே ஓடி மறைந்ததாலும் அவரது முயற்சி பலிக்கவில்லை.
 
அந்த நரி முன் பிறப்பில் ஒரு பிராமணனாகப் பிறந்து பிறரை ஏமாற்றியே வந்திருந்தது. அந்தப் பிறப்பின் காரணமாக அதற்கு இப்போது தான் கற்ற மந்திரத்தின் சக்தி தெரிந்து போயிற்று.
 
வேகமாக ஓடிய நரி தன் எதிரே தன்னை விட பலம் பொருந்திய வேறொரு நரி வருவதைக் கண்டது. உடனே அது தான் கற்ற மந்திரத்தை மனத்திற்குள் உச்சரிக்கவே பலசாலியான அந்த நரி திடீரென அதன் முன் விழுந்து வணங்கி பணிவுடன் அது செல்ல வழியை விட்டது. மந்திரம் கற்ற நரி இதனால் ஒரேயடியாக மகிழ்ந்து போயிற்று.
 
அது முதல் அந்த நரி தான் கற்ற மந்திரத்தால் நரிகள், காட்டுப் பன்றிகள், புலிகள், யானைகள், சிங்கங்கள் முதலியவற்றைத் தனக்குப் பணிந்து போக வைத்தது. இதனால் எல்லா மிருகங்களும் அதனைத் தம் அரசனாக ஏற்றுக் கொண்டன.
 
அரசனான நரி ஒரு பெண் நரியைத் திருமணம் செய்து கொண்டு அதனை அரசியாக அறிவித்தது. தனது அரசவை மந்திரிகளாக யானைகளையும் படைத் தலைவர்களாக சிங்கங்களையும் புலிகளையும் அந்த நரி நியமித்துக் கொண்டது. எல்லா மிருகங்களும் தனக்கும் தன் மனைவிக்கும் பயந்து அடங்கி ஒடுங்கிப் பணிவிடை செய்தது கண்டு அந்த நரிக்கு கர்வம் வந்து விட்டது. அது இரு யானைகளின் மீது ஒரு சிங்கத்தை நிற்க வைத்து அதன் மீது தான் அமர்ந்து காட்டில் திரியலாயிற்று.
காட்டிலுள்ள எல்லா மிருகங்களும் உலகிலேயே அதனைப் போன்ற சக்தி வாய்ந்த அரசன் இல்லை எனப் புகழ்ந்தன.
 
கர்வம் தலைக்கு ஏறியதால் அந்த நரி `இப்போது நான் மிருகங்களுக்கு மட்டுமே அரசன். இனி காசி நகர் மீது படை எடுத்துப் போய் அங்குஉள்ளவர்களையும் பணிய வைத்து மனிதர்களின் மன்னனாகவும் விளங்குகிறேன்' என எண்ணியது.
 
 சில நாள்களுக்குப் பின் அது பலம் மிகுந்த பல சிங்கங்களையும் புலிகளையும் மற்றும் பல மிருகங்களையும் சேர்த்து ஒரு படையாகத் திரட்டி காசி நகரின் மீது படை எடுத்துச் சென்றது. தம் நகரைத் தாக்கப் பல மிருகங்கள் வருவது கண்டு சில நகரவாசிகள் ஓடி மற்றவர்களை எச்சரித்தார்கள்.
 
இதனால் நகரில் ஒரே அமளி ஏற்பட்டது. நரியும் தன் படையோடு காசி நகரின் தலைவாசலை வந்து அடைந்தது. அது நடுநடுங்கும் காவலாளிகளிடம் "அடே! இப்போது உங்கள் மன்னனிடம் போய் எனக்குப் பணிந்து போகச் சொல்லுங்கள். இல்லாவிட்டால் என் படை நகரில் புகுந்து எல்லாவற்றையும் நாசமாக்கி விடும்" என்று கூறியது.
 
காவலாளிகளும் ஓடிப் போய் காசி மன்னனிடம் நரி கூறியதைச் சொன்னார்கள். அது கேட்டு மன்னன் நடுநடுங்கினான். அப்போது போதிசத்வர் "அரசே, நான் இதற்குத் தீர்வு காண்கிறேன்" என்று கூறினார்.
 
பிறகு அவர் வீரர்களை அழைத்து "நகரில் உள்ளவர்கள் எல்லாரையும் தங்களது காதுகளில் மறக்காமல் பஞ்சை வைத்து அடைத்துக் கொள்ளச் சொல்லுங்கள்" என்றார்.
 
வீரர்களும் மக்களிடம் சென்று போதிசத்வர் கூறியதைக் கூற, எல்லாரும் அவ்வாறு செய்தனர். வீரர்கள் போதிசத்வரிடம் அந்தத்தகவலையும் தெரிவித்தார்கள்.
 
அப்போது அவர் தலைவாசலுக்குப் போய் நரி மன்னனிடம் "நீ என்ன வேண்டுமானாலும் உனது விருப்பப்படி செய்து கொள்" என்றார்.
 
இரு யானைகளின் மீது நின்ற சிங்கத்தின் மீது அமர்ந்திருந்த நரி சிங்கங்களை எல்லாம் பயங்கரமாகக் கர்ஜிக்கும்படிக் கட்டளை இட்டது. சிங்கங்களும் மிகவும் பயங்கரமாகக் கர்ஜித்தன,
 
ஆனால் காசி நகரவாசிகள் தம் காதுகளில் பஞ்சை அடைத்துக் கொண்டதால் அந்த கர்ஜனையைக் கேட்கவே இல்லை. அனால் சிங்கங்களின் கர்ஜனை கேட்டு நரி மன்னனைச் சுமந்து நின்ற யானைகள் துள்ளிக் குதித்து ஓடின. அதனால் அவற்றின் மீதிருந்த சிங்கம் கீழே விழ அதன் மீதிருந்த மன்னனான நரியும் உருண்டு விழுந்தது. பயந்து ஓடும் யானைகள் அந்த நரியைத் தம் கால்களால் நசுக்கின. மற்ற மிருகங்களும் பயந்து ஓடவே அவை கூட நரி மன்னனின் உடலை மிதித்தவாறே சென்றன. இந்த அமளியில் நரியும் பல மிருகங்களும் இறந்து போயின. எஞ்சியவை காட்டிற்கு ஓடி விட்டன.
 
இதன் பின் நகர மக்கள் தம் காதுகளில் அடைக்கப்பட்ட பஞ்சை எடுத்தனர். நகருக்கு வெளியே வந்து அவர்கள் எல்லாரும் இறந்து கிடந்த மிருகங்களின் தோல்களை உரித்து எடுத்துக் கொண்டனர்.
 
 இவ்வாறு நரி மன்னனை ஒழித்து காட்டு பயங்கரமிருகங்களிடம் இருந்து தம்மைக் காப்பாற்றிய போதிசத்வரை காசி மன்னனும் மக்களும் போற்றிப் புகழ்ந்து தம் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்கள்.
 

நன்றி கெட்ட மன்னன்

 
காசியை ஆண்ட பிரம்மதத்தனுக்கு ஒரு மகன் இருந்தான். அவன் சிறு வயதிலிருந்தே கொடூரகுணம் உடையவன். எவரையும் எந்த காரணமும் இல்லாமல் தன் வீரர்களைக் கொண்டு பிடித்து வர சொல்லி அவர்களைத் துன்புறுத்தி மனம் மகிழ்வான். கிழவர்களையும் பண்டிதர்களையும் சற்றும் மதிக்காததோடு அவர்களை அவமதித்தும் வந்தான். இதனால் அவனுக்கு இளவரசனுக்குரிய மரியாதைகளை யாரும் தந்ததேயில்லை. எல்லாரும் அவனை வெறுத்து வந்தார்கள்.
 
அவனுக்கு இருபது வயதான போது ஒரு நாள் தன் நண்பர்களுடன் குளிக்க ஆற்றிற்குச் சென்றான். அவனுக்கு நீந்தத் தெரியாது. எனவே நன்கு நீந்தும் சில வேலையாட்களும் அவனுக்குத் துணையாகச் சென்றனர். இளவரசனும் அவனது நண்பர்களும் குளித்துக் கொண்டு இருக்கையில் திடீரென ஆகாயத்தில் கருமேகங்கள் சூழ்ந்து கொண்டன. இளவரசனும் அப்போது "இந்த மாதிரி சமயங்களில்தான் நடு ஆற்றில் குளிக்க வேண்டும். என்னை நடு ஆற்றிற்குக் கொண்டு போங்கள்" என்று தன் வேலையாட்களிடம் கூறினான். அவர்களும் அவன் கூறியபடியே அவனை நடு ஆற்றிற்குப் பிடித்து இழுத்துச் சென்றனர். அவனது நண்பர்களோ ஆழமில்லாத இடத்தில் இருந்து குளித்தனர்.
 
அப்போது அடை மழை பெய்தது. ஓரடி தூரத்தில் உள்ளது கூட கண்களுக்குத் தெரியாமல் ஒரே இருள் சூழ்ந்தது. அப்போது வேலையாட்கள் மகாதுஷ்டனான அந்த இளவரசனை ஒழிக்கத் தீர்மானித்து அவனை அங்கேயே விட்டு விட்டுக் கரைக்குத் திரும்பி விட்டார்கள்.
கரையிலிருந்த இளவரசனின் நண்பர்கள் அவர்களிடம் இளவரசன் எங்கே என்று கேட்கவே அவர்களும் "அவர் எங்கள் பிடியிலிருந்து நீந்திக் கொண்டே போய் விட்டார்.
இந்நேரம் கரை ஏறி அரண்மனையை அடைந்திருப்பார்" எனக் கூறினார்கள்.
 
அனைவரும் அரண்மனைக்குத் திரும்பினர். இளவரசனைக் காணாது மன்னன் அவனைப் பற்றிக் கேட்கவே வேலையாட்கள் முன்பு கூறியதையே மன்னனிடமும் கூறினார்கள். உடனே மன்னன் தன் ஆட்களை அனுப்பி ஆற்றில் நன்கு தேடும்படிக் கூறினான். அவர்களும் தேடிப் பார்த்து விட்டு முடிவில் இளவரசன் அகப்படவில்லை என்று கூறினார்கள்.
 
ஆற்றில் விடப்பட்ட இளவரசனை வெள்ளம் அடித்துச் சென்றது. அதில் வந்த ஒரு மரக்கிளையைப் பிடித்து அதன் மீது ஏறி உட்கார்ந்து கொண்டான். அந்தக் கிளை மீது ஒரு பாம்பும் ஒரு எலியும் ஒரு கிளியும் இருந்தன.
 
மரக்கிளை மீது ஏறி உட்கார்ந்த இளவரசன் உரக்க "ஐயோ! காப்பாற்றுங்கள்" எனப் பல முறை கூவினான். ஆனால் யாருமே அவனைப் பாராததால் அவன் மாலையாகி இருட்டும் போது கூட அதே கிளையின் மீது உட்கார்ந்தபடியே ஆற்றில் போய் கொண்டிருந்தான்.
 
ஒரு காட்டின் நடுவே அந்த ஆறு சென்ற போது இளவரசனின் கூக்குரல் கரையோரமாக ஆசிரமம் கட்டி வாழ்ந்து வந்த முனிவரான போதிசத்வரின் காதில் விழுந்தது. அவர் நல்ல கட்டுமஸ்தான உடல் கொண்டவர். தைரியசாலி. உடனே அவர் ஆற்றில் குதித்து நீந்தி இளவரசனும் மற்ற மூன்று பிராணிகளும் இருந்த மரக்கிளையை இழுத்துக் கொண்டு கரையில் கொண்டு போய்ச் சேர்த்தார்.
 
 அவர் முதலில் மூன்று பிராணிகளையும் தம் ஆசிரமத்தில் கொண்டு போய்ச் சேர்த்து உணவு தயாரித்து அவற்றிற்குக் கொடுத்தார். பிறகே இளவரசனுக்கும் கொடுத்தார். அந்த மூன்று பிராணிகளும் இளவரசனும் இரண்டு நாள்கள் அந்த ஆசிரமத்தில் இருந்தனர். இதற்குள் புயல் காற்று ஓய்ந்தது. கிளி அங்கிருந்து செல்வதாகக் கூறி போதிசத்வரிடம் "ஐயா! தாங்கள் என்னைக் காப்பாற்றினீர்கள். இந்தப் புயலில் என் வீடு நாசமடைந்து விட்டது. என்னால் அதிகம் பறக்க முடியாது.
எனக்குப் பல நண்பர்கள் இமயமலைப் பகுதியில் இருக்கிறார்கள். என் உதவி எப்போதாவது உங்களுக்கு வேண்டுமென்றால் அதோ தெரியும் மலை அடிவாரத்தில் நின்று கூப்பிடுங்கள். என் நண்பர்கள் வாயிலாகப் பழங்களையும் தானியங்களையும் தங்களுக்குக் கிடைக்கச் செய்கிறேன்" என்றது. போதிசத்வரும் "நீ கூறியதை நினைவில் வைத்துக் கொள்கிறேன்" என்று கூறியதும் கிளியும் விடை பெற்றுக் கொண்டு அங்கிருந்து சென்றது.
 
அடுத்து பாம்பும் "நான் முன் பிறப்பில் ஒரு வியாபாரி. இந்த ஆற்றின் கரையில் ஓரிடத்தில் நிறையத் தங்க நாணயங்களைப் புதைத்து வைத்திருக்கிறேன். இந்தப் பிறப்பில் அதனைக் காத்து வருகிறேன். மக்களுக்கு உதவும் பணியில் இந்தத் தங்க நாணயங்களைத் தாங்கள் உபயோகிப்பதனால் அவற்றைத் தங்களிடம் ஒப்படைக்கிறேன்" என்று கூறி விடை பெற்று சென்றது. இது போல எலியும் தன்னைப் பற்றிக் கூறி அவரிடம் விடை பெற்றது.
 
அப்போது இளவரசன் "நான் இந்நாட்டு இளவரசன். என் தந்தை இறந்த பின் இந்நாட்டின் மன்னனாகி விடுவேன். அப்போது நீங்கள் என் அரண்மனைக்கு வந்தால் தக்கபடி உபசரித்து கௌரவிக்கிறேன்" என்று கூறி விடை பெற்றுச் சென்றான்.
 
சில வருடங்கள் கழிந்தன. போதிசத்வர் காசி நகருக்குச் சென்றார். அப்போது பிரம்மதத்தன் இறந்து போய் அவனது மகனான இளவரசன் அரசனாகி இருந்தான். போதிசத்வர் நகர வீதி வழியே சென்று கொண்டு இருக்கையில் யானை மீது அமர்ந்து வந்த அந்தக் கொடூர குண இளவரசன் தன் வீரர்களிடம் "அந்தப் பரதேசியைப் பிடித்து ஒரு தூணில் கட்டி சவுக்கால் அடியுங்கள். பிறகு கொலைக்களத்திற்கு கொண்டு போய் அவன் தலையை வெட்டி எறியுங்கள். நான் இளவரசனாக இருந்தபோது என்னோடு ஒரு எலி, ஒரு கிளி, ஒரு பாம்பு ஆகியவற்றைக் காப்பாற்றினான். ஆனால் முதலில் என்னைக் கவனிக்காமல் அந்த மூன்று பிராணிகளையும் கவனித்து உணவுஅளித்து விட்ட பிறகு தான் எனக்கு உணவு கொடுத்தான். என்ன திமிர் இவனுக்கு?" என்று கோபத்தோடு கூறினான். வீரர்களும் போதிசத்வரைப் பிடித்துச் சவுக்கால் அடித்தனர்.
அப்போது மக்கள் கூடி "ஐயா! தாங்கள் என்றாவது இந்த மன்னனுக்கு உபகாரம் ஏதாவது செய்து இருக்கிறீர்களா?" என்று கேட்டார்கள். அவரும் "ஆமாம். செய்திருக்கிறேன்" எனக் கூறி காட்டில் இளவரசனையும் மூன்று பிராணிகளையும் காப்பாற்றித் தம் ஆசிரமத்தில் தங்க வைத்து இரண்டு நாள்களுக்குப் பின் அனுப்பியதை விவரமாகக் கூறினார்.
 
அதைக் கேட்ட மக்களுக்கு அந்த மன்னன் மீது கோபமும் வெறுப்பும் ஏற்பட்டது. ஏற்கெனவே அவனது கொடும் செயல்களால் ஆத்திரம் கொண்ட அவர்கள் கொடுங்கோலனின் வீரர்கள் ஒரு சாதுவை துன்புறுத்துவது கண்டு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு அந்த வீரர்களைத் தாக்கி விரட்டினார்கள். போதிசத்வரை அவர்களிடமிருந்து விடுவித்தார்கள்.
 
தன் உயிருக்கே ஆபத்து வந்து விடுமோ என மன்னன் பயந்து அங்கிருந்து ஓடி விட முயன்றான். ஆனால் மக்கள் அவனை யானை மீதிருந்து இழுத்துக் கீழே தள்ளி கொன்று விட்டார்கள். மக்கள் வேண்டிக் கொண்டதன் பேரில் போதிசத்வர் காசி மன்னராகி ஆட்சி புரியலானார். அவர் பாம்பையும் கிளியையும் எலியையும் மறக்கவில்லை. அவர் மலையடிவாரத்திற்குப் போய் பாம்பைச் சந்திக்க அது தான் காத்து வந்த தங்க நாணயங்களை அவரிடம் அளித்தது. அவரும் அதனை ஏற்று அப்பாம்பையும் தன்னோடு அழைத்து வந்தார். அவர் கிளியையும் எலியையும் கூட இவ்வாறே அழைத்து வந்தார்.
 
அவர் பாம்பு கொடுத்த பணத்தை மக்கள் நலனுக்காகச் செலவு செய்தார். பாம்பு வசிக்க அவர் தன் மாளிகையில் இருப்பிடம் அமைத்துக் கொடுத்தார். எலி வசிக்க நவரத்தினங்கள் பதித்த ஒரு வங்கு தயாரித்தார். கிளி இருக்க ஒரு தங்கக் கூண்டைச் செய்து கொடுத்தார்.
 
கொடுங்கோலனை இவ்வாறு அழித்ததால் காசி நாட்டு மக்கள் நல்ல வாழ்வைப் பெற்றார்கள். போதிசத்வரும் அவர்களுக்கு உபதேசம் செய்து நல்லாட்சி புரிந்து வந்தார்.
 

வீட்டிற்குப் போ!

 
பிரம்மதத்தன் காசியை ஆண்ட காலத்தில் அங்கு சேனகர் என்ற மாபெரும் யோகியாக போதிசத்வர் அவதரித்திருந்தார். அதே சமயம் அந்நகரை அடுத்து இருந்த ஒரு கிராமத்தில் பிச்சை எடுத்துப் பிழைக்கும் ஒரு பிராமணன் இருந்தான்.
 
ஒருநாள் அவன் ஏதோ ஒரு ஊரில் பிச்சை வாங்கிக் கொண்டு காட்டு வழியே தன் ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தான். அப்போது ஒரு அசŽர வாக்கு "பிராமணா! நீ இன்று வீட்டிற்குப் போகாமல் இருந்தால் இறந்து விடுவாய். நீ வீட்டிற்குப் போனாலோ உன் மனைவி இறப்பாள்" என்று கூறியது.
 
பிராமணன் சுற்றிலும் பார்த்து யாருமே இல்லாதது கண்டு தன்னை எச்சரித்தவன் யாராவது யட்சனோ கந்தர்வனோ அல்லது பிசாசோ என்று சந்தேகப் பட்டான். அவன் மனத்தில் பயம் ஏற்படவே எப்படியாவது சட்டென வீட்டிற்குப் போய் விட வேண்டும் என்று அவன் துடித்தான். ஆனால் வீட்டிற்குப் போனால் அவன் மனைவி இறந்து விடுவாளாமே. இந்த இக்கட்டான நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் அவன் தவித்தான்.
 
 அவன் நகருக்குள் நுழைந்து ஒரு வீதி வழியாகப் போன போது சேனகரான போதிசத்வர் மக்களுக்கு தர்மோபதேசம் செய்து கொண்டுஇருப்பதைக் கண்டான். அவர் உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்திருக்க மக்கள் அவரைச் சுற்றிலும் கூடி இருந்தார்கள்.
 
இந்தப் பிராமணனும் கூட்ட த்தில் சேர்ந்து கொண்டு போதிசத்வர் கூறியதைக்   கேட்கலானான். போதிசத்வர் தம் பேச்சை முடித்ததும் மக்கள் கூட்டம் கலைந்து சென்றது.
ஆனால் அந்த பிராமணன் மட்டும் ஆடாமல் அசையாமல் மரம் போல நின்றான்.
 
அவனுக்குக் காட்டில் கேட்ட அசŽர வாக்கு மிகுந்த குழப்பத்தைத்தான் உண்டாக்கி இருந்தது. எப்படிப் பார்த்தாலும் கணவன் மனைவி இருவருள் யாராவது ஒருவர் இறந்தாக வேண்டும். இருவரும் இறக்காமல் இருக்க என்ன வழி என்று காணத்தான் அவன் துடித்தான்.
 
அவனைக் கண்ட போதிசத்வர் தன்னருகே வரும்படி அவனுக்குச் சைகை செய்தார். பிராமணனும் அவரருகே போய் அவரை வணங்கி எழுந்து தலை குனிந்து நின்றான். போதிசத்வரும் "நீ எதற்காக இப்போது வேதனைப் படுகிறாய்?" என்று கேட்டார். பிராமணனும் காட்டில் தன்னை யாரோ எச்சரித்ததைக் கூறி "இப்போது நான் என்ன செய்வேன்? வீட்டிற்குப் போனாலே என் மனைவி இறந்து விடுவாளாம். போகா விட்டாலோ நான் இறந்து விடுவேனாம். இருவரும் இறக்காமல் இருக்க ஏதாவது வழி கூறுங்கள்" என வேண்டினான். அப்போது போதிசத்வர் "நீ அந்த எச்சரிக்கையைக் கேட்கும் முன் என்ன செய்து கொண்டிருந்தாய்?" என்று கேட்டார். "நான் ஒரிடத்தில் உட்கார்ந்து பையிலிருந்த உணவை எடுத்துச் சாப்பிட்டேன்" என்றான்.
 
"சரி. உன்னிடம் உணவு உள்ள பை இருக்கிறது. ஆனால் நீர் குடிக்கப் பாத்திரம் எதுவும் இல்லையே. தண்ணீர் எப்படிக் குடித்தாய்?" என்று போதிசத்வர் கேட்டார். "எதிரே ஒரு ஆறு இருந்தது. அங்கு போய்த் தண்ணீர் குடித்து விட்டு வந்தேன்" என்றான் பிராமணன். "அப்படியானால் நீ உணவு சாப்பிட்டு விட்டு பையை அதே இடத்தில் விட்டு விட்டு ஆற்றிற்கு போனாய். அந்த பையில் உணவு மீதமாகி இருந்ததா?" என்று போதிசத்வர் அவனைப் பார்த்துக் கேட்டார்.
 
அவனும் "ஆமாம். பையில் இருந்ததில் பாதியை நான் உண்டேன். மிகுந்ததை கட்டி எடுத்துக் கொண்டு போய் மனைவியிடம் கொடுக்கப் போகிறேன். இதோ அந்தப் பை" என்று காட்டினான். "நீ நதிக்குப் போன போது பையின் வாயைக் கட்டவில்லையே" என போதிசத்வர் கேட்டார். "கட்டவில்லைதான்" எனப் பிராமணன் பதிலளித்தான்.
"அப்படியானால் நதியிலிருந்து திரும்பி வந்துதான் பையின் வாயைக் கட்டினாய். கட்டு முன் அதற்குள் என்ன இருக்கிறது என்று பார்த்தாயா?" என்று அவர் கேட்டார். அவனும் "பார்க்கவில்லை. அப்படியே கட்டி எடுத்து வந்தேன். இதற்குப் பிறகுதான் என்னை எச்சரிக்கும் குரல் என் காதில் விழுந்தது" என்றான்.
 
போதிசத்வரும் "அப்படியானால் நீ ஆற்றில் போய்த் தண்ணீர் குடித்த போது பை இருந்த இடத்தில் ஏதோ நடத்திருக்கிறது. அநேகமாக ஒரு பாம்பு உன் பைக்குள் போயிருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். அதை கவனித்த யட்சனோ தேவதையோ உன்னை எச்சரித்தது. நீ வீட்டிற்குப் போகாவிட்டால் மறுபடியும் பசிக்கும் போது பையைத் திறப்பாய். அப்போது அதிலிருக்கும் பாம்பு உன்னைத் தீண்டி விடும். நீயும் இறந்து போவாய். நீ பையைத் திறக்காமல் வீட்டிற்குப் போனால் முதலில் பையை உன் மனைவியிடம் தான் கொடுப்பாய். அவளும் அதை ஆவலுடன் திறப்பாள். அப்போது பாம்பு அவளைக் கடிக்க அவள் இறந்து விடுவாள். இது தான் விஷயம்" எனக் கூறி அப்பையைத் தான் உட்கார்ந்திருக்கும் இடத்தருகே வைக்கும்படி அந்த பிராம்மணனிடம் சொன்னார்.
 
பிராம்மணன் அப்போதுதான் தன் பைக்குள் பாம்பு புகுந்திருக்கிறது என அறிந்து திடுக்கிட்டான். போதிசத்வர் கூறியபடியே உடனேயே அவர் பக்கத்தில் வைத்து போதிசத்வர் என்ன செய்கிறார் எனப் பார்க்கலானான்.
 
அப்போது அவ்வழியே சென்ற ஒரு பாம்பாட்டியை அவர் கூப்பிட்டு பையிலுள்ள பாம்பைப் பிடிக்கச் சொன்னார். அவனும் பையின் வாயை அவிழ்த்து சீறி வந்த நல்ல பாம்பைப் பிடித்து கொண்டு போய் விட்டான்.
 
அதன் பிறகு போதிசத்வர் பிராமணனிடம் "நீ இனிமேல் பயமில்லாமல் உன் வீட்டிற்குப் போகலாம்" என்றார். பிராமணன் அவருக்குத் தன் நன்றியறிதலைத் தெரிவித்து, கவலையை விடுத்துத் தன் வீட்டிற்குச் சென்றான்.
 

யானைப்பாக மன்னன்

 
பிரம்மதத்தன் காசியை ஆண்ட போது போதிசத்வர் காசியருகே ஒரு சன்னியாசியாக பிறந்திருந்தார். அவர் தினமும் பிச்சை எடுத்து வருவார். ஒரு நாள் அவர் ஒரு யானைப்பாகனின் வீட்டிற்குப் போனார். அந்த யானைப் பாகன் யானைகளைப் பிடிப்பதிலும் அக்கலையை பிறருக்கு போதிப்பதிலும் மிகவும் திறமையானவனாக இருந்தான்.
 
சன்னியாசியைக் கண்ட யானைப் பாகன் அவரை மரியாதையுடன் வரவேற்று வீட்டிற்குள் அழைத்து போய் உணவு அளித்தான். பிறகு அவன் பணிவுடன் "தாங்கள் சிறிது நாள்களாவது என் வீட்டில் தங்கி இருந்து நான் அளிக்கும் உணவை ஏற்க வேண்டும்" என்று கூறினான். போதிசத்வரும் யானைப்பாகனின் வீட்டில் ஒரு வார காலம் இருந்தார். பின்னர் அங்கிருந்து கிளம்பும்போது அவர் யானைப்பாகனுக்கு நல்லாசிகள் கூறி விட்டு சென்றார். உயர்ந்த ஸ்தானத்திற்குக் கொண்டு போயின.
 
ஒரு நாளிரவு ஒரு விறகு வெட்டி ஒரு கோயில் மண்டபத்தில் படுத்துக் கொண்டிருந்தான். அதனருகே இருந்த மரத்தின் மீது சில கோழிகள் இருந்தன. மரத்தின் கீழ் ஏதோ சத்தம் ஏற்படுவது கேட்டு மரத்தின் மீதிருந்த ஒரு கோழிக் குஞ்சு பயந்து நடுங்கிக் கீழே வேறொரு கிளையிலிருந்த கோழிக் குஞ்சின் மீது விழுந்து அதன் தூக்கத்தைக் கலைத்தது.
 
தூக்கம் கலைந்த கோழிக் குஞ்சு "அடேயப்பா! உனக்கு அவ்வளவு கர்வமா? என் பெருமை தெரியாதா? என்னைச் சாப்பிடுபவனுக்குப் புதையல் கிடைக்குமே" என்றது. அது கேட்டு அதன் மீது விழுந்த கோழிக் குஞ்சு "என்னைச் சாப்பிடுபவன் ராஜாவாகி விடுவானே" என்றது.
இரு கோழிக் குஞ்சுகள் பேசியதை மண்டபத்தில் படுத்திருந்த விறகு வெட்டி கேட்டு விட்டான். அவன் மூளை வேகமாகச் செயல் படத் தொடங்கியது. அவன் `ஆகா! எனக்குத்தான் என்ன அதிர்ஷ்டம்! இங்கே ஒரு கோழிக் குஞ்சு உள்ளது. அதனைப் பிடித்துக் கொன்று நான் சாப்பிட்டு விட்டால் இந்நாட்டின் மன்னனாகி விடுவேன். இனிமேல் கஷ்டப்பட்டு விறகு வெட்டி விற்றுப் பிழைக்க வேண்டாம்' என எண்ணினான். அவன் சற்று நேரம் கழித்து மரத்தின் மீதேறினான். எந்தக் குஞ்சு தன்னைச் சாப்பிட்டால் ஒருவன் ராஜா ஆவான் என்று கூறியதோ அதனை அவன் பிடித்துக் கொண்டு கீழே இறங்கித் தன் வீட்டிற்குப் போனான்.
 
தன் மனைவியிடம் விஷயத்தைக் கூறி அவன் அக்குஞ்சை நன்கு வாட்டி சமைத்து வைக்கச் சொன்னான். அவளும் தான் ராணியாக போவதை நினைத்து உற்சாகத்துடன் அந்தக் கோழிக் குஞ்சைக் கொன்று நன்கு வாட்டி சமைத்து ஒரு சிறு கலயத்தில் எடுத்து வைத்தாள். அப்போது விறகு வெட்டி "நாம் இருவரும் இதனை எடுத்துக் கொண்டு ஆற்றிற்குப் போவோம். நன்கு குளித்து கடவுளை வணங்கி விட்டு நிதானமாக இதைச் சாப்பிடுவோம்" என்றான். அவளும் அவன் கூறியதற்கு சம்மதித்து கலயத்தை எடுத்துக் கொண்டு ஆற்றிற்குக் கிளம்பினாள்.
 
ஆற்றின் கரையில் அக்கலயத்தை அவர்கள் வைத்து விட்டு குளத்தில் குளித்தார்கள். அப்போது திடீரென ஆற்றில் வெள்ளம் வரவே விறகு வெட்டியும் அவன் மனைவியும் உயிர் தப்ப நீந்தி எங்கோ போய் கரை சேர்ந்தார்கள். அவர்கள் வைத்திருந்த கலயம் ஆற்று வெள்ளத்தில் மிதந்தவாறே போனது. விறகு வெட்டியோ "ஐயோ! இந்த நாட்டின் மன்னனாகும் அதிருஷ்டம் எனக்கு இல்லையே" எனத் தன் மனைவியிடம் கூறிக் கண்ணீர் வடித்தான்!
 
அதே சமயம் ஆற்றில் சிறிது தூரத்தில் போதிசத்வருக்கு உணவளித்த யானைப்பாகன் ஒரு யானையை ஆற்றில் குளிப்பாட்டிக் கொண்டு இருந்தான். அவன் கண்ணில் ஆற்றில் மிதந்து வரும் கலயம் தென்பட்டது. அவன் அதனைப் பிடித்து எடுத்தான்.
அதில் நன்கு பக்குவப்படுத்தப் பட்ட கோழிக் குஞ்சின் மாமிசம் இருப்பது கண்டு அதனை எடுத்து உடனேயே வாயில் போட்டு மென்று தின்று விட்டான்.
 
இது நடந்த மூன்றாவது நாள் காசி மீது அண்டை நாட்டு மன்னன் படை எடுத்து வந்தான். அது கண்டு காசி மன்னன் பயந்து போனான். அவன் இயல்பாகவே ஒரு தொடை நடுங்கி. போர் என்றால் பயந்து விடுவான். ஆகையால் அண்டை நாட்டு மன்னன் திடீரெனப் படை எடுத்து வந்ததும் தான் எப்படியாவது உயிர் தப்ப வேண்டுமென நினைத்து யானைப்பாகன் போல வேடம் பூண்டு யானைப்பாகனை அரசனின் ஆடைகளை உடுத்திக் கொள்ளச் சொன்னான். பிறகு அவனை யானை மீது உட்கார வைத்துத் தான் யானைப்பாகனின் இடத்தில் அமர்ந்தான். எதிரிகள் விட்ட அம்பு குறி தவறி யானைப்பாகனாக வேடம் பூண்ட அரசனின் மீது பட அவன் இறந்து விழுந்தான்.
 
யானை மீது அமர்ந்திருந்த யானைப்பாகனோ போர்களத்தில் இருந்து ஓடாமல் வீரர்களை உற்சாகப் படுத்தி போர் புரியச் சொன்னான். போர்களம் என்றால் நடுங்கும் மன்னனா இப்படி போர் புரிகிறான் என அனைவரும் நினைத்தனர். மன்னனாக இருந்த யானைப்பாகனும் வீராவேசத்துடன் போர் புரிந்தான். எதிரிப் படை பின் வாங்கி ஓடி விட்டது. அண்டை நாட்டு மன்னன் இறந்து போனான்.
 
போர் முடிந்ததும் யானை மீது இருந்தது உண்மையில் மன்னன் அல்ல என்றும் மன்னன் வேடத்தில் யானைப்பாகன்தான் இருந்தான் என்றும் எல்லாருக்கும் தெரிந்தது. இறந்த காசி மன்னனுக்கு குழந்தைகளே இல்லை. அதனால் யாவரும் "முன்பு இருந்த அரசனே தன் ஆடைகளை இந்த யானைப் பாகனுக்குக் கொடுத்ததால் இனி நம் மன்னன் இவனே" என்றனர்.
 
மந்திரியும் புரோகிதரும் சேனாதிபதியும் மக்கள் அபிப்பிராயப் படியே யானைப்பாகனை மன்னன் ஆக்கினார்கள். அவனும் நன்கு ஆட்சி புரியலானான்.
 

அறிவு வந்தது!

 
பிரம்மதத்தன் காசியை ஆண்ட போது போதிசத்வர் கோசல மன்னனாகப் பிறந்தார். அவருக்கு சத்தியசேனன் என்ற மகன் பிறந்தான். அவனுக்குத் தக்க வயது வந்ததும் தந்தை அவனுக்கு இளவரசுப் பட்டம் கட்டி சியாமளா என்ற அழகிய பெண்ணையும் மண முடித்து வைத்தார்.
 
ஆனால் சிறிது நாள்களுக்குப் பின் சத்தியசீலனைக் குஷ்டரோகம் என்ற பயங்கரப் பெரு வியாதி பிடித்தது. என்ன வைத்தியம் செய்தும் அது மறையவில்லை. எனவே எல்லார் கண்ணிலும் படாமல் தனியாகக் காட்டில் போய் ஒரு குடிசை போட்டுக் கொண்டு இருப்பது என சத்தியசேனன் தீர்மானித்துக் கொண்டான். அவன் தம் முடிவைத் தன் தந்தையிடமும் மனைவியிடமும் கூறினான். சியாமளாவோ தானும் அவனோடு காட்டிற்கு வருவதாக மிகவும் பிடிவாதமாகக் கூறினாள்.
 
யார் என்ன சொல்லியும் கேளாமல் சியாமளா தன் கணவனோடு காட்டிற்குச் சென்றாள். அங்கு வசதியான இடத்தில் குடிசை போடப்பட்டது. தினமும் அவள் தன் கணவனுக்குப் பணி விடைகள் செய்யலானாள்.
 
ஒரு நாள் காய்கறிகளைச் சேகரித்து விட்டு சற்று தூரத்தில் அழகாக விழுந்து கொண்டிருந்த அருவி நீரைப் பிடித்து வைத்து விட்டு அதில் குளித்து விட்டு வந்தாள். அப்போது அவள் மேனியில் புதிய மெருகு ஏறி மிகவும் கவர்ச்சிகரமாக விளங்கினாள்.
அவள் காய் கனிகளையும் நீரையும் எடுத்துக் கொண்டு திரும்புகையில் வழியில் ஒரு வேடன் அவளைப் பார்த்து அவளது அழகைக் கண்டு மதி இழந்து அவளது வழியை மறித்து `பெண்ணே! நீ மிக அழகாக இருக்கிறாய். என்னை மணந்து கொள்" என்றான்.அவளோ "முடியாது. வழியை விட்டு விலகு" எனவே அவன் அவளை பலவந்தமாகக் கட்டி இழுக்க முயன்றான். அப்போது அவள் குடுவையிலுள்ள நீரில் சிறிது எடுத்து அவன் மீது தெளிக்கவே அவன் அதே இடத்தில் விழுந்து துடிதுடித்து இறந்து போனான்.
 
வெகு நேரம் வெளியே போய் விட்டு வந்த தன் மனைவியிடம் சத்தியசேனன் "ஏன் இவ்வளவு நேரம்?" என்று கேட்கவே அவளும் நடந்ததை எல்லாம் கூறினாள்.
 
இதைக் கேட்டதும் சற்று நேரம் மௌனமாக இருந்து விட்டு அவளை நம்பாமல் "நீ உன் இஷ்டப்படி எங்கெங்கோ திரிகிறாய். உன்னைக் கட்டுப் படுத்த யாருமே இல்லை" என்றான்.
 
அது கேட்டு மனம் வருந்தி அவள் "நான் கொண்டு வந்துள்ள நீர் சக்தி வாய்ந்தது. என்பதும் நான் பதிவிரதை என்பதும் உண்மையானால் நான் உங்கள் மீது விடும் இந்த நீர் உங்களது பெரு வியாதியைப் போகட்டும்" என கூறி குடத்து நீரை அவன் மீது கொட்டி உடல் முழுவதும் நனையச் செய்தாள். மறு நிமிடமே அவனது பெரு வியாதி மறைந்து போயிற்று. அவன் தன் மனைவி கற்புக்கரசி என்று நினைத்து மகிழ்வதை விட தன் நோய் போனதற்காகவே மகிழ்ந்தான். உடனே அங்கிருந்து அவன் தலைநகருக்கு வந்தான்.
அவனது தந்தை அவனையும் சியாமளாவையும் வரவேற்று அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்.
 
தன் மகனின் நோய் எவ்வாறு குணமடைந்தது என்பதை அறிந்து கொண்ட கோசல மன்னர் தன் மகனை நாட்டின் மன்னனாக்கி சியாமளாவைப் பட்டத்து ராணியாக்கினார். பின்னர் அவர் துறவறம் மேற்கொண்டு கானகம் சென்றார். சத்தியசேனனோ சியாமளாவை மதிக்கவில்லை. அவன் தன் மற்ற மனைவிகளுடனேயே காலம் கழிக்கலானான். அரசனே ராணியை மதிக்காததால் மற்ற ராணிகளும் அவளை மதிக்கவில்லை. இதனால் மனம் நொந்து சியாமளா இளைத்துத் துரும்பானாள்.
 
ஒருமுறை துறவியான போதிசத்வர் தன் மகனையும் சியாமளாவையும் காண வந்தார். சியாமளாவின் நிலை கண்டு அவர் "ஏன் இப்படி இளைத்துத் துரும்பாகி விட்டாய்?" என்று கேட்டார். அவளும் "மனைவிக்குக் கணவன் மதிப்பு தராவிட்டால் அவளுக்கு சுகம் ஏது?" என்றாள். போதிசத்வர் நடந்ததையெல்லாம் அவளிடம் விவரமாக விசாரித்து அறிந்து கொண்டார். அவர் தன் மகன் சத்தியசேனனிடம் "மகனே! செய் நன்றி மறப்பது போன்ற மாபெரும் பாதகம் வேறெதுவும் இல்லை. உன் பயங்கர வியாதியின் காரணமாக நீ மனிதர்களின் மத்தியில் வாழ வெட்கப்பட்டு காட்டிற்குப் போனாய். அப்போது உன் மனைவி உன்னோடு இருந்து உனக்குப் பணி விடை புரிந்து முடிவில் உன் வியாதியையும் போக்கினாள். நீயோ மன்னனானதும் அவளை மதிக்கவில்லை. இது போன்ற நாடும் சுகபோகங்களும் யாருக்கு வேண்டுமானாலும் கிடைக்கும். ஆனால் கற்புக்கரசியான மனைவி ஒருவனுக்குக் கிடைக்க அவன் பாக்கியம் செய்திருக்க வேண்டும். எனவே சியாமளாவை நீ புறக்கணிக்காதே" என்று கூறினார்.
 
சத்தியசேனனின் அகக்கண்கள் திறந்தன. அவன் தன் மனைவியிடம் மன்னிப்பு கோரி அவளுக்கு முதலிடம் அளித்து கௌரவித்தான். அது முதல் மற்ற மனைவிகளும் அவளிடம் மரியாதை காட்டலானார்கள்.
 

தன்னலமற்றவன்

 
ஒரு முறை போதிசத்வர் காசி மன்னனாகப் பிறந்தார். அவரது ஆட்சியின் போது ஒரு எல்லைப் புறத்தில் சிலர் கலகம் செய்தார்கள். அவர்களை அடக்க மன்னரான போதிசத்வர் சிறு படையுடன் சென்றார். பலத்த போர் மூண்டது. அதில் மன்னர் காயமுற்றார். அவர் அமர்ந்திருந்த குதிரை மிரண்டு அவரோடு போர்க்களத்திலிருந்து ஓடிப் போயிற்று.
 
சற்று நேரத்திற்கெல்லாம் அக்குதிரை மன்னரை ஒரு சிறு கிராமத்திற்குக் கொண்டு போய்ச் சேர்ந்தது. வாள், கேடயம், கவசம் முதலியவற்றோடு குதிரை மீது அமர்ந்து வந்த மன்னரைப் பார்த்து அங்கு கூடி பேசிக் கொண்டிருந்த மக்கள் பயந்து எழுந்து ஓடினார்கள். ஆனால் அந்த கிராமத் தலைவன் மட்டும் ஓடாமல் நின்றான்.
 
அவன் மன்னரை அணுகி "நீ கலகக்காரனா அல்லது அரசர் பக்கத்தைச் சார்ந்தவனா?" என்று கேட்டான். மன்னரும் "நான் அரசர் பக்கமே" என்றார். அது கேட்டு கிராமத் தலைவன் திருப்தி அடைந்து "அப்படியானால் என் வீட்டிற்குப் போகலாம் வா" எனக் கூறி போதிசத்வரைத் தன் விருந்தாளியாகத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.
 
அவனும் அவன் மனைவியும் அவரை உபசரித்தார்கள். உண்ண உணவும் படுக்க வசதியும் செய்து கொடுத்து அவரது குதிரையையும் ஓரிடத்தில் கட்டி அதற்குப் புல்லும் கொள்ளும் கொடுத்தார்கள். மன்னர் நான்கு நாள்கள் அந்ததலைவனின் வீட்டிலேயே இருந்தார். கிராமத் தலைவன் அவரை அக்கரையுடன் கவனித்துக் கொண்டான்.
வேளா வேளைக்கு உணவு கொடுத்ததோடு அவர் படுகாய முற்றுக் கிடப்பது கண்டு உள்ளூர் வைத்தியரை அழைத்து வந்தார். போதிசத்வரும் வைத்தியர் கொடுத்த மருந்தை தன் காயங்களுக்குத் தடவிக் கொண்டார். இதற்குள் அவரது வீரர்கள் கலகக்காரர்களை அடக்கி விட்டார்கள்.
 
மன்னர் அத்தலைவனின் வீட்டில்இருந்து கிளம்பும் போது "ஐயா! நான் காசி நகரில் வாழ்பவன். என் வீடு கோட்டைக்குள் உள்ளது. எனக்கு ஒரு மனைவியும் இரு புதல்வர்களும் உள்ளனர். அங்கே வந்து கோட்டை வாசலில் "மாபெரும் குதிரை வீரர் எங்கே இருக்கிறார்" என்று கேட்டால் உம்மை என் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்து விடுவார்கள்.
 
நீர் என் ஊருக்கு வந்தால் என் விருந்தாளியாக எவ்வளவு காலம் வேண்டுமானாலும் தங்கலாம்" என்று கூறிச் சென்றார். மன்னர் தன் படைகள் இருக்கும் இடத்திற்குச் சென்று அவற்றோடு காசி நகருக்குத் திரும்பினார். அங்கு கோட்டைக் காவலாளியிடம் "யாராவது வந்து ‘மாபெரும் குதிரை வீரர் வீடு எங்கே உள்ளது?' எனக் கேட்டால் என்னிடம் அழைத்து வாருங்கள்" என கட்டளையிட்டார்.
 
அந்தக் கிராமத் தலைவன் தன்னைக் காண வருவான் என்று மன்னர் எதிர்பார்த்தார். ஆனால் அவன் பல மாதங்களாகியும் வரவில்லை. அவனை வரவழைப்பதற்காக மன்னர் மாதா மாதம் புதுப்புது வரியாக அந்தக் கிராமத்தின் மீது மட்டும் விதிக்கலானார்.
 
மன்னர் பல வரிகளைப் பல மாதங்களாக ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வந்தார். முதலில் அதன் சுமையை அதிகமாக உணராத அக்கிராமத்தவர் நாளாக ஆக வரியைத் தாங்க முடியாமல் சிரமப்பட்டார்கள். தம் மீது வரிச்சுமை அதிகமாகி வருவது கண்டு கிராமத்தவர் அந்த கிராமத் தலைவனிடம் "நீங்கள் போய் உங்கள் நண்பரான மாபெரும் குதிரை வீரர் உதவியால் மன்னரை பேட்டி கண்டு இந்த வரிகளைஎல்லாம் அகற்ற ஏற்பாடு செய்யுங்கள்.
 
என்ன காரணமோ தெரியவில்லை. நம் கிராமத்தின் மீது மட்டும்தான் இவ்வளவு வரிகள் விதிக்கப் பட்டுள்ளன. நீங்கள் உங்கள் நண்பரின் உதவியோடு மன்னரைக் கண்டு முறையிட்டாலே நம் துன்பங்கள் தீரும்" என்று கூறினார்கள். அத்தலைவனும் "நான் போகத்தயார்.
ஆனால் என் நண்பனைக் காண வெறும் கையுடனா போவது? அவர் வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்கள். ஏதாவது தின்பண்டம் கொண்டு செல்ல வேண்டாமா? அவருக்குப் பரிசளிக்க ஆடைகள் ஏதாவது வாங்கி எடுத்துச் செல்ல வேண்டாமா? இதற்குப் பணம் என்னிடம் இல்லையே" என்றான். ஊரார் பணம் திரட்டிக் கொடுக்கவே அத்தலைவனும் பல தின்பண்டங்களையும் பரிசுப் பொருள்களையும் எடுத்துக் கொண்டு காசிநகருக்குச் சென்றான்.
 
கோட்டை வாசலிலுள்ள காவலாளிகளிடம் அவன் "மாபெரும் குதிரை வீரனின் வீடு எங்கே?" என்று விசாரிக்கவே அவர்களும் அக்கிராமத் தலைவனை மரியாதையுடன் அழைத்துப் போய் மன்னரின் அந்தப்புரத்தில் மன்னர் முன் கொண்டு போய் விட்டார்கள். அது கண்டு முதலில் கிராமத் தலைவன் திடுக்கிட்டான். ஆனால் மறுநிமிடமே தன் வீட்டிற்கு வந்து தங்கியவர் மன்னரே எனக் கண்டு மகிழ்ந்து போனான். தான் வந்த வேலை மிகவும் எளிதாயிற்று எனவும் நினைத்து மகிழ்ச்சியடைந்தான்.
 
கிராமத் தலைவனும் தான் கொண்டு வந்த தின்பண்டங்களையும் ஆடைகளையும் காசி மன்னரிடம் கொடுத்தான். அவை யாவும் கிராமத்துப் பாணியில் இருந்தன. மன்னர் தின்பண்டங்களை தன் மனைவி-மக்கள்மற்றும் மந்திரிகளுக்கும் கொடுத்துத் தானும் உண்டார். தன் விருந்தினனாக அத்தலைவனை ஏற்று கௌரவித்தார்.
 
அத்தலைவன் தன்னைக் காண வந்தது அவனது கிராமத்தின் மீது விதிக்கப்பட்ட வரிகளை விலக்கி விடவேண்டும் என்று கோரவே என்பதை அறிந்த மன்னர் உடனே அந்த வரிகளை எல்லாம் ரத்து செய்யுமாறு மந்திரிகளுக்குக் கட்டளையிட்டார்.
 
பின்னர் தர்பாரைக் கூட்டி மன்னர் அக்கிராமத் தலைவனைக் கௌரவித்துத் தன் நாட்டில் பாதியை அவனுக்கு அளித்தார். அது கண்டு மந்திரிகளும் மற்ற உயர் அதிகாரிகளும் மனம் புழுங்கினார்கள்.
 
ஒரு கிராமத்தானுக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா எனப் பொறாமை கொண்டு அவர்கள் அரசகுமாரனிடம் போய் "மன்னர் உனக்கு அநீதி இழைத்து விட்டார். உனக்குச் சேர வேண்டிய நாட்டில் பாதியை யாரோ ஒரு கிராமத்தானுக்குக் கொடுத்து விட்டார். இதற்கு நீ எதிர்ப்பைத் தெரிவி" எனத் தூண்டி விட்டார்கள்.
 
அரசகுமாரனும் தன் தந்தையிடம் சென்று கிராமத்தானுக்கு அவர் பாதி நாட்டைக் கொடுப்பதைத் தான் எதிர்ப்பதாகக் கூறினான். மன்னரும் அது பற்றி தர்பாரில் விளக்கம் கூறுவதாகச் சொன்னார். அவர் தர்பாரில் அரசகுமாரனை அதே ஆட்சேபணையைக் கிளப்பச் செய்து "இந்த கிராமத் தலைவன் ஒருமுறை என் உயிரைக் காப்பாற்றியவன்.
 
நான் மன்னன் என்பதுகூட இவனுக்கு அப்போது தெரியாது. நான் ராஜ விசுவாசம் கொண்டவன் என அறிந்து எனக்குப் புகலிடம் கொடுத்து நாலைந்து நாள்கள் தன் வீட்டிலேயே தங்கச் செய்தான். நான் ஊர் திரும்புகையில் இவனை இங்கு வந்து என்னைப் பார்க்குமாறு கூறினேன்.
 
ஆனால் வரவில்லை. அதனால் அக்கிராமத்தின் மீது நான் பல வரிகளைப் போடவே, கிராம மக்களின் நன்மைக்காக அவ்வரிகளை விலக்கக் கோரி என்னைக் காண வந்தான். தன்னலமற்ற இந்த மனிதனுக்கு எதைக் கொடுத்தாலும் தகும்" என்றார்.
 
அது கேட்டு மந்திரிகளும் மற்ற உயர் அதிகாரிகளும் தலை குனிந்தனர். அரசகுமாரனுக்கும் தன் தவறு தெரிந்தது. தன் தந்தை செய்தது சரியே என எண்ணி மகிழ்ந்தான். அன்று முதல் மன்னரைப் போலவே அவனும் அக்கிராமத் தலைவனை மிகுந்த மரியாதையுடன் நடத்தி வந்தான்.
 

கனவுகளின் பொருள்

 
கோசல நாட்டு மன்னனான பிம்பிசாரன் ஒரு நாளிரவு பல விசித்திர பயங்கரக் கனவுகளைக் கண்டான். மறுநாள் பல பிராம்மணர்களை அழைத்து "நீங்கள் சகல சாஸ்திரங்களைக் கற்றவர்கள். நான் கண்ட கனவுகளின் பொருள் என்ன? அதனால் ஏற்படும் பலன் என்ன?" என்று கேட்டான்.
 
பிராம்மணர்களும் மன்னன் கண்ட கனவுகளைக் கேட்டனர். இதுதான் பணம் பறிக்கத் தக்க தருணம் என அவர்கள் எண்ணினர், "அரசே! இக்கனவுகளால் உங்களுக்கும் உங்கள் வம்சத்திற்கும் உங்கள் நாட்டிற்கும் விரைவில் கஷ்டம் வரப் போகிறது. ஆனால் அதைத் தடுக்கப் பரிகாரம் செய்தால் போதும். நாட்டில் நான்கு பாதைகள் கூடும் இடங்களில் எல்லாம் யாகங்கள் நடத்தி பிராம்மணர்களுக்கு அவர்கள் மனம் குளிர தானமும் தட்சிணையும் கொடுத்தால் எல்லாம் சரியாய்ப் போய்விடும்" என்றார்கள்.
 
அதைக் கேட்ட மன்னன் "சரி. மந்திரியிடம் கூறி அதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம்" என்றான். தன் பொக்கிஷ அதிகாரியிடமும் தானதர்மத்திற்காகப் பணம் தனியாக எடுத்து வைக்கவும் கட்டளையிட்டான். இது ராணிக்குத் தெரிந்தது. பிராம்மணர்களின் பேராசையைப் புரிந்து கொண்ட அவள் மன்னனிடம் "நீங்கள் இவர்கள் சொல்வதை வேதவாக்காக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
 
இவர்களுக்கு அரைகுறை அறிவே உள்ளது. சுயநலம் காரணமாக இப்படி தான தர்மம் செய்யச் சொல்லி அவற்றை அடைய விரும்புகிறார்கள். ஜைதவனத்தில் புத்தர்பிரான் இருக்கிறார். அவரிடம் உங்கள் கனவுகளைக் கூறி அவற்றின் பலன்கள் பற்றிக் கேளுங்கள். அவர் உங்களுக்கு விவரமாக எல்லாவற்றையும் கூறுவார்" என்றாள்.
பிம்பிசாரனும் "நானே நேரடியாக ஜைதவனத்திற்குப் போய் அவரை தரிசித்து நம் அரண்மனையில் பிகைஷ ஏற்க வருமாறு வேண்டுகிறேன்" எனக்கூறி ஜைதவனத்திற்குச் சென்றான். புத்தரும், மன்னனின் அழைப்பை ஏற்று அவனது அரண்மனைக்கு வந்தார்.
 
மன்னனும் அவருக்குத் தக்கபடி உபசரித்து "ஐயனே, நான் சில கனவுகளைக் கண்டேன். அவற்றின் பலன்கள் என்ன என்று சொல்ல வேண்டும்" என வேண்டினான். புத்தரும் "நீ கண்ட கனவுகளைச் சொல். அவற்றின் பலன்களைக் கூறுகிறேன்" என்றார்.
 
பிம்பிசாரனும் "முதலாவது கனவில் நான்கு காளைகள் அரண்மனையை நோக்கி ஓடி வந்தன. அவை சண்டை போடுவதைக் கண்டு களிக்கலாம் என மக்கள் நினைத்துக் கூடினர். ஆனால் அவைகள் சண்டை போடாமல் நான்கு திசைகளில் பிரிந்து சென்றன. இதன் பொருள் என்னவோ? விளக்கமாக எனக்கு கூறுங்கள்" எனக் கேட்டான்.
 
புத்தரும் "மன்னா! இது உனக்கும் தற்கால நடப்பிற்கும் சம்மந்தப்பட்டதல்ல. பிற்காலத்தில் அரசர்கள் பாவங்களைப் புரிவார்கள். அப்போது கருமேகங்கள் வந்து மழை பெய்யப் போவது போல பிரமையை ஏற்படுத்திவிட்டு பெய்யாமல் போய்விடும். அவற்றின் மீது மக்கள் கொண்ட நம்பிக்கை ஏமாற்றமாக முடியும்" என்றார்.
 
மன்னனும் "அடுத்த கனவில் மரம் செடிகள் அதிகம் உயராமல் குட்டையாகவே இருந்து மலர்ந்து காய்களைக் கொடுப்பதாகக் கண்டேன். இதன் ரகசியம் என்னவோ?" என்று கேட்டான்.
 
புத்தரும் "நான் முன்பே கூறியபடி வருங்காலத்தில் பாவங்கள் அதிகரிக்க பெண்கள் சிறுமிகளாக இருக்கையிலேயே மணம் புரிந்து கொண்டு பெரியவர்களாகுமுன்பே குழந்தைகளைப் பெற்று விடுவார்கள். இதுவே அக்கனவின் பொருள்" என்றார். "பசுமாடுகள் கன்றுகளிடமிருந்து பால் குடிப்பதாக இன்னொரு கனவையும் நான் கண்டேன்.
இதன் பொருள் என்னவோ?" என மன்னன் கூறவே புத்தரும் "கிழவர்கள் இளைஞர்களை நம்பி இருக்க வேண்டி வரும் என்பதே பொருள்" என்றார். "அடுத்து குடியானவர்கள் ஏர்களில் உள்ள முரட்டு எருதுகளை அவிழ்த்துவிட்டு அவற்றிற்குப் பதிலாகக் கன்றுக் குட்டிகளைக் கட்டுவதாகக் கனவு கண்டேன்" என மன்னன் கூறினான்.
 
புத்தரும் "நான் கூறிய பாவச் செயல் புரியும் மன்னர்கள் நல்ல மந்திரிகளைப் பதவியிலிருந்து விலக்கிவிட்டு அனுபவஞானமே இல்லாத இளைஞர்களை அப்பதவிகளில் அமர்த்துவார்கள். இதுதான் அக்கனவின் பொருள்" என்றார்.
 
"ஒருவன் கம்பளம் நேய்து கொண்டே இருக்க நேய்யாது கீழே கிடந்த பாகத்தை பெண் நரிகள் கடித்துத் தின்பதாக ஒரு கனவு கண்டேன்" என மன்னன் கூறவே புத்தரும் "வருங்காலத்தில் பாவம் அதிகரிக்கும். கணவன் சிரமப்பட்டு சம்பாதித்ததை மனைவி வீண் செலவு செய்வாள் என்பது பொருளாகும்" என்றார்.
 
"இரட்டைத் தலைக் குதிரை ஒன்று கொள்ளை தன் இருவாய்களாலும் சாப்பிடுவது போல ஒரு கனவு கண்டேன்" என மன்னன் சொல்லவே புத்தரும் "அரசாங்க வருமானத்தில் வருங்காலத்தில் அதிகாரிகள் சம்பளமும் பெற்றுக் கொண்டு லஞ்சமும் வாங்குவார்கள் என்பது இதன் பொருள்" என்றார்.
 
"அரண்மனை முன் ஒரு பெரிய குழியும் பல சிறிய குழிகள் இருப்பது போலவும் பெரிய குழியில் மட்டும் வழியவழியத் தண்ணீரை மக்கள் விடுவதையும் சிறிய குழிகளை கவனிக்காமல் இருப்பது போலவும் கனவு கண்டேன்" என்றான் மன்னன். புத்தரும் "மக்கள் சிரமப்பட்டு சம்பாதிப்பதை வருங்காலத்தில் அரசாங்க பொக்கிஷத்தில் நிரப்புவார்கள்.
 
ஆனால் மக்கள் வசதி எதுவும் பெறாமல் தம் வீடுகளில் பணம் இல்லாமல் தவிப்பார்கள்" என்றார். "ஒரு பாத்திரத்தில் சாதம் எல்லாப் பக்கத்திலும் ஒரே மாதிரி வேகாமல் ஒரு பக்கம் நன்கு வந்தும் வேறு பல பக்கங்களிலும் வேகாமல் இருப்பது போலவும் கண்டேன்" என பிம்பிசாரன் கூறினார். அதற்கு புத்தபிரான், "இது வருங்கால விவசாயம் பற்றியது.
நாட்டில் ஓரிடத்தில் நல்ல பயிர் விளைச்சலும் மற்ற பகுதிகளில் அறைகுறையான விளைச்சலுமே இருக்கும் எனக் காட்டுகிறது" என்று புத்தர் கூறினார். "மற்றொரு கனவு. அதில் நல்ல விலையுயர்ந்த சந்தனத்தைச் சிலர் தெருவில் விற்றுக் கொண்டு போவது போலக் கண்டேன்" என மன்னன் கூறவே புத்தரும்" வருங்காலத்தில் சில கயவர்கள் புனிதமான உபதேசங்களைத் தம் இஷ்டம் போலக்கூறி மிகவும் கேவலமான போக வாழ்க்கையை அடைவார்கள் என்பதே இதன் பொருள்" என்றார்.
 
"இன்னும் சில கனவுகள் பாறைகள் நீரில் மிதப்பது போலவும் அன்னப் பறவைகளின் கூட்டத்தில் காகம் சேர்ந்து நடப்பது போலவும் ஆடுகள் புலிகளை அடித்துக் கொன்று தின்பதும் அவற்றைக் கண்டு ஓநாய்கள் பயந்து நடுங்குவதும் நடப்பது போலக் கண்டேன். இவை என்ன கெடுதல்களைக் குறிக்கின்றனவோ?" என்று பிம்பிசாரன் பணிவுடன் கேட்டான்.
 
புத்தரும் "இவையெல்லாம் வருங்காலத்தில் விபŽத சம்பவங்கள் நிகழும் என்பதைக் காட்டுகின்றன. இவை உன் காலத்தில் ஏற்படாது. அது பற்றிக் கவலைப்பட வேண்டாம். வருங்காலத்தில் தர்மம் சீர்குலைந்து அதர்மம் மேலோங்க அப்போது நல்லவர்களெல்லாம் துன்பப்பட, கெட்டவர்கள் தலை நிமிர்ந்து நடப்பார்கள்.
 
நல்லவை நசிந்து தீயவை மேலோங்கி வரும். இதனைத் தான் நீ கூறியவை குறிக்கின்றன. இவை யாவும் நாட்டில் பாவம் அதிகரிக்கும் போது ஏற்படுபவை. நீ புண்ணியகாரியங்களைச் செய்து தர்மவழியில் நடந்து வருகிறாய். தொடர்ந்து இப்படியே இரு. உனக்கு எவ்வித பயமும் இல்லை உன் நாடும் சுபீட்சமாக இருக்கும்" என்றார்.
 
பிம்பிசாரனின் சந்தேகங்கள் தீர்ந்தன. அவன் மனத்தில் அநாவசியமாக பிராம்மணர்கள் தோற்றுவித்த பயம் ஒழிந்தது. எனவே அவன் யாகங்கள் செய்ய ஏற்பாடுகள் செய்வதை நிறுத்தி விட்டான். புத்தரது உபதேசங்களை ஏற்று அவரைத் தக்கபடி உபசரித்து அவரை ஜைதவனத்திற்குக் கொண்டு போய் விட்டு வந்தான்.
 

யார் வேகம் அதிகம்?

 
பிரம்மதத்தன் காசியை ஆண்டபோது ஒரு காலத்தில் சித்திர கூடமலைப் பகுதியில் தொண்ணூறுஆயிரம் அன்னப்பறவைகள் வாழ்ந்து வந்தன. அப்போது போதிசத்வர் ஒரு அன்னப்பறவையாகப் பிறந்து அன்னப்பறவைகளின் கூட்டத்திற்குத் தலைவனாக இருந்தார்.
 
ஒரு நாள் அந்தத் தலைமை அன்னம் தன் கூட்டத்தோடு காசி நகரை அடைந்தது. அந்த அழகிய அன்னப்பறவைகளைக் கண்டு அந்த நாடே வியப்பில் மூழ்கியது. காசி மன்னனும் அந்த அன்னங்களைக் கண்டு அதிசயம் கொண்டான். அவனைத் தலைமை அன்னம் பெரியதும் கவர்ந்தது.
 
அதன் அழகிய தோற்றத்தையும் கம்பீர நடையையும் கண்டு அவன் மலர்களையும் வாசனைத் திரவியங்களையும் தன் வேலையாட்களை எடுத்துவரச் சொல்லி அந்தத் தலைமை அன்னத்திற்கு நல்ல வரவேற்பை அளித்தான்.
 
அந்த அன்னமும் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை ஏற்று அந்த நாட்டில் தன் கூட்டத்தோடு சில நாள்கள் இருப்பதாகக் கூறியது. சிறிது நாள்களானதும் அன்னப் பறவைகள் காசியை விட்டுத் தம் இருப்பிடமாகிய சித்திரகூட பர்வதத்திற்குச் சென்றுவிட்டன. தலைமை அன்னமும் போய்விட்டதால் காசி மன்னன் மீண்டும் அது எப்போது வரும் என எதிர்பார்த்து இருக்கலானான்.
 
ஒருநாள் இரு அன்னக் குஞ்சுகள் தலைமை அன்னத்திடம் போய் "அரசே! நாங்கள் இருவரும் சூரியனோடு போட்டிபோட ஆசைப்படுகிறோம். அனுமதி கொடுக்கிறீர்களா?" என்று கேட்டன.
போதிசத்வரான தலைமை அன்னமும் "குழந்தைகளா! நீங்களா சூரியனுடன் போட்டி போடப் போகிறீர்கள்? அவர் எவ்வளவு வேகமாகச் செல்கிறார் என்பது உங்களுக்கு தெரியாது. அறியாமையால் இப்படிப் போட்டி போடப் போவதாகக் கூறுகிறீர்கள். இதில் உங்களுக்குத்தான் ஆபத்து. உயிருக்கேகூட அபாயம் ஏற்படலாம். எனவே உங்களது இந்த எண்ணத்தைக் கைவிட்டுவிடுங்கள்" என்றது.
 
தலைமை அன்னப்பறவை கூறியது அந்தக் குஞ்சு பறவைகளுக்கு பிடிக்கவில்லை. அப்போதைக்கு அவை பேசாமல் சென்றன. ஆனால் இரண்டொரு நாள்களுக்குப் பிறகு அவை மீண்டும் தம் விருப்பத்தைத் தலைமை அன்னத்திடம் கூறின. அப்போதும் தலைமை அன்னம் முன்பு கூறியது போல் குஞ்சுகளுக்கு அறிவுரை கூறி அனுப்பிவிட்டது. இனித் தலைமை அன்னத்திடம் கேட்பதில்பயனில்லை என அந்த இரு அன்னக்குஞ்சுகளும் தீர்மானித்துத் தம் தலைவனிடம் சொல்லாமலேயே ஒரு நாள் பறந்து சென்று மலைச் சிகரத்தின் மீது பறந்துபோய் உட்கார்ந்து கொண்டன. அங்கிருந்து சூரியனோடு போட்டி போட்டு ஓட அவை தீர்மானித்துக் கொண்டன.
 
வழக்கம் போலத் தலைமை அன்னம் அன்னப்பறவைகளெல்லாம் உள்ளனவா என்று சரிபார்த்தபோது இரு குஞ்சுகள் இல்லாததை கவனித்தது. அவை சூரியனோடு போட்டி போடத்தான் போய் இருக்கின்றன என ஊகித்து அது மிகவும் கவலை கொண்டது.
 
உடனே தலைமை அன்னம் அவற்றைத்தேடி பறந்து சென்றது. சிறிது தூரம் பறந்ததும் அவை மலைச் சிகரத்தின்மீது உள்ளது என்று கண்டு அவற்றிற்கு தெரியாமல் அவற்றின் பக்கமாக ஒரு மறைவிடத்தில் பதுங்கி இருந்தது.
 
சூரியோதயம் ஆகியது. சூரியன் வெளிவந்ததும் அதோடு போட்டி போட்டுக் கொண்டு அந்த இரு குஞ்சுகளும் பறந்தன. அவற்றின் பின்னாலேயே தலைமை அன்னமும் பறந்து சென்றது.
 
அன்னக்குஞ்சுகளில் சிறியது உச்சிவேளைவரை பறந்தது. ஆனால் அதன் இறகுகள் கருகி அது களைத்துப் போய் கீழே விழுந்தது. சட்டெனத் தலைமை அன்னம் அதை அணுகவே அது "அரசே! என்னால் போட்டி போட முடியவில்லை. நான் தோற்றுவிட்டேன்" என்றது. தலைமை அன்னமும் "நீ கவலைப்படாதே. நான் பார்த்துக் கொள்கிறேன்" எனக்கூறி அந்தக் குஞ்சை தன்னுடன் சேர்த்துக் கொண்டு மீண்டும் உயரப்பறந்து சென்றது.
சூரியனோடு போட்டி போட்ட மற்ற குஞ்சு உச்சிவேளைக்குச் சற்று நேரத்திற்குப் பிறகு களைத்துப் போயிற்று அதன் இறகுகளும் கருகிப்போகவே அதுவும் கீழே விழுந்தது. அதனையும் தலைமை அன்னம் எடுத்துப்போய் சித்திரகூட பர்வதத்தில் சேர்த்தது.
 
தனது கூட்டத்தில் இரு பறவைகள் சூரியனோடு போட்டி போட்டுத் தோற்றதை அந்தத் தலைமை அன்னம் தன் கூட்டத்திற்கே பெருத்த அவமானமாகக் கருதி அதைப் போக்கத் தீர்மானித்துக் கொண்டது. அதனால் அதுவே சூரியனோடு போட்டி போட உயரப்பறந்தது.
 
சற்று நேரத்தில் அது சூரியனுக்குச் சமமான இடத்தை அடைந்தது. பின்னர் சில வினாடிகளில் அது மேலும் வேகமாகப் பறந்து சூரியனையும் முந்திக் கொண்டு பறந்தது. இன்னமும் ஏன் சூரியனோடு பந்தயம் போட வேண்டும் இப்போதுதான் வெற்றி பெற்றாகிவிட்டதே என்ற திருப்தியுடன் அது ஒரு வட்டம் அடித்து விட்டுக் கீழே இறங்கி காசி நகரை அடைந்தது.
 
எப்போது தலைமை அன்னம் வரும் என வழிமேல் விழிவைத்துக் காத்துக் கொண்டிருந்த காசி மன்னன் தலைமை அன்னத்தைக் கண்டதும் மிகவும் மகிழ்ந்து போனான். அந்த அன்னப் பறவையைத் தன் அரியாசனத்தில் அமர்த்தி தங்கத் தட்டில் பாயசம், பானகம் போன்ற இனிய பானங்கள் நிறைந்த கிண்ணிகளை அதன் முன்வைத்து அதனை ஏற்குமாறு வேண்டினான். தலைமை அன்னப்பறவை அவற்றை மிகவும் ரசித்தபடி குடித்தபின் மன்னன் அதன்யோக க்ஷேமம் பற்றி விசாரித்தான்.
 
அந்த அன்னப் பறவையும் தான் அங்கு எப்படி வந்து சேர்ந்தது என்பதை மிகவும் விவரமாகக் கூறியது. அதைக் கேட்ட மன்னனும் "ஆகா! சூரியனுடன் போட்டி போட்டு வெற்றி பெற்ற உன் சக்திதான் எப்படிப்பட்டது!" என ஆச்சரியப்பட்டவாறே கூறினான்.
அந்த அன்னமும் தன் சக்தியை அந்த மன்னனுக்குக் காட்ட நினைத்து "மன்னா! உன் நாட்டில் நான்கு சிறந்த வில்லாளிகளைக் கொண்டுவா. அவர்கள் ஒரு மேடையின் நான்கு மூலைகளில் நின்று ஆளுக்கு ஒரு திசையில் மிகவும் வேகமாக அம்புகளை எய்யட்டும். நான் அந்த அம்புகளை ஒவ்வொன்றாக எடுத்து வருகிறேன். நான் செல்வதை உங்களால் காண முடியாது ஆனால் என் கழுத்தில் கட்டப்பட்ட மணியின் ஓசையைக் கொண்டு நான் எந்தப் பக்கமாகச் சென்றேன் என நீங்கள் அறிந்து கொள்ளலாம்" என்றது.
 
மன்னனும் தலைமை அன்னம் கூறியது போல ஏற்பாடு செய்ய வில்லாளிகள் அம்புகளை எய்தனர். அந்த அன்னப்பறவை பறந்து போய் சில விநாடிகளில் அந்த நான்கு அம்புகளையும் ஒவ்வொன்றாக எடுத்து வந்து போட்டது. அதைக் கண்ட மன்னன் திகைக்கவே அன்னமும் "இது நான் சர்வசாதாரணமாகப் பறக்கும் வேகமே" என்றது.
 
மன்னனும் "அன்னப்பறவைகளின் மன்னனே! உன் வேகத்தை நாங்கள் பார்த்தும் கேட்டும் அறிந்தோம். உன்னை விட வேகமாகச் செல்லக்கூடியது வேறு ஏதாவது இருக்கிறதா?" என்று கேட்டான்.
 
போதிசத்வரான அன்னமும் "ஏன் இல்லாமல்? அது தான் கால சர்ப்பம் என்பது. அது வெகுவேகமாகப் போய் எவ்வளவு ஜீவராசிகளை அழிக்கிறது தெரியுமா? அதை வெல்லக்கூடியவன் யாருமே இல்லை. எனவே இதனை அறிந்தவன் எதற்கும் பயப்படத்தேவையில்லை.
 
நீதியாய், நேர்மையாய் நல்லவிதமாய் நீ ஆட்சிபுரிந்து வரும் வரையில் நீ யாரிடமும் பயப்படத் தேவையே இல்லை எனவே நீ நல்லவிதமாய் ஆட்சிபுரிந்துவா" என அறிவுரை கூறியது. காசி மன்னனும் போதிசத்வரின் அறிவுரைகளை ஏற்று ஆட்சிபுரிந்து பேரும் புகழும் பெற்றான்.
 

மந்திரத்தால் ஏற்பட்ட பேரிழப்பு!

 
பிரம்மதத்தன் காசியை ஆண்டகாலத்தில், ஒரு கிராமத்தில் பிராமணர் ஒருவர் இருந்தார். அவர் வேதபம் என்றொரு மந்திரத்தைக் கற்றிருந்தார். எல்லாக் கிரகங்களும் ஒன்றுகூடும் நாளில் அந்த மந்திரத்தை உச்சரித்தால் ஆகாயத்திலிருந்து தங்கம், வெள்ளி, முத்து, பவளம், ரத்தினம், மாணிக்கம் போன்ற விலை உயர்ந்த பொருள்கள் மழைபோலக் கொட்டும்.
 
அந்த அதிசய மந்திரத்தைக் கற்ற பிராமணர் தன் சக்தியால் கர்வம் கொண்டிருந்தார். கிரகங்கள் எல்லாம் ஒன்று கூடும் நாளன்று மந்திரத்தை உச்சரித்து நவரத்தின மழை பெய்யச் செய்து, அவற்றைச் சேகரித்து வைத்துக் கொண்டு விட்டால் உலகில் தன்னை யாராலும் எதுவும் செய்துவிட முடியாது என எண்ணி, தலைகால் புரியாமல் துள்ளிக் கொண்டிருந்தார்.
 
இந்த மந்திர சக்திவாய்ந்த பிராமணரிடம் போதிசத்வர் சீடராக இருந்து வந்தார். குருவிற்கும் அந்த சீடனை மிகவும் பிடித்துப் போயிற்று. ஒருநாள் அவர் தம் சீடனோடு ஒரு காட்டுப் பகுதிக்குச் சென்றார்.
 
அந்தக் காட்டில் ஐந்நூறு திருடர்கள் இருந்தனர். அவர்கள் குருவான பிராமணரையும் சீடரான போதிசத்வரையும் வழி மறித்தனர். அந்தத் திருடர்கள் வழிப்போக்கர்களிடம் பணம் இருந்தால் பறித்துக் கொண்டு விட்டு விடுவார்கள். அப்படி இல்லாவிட்டால் ஒருவனை ஊருக்கு அனுப்பி பணம் கொண்டு வரச்சொல்வார்கள். அவர்கள் பணம் கொண்டு வந்தபின் தான் மற்றவர்களை விடுவிப்பார்கள். அந்த குருவிடமும் சீடனிடமும் பணம் இல்லாததால் அவர்கள் குருவை நிறுத்தி வைத்துக் கொண்டு சீடனான போதிசத்வரைப் பணம் கொண்டு வரச் சொன்னார்கள்.
போதிசத்வர் போகும்முன் தம் குருவிடம் "குருவே! இன்றிரவு பன்னிரெண்டு மணிக்கு எல்லா கிரகங்களும் கூடும் வேளை வருகிறது. நீங்கள் உங்கள் வேதப மந்திரத்தை உச்சரிக்காதீர்கள். அதனால் உங்களுக்கும் கெடுதல். இந்தத் திருடர்களுக்கும் கெடுதல்" எனக்கூறி எச்சரித்துவிட்டுப் போனார். இரவானது.
 
திருடர்கள் அந்தப் பிராமணனைக் கட்டிப் போட்டார்கள். அன்று பௌர்ணமி. நிலா பால் போலக் காய்ந்து கொண்டிருந்தது. பிராமணர் ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தார். எல்லா கிரகங்களும் ஒன்று சேரும் வேளை வரலாயிற்று.
 
அப்போது அவர் மனத்தில் வேதப மந்திரத்தைச் சொல்லி விலை மதிப்பற்ற பொருள்களை வரவழைத்து திருடர்களுக்கு அவர் கேட்ட தொகையைக் கொடுத்துவிட்டுத் தாம் விடுதலை பெறலாம் என நினைத்தார். ஆகையால் அவர் அங்கே கூடி இருந்தத் திருடர்களிடம், "என்னைப் பணத்திற்காகத் தானே கட்டி வைத்திருக்கிறீர்கள்? நான் ஒரு நோடியில் தங்கம் வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருள்களை மழை போலப் பொழியச் செய்கிறேன். நீங்கள் உங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அதை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அப்படிச் செய்ய நான் குளித்து விட்டு ஒரு மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். எனவே என் கட்டை அவிழ்த்துவிட்டால் உங்களுக்கு நீங்கள் எதிர்பார்ப்பதைவிட அதிகப் பணமே கிடைக்கும்" என்றார்.
 
அதைக் கேட்ட திருடர்கள் சிரித்தார்கள். பிறகு அவர்கள் "இப்படி எல்லாம் சொல்லி எங்களிடமிருந்து தப்பி ஓடிவிடலாம் என்று நினைக்கிறாயா? அதெல்லாம் முடியாது" என்றனர். பிராமணரோ "நான் தப்பிப்போக முயலமாட்டேன்.
நான் இப்போது உங்களிடம் சொன்னது உண்மை. நான் கற்ற மந்திரத்தைப் பயன்படுத்தியாக வேண்டும். அதனால் உங்களுக்குத்தான் அதிக நன்மை. நீங்கள் என் சீடனைக் கொண்டு வரச் சொன்ன பணத்தைவிடப் பன்மடங்கு உங்களுக்குக் கிடைக்கும்" என்றார்.
 
அவர்களும் அந்த அதிசயத்தைப் பார்க்கலாம் என நினைத்து பிராமணரின் கட்டுகளை அவிழ்த்தார்கள். அவரும் குளித்துவிட்டு ஓரிடத்தில் அமர்ந்து வேதப மந்திரத்தை உச்சரித்தார். ஆகாயத்திலிருந்து பொன்னும் வெள்ளியும் ரத்தினங்களுமாக மழைபோலப் பெய்து குவிந்தன. திருடர்கள் எல்லாவற்றையும் எடுத்து மூட்டைகளாக கட்டி எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள். அவர்களுக்குச் சற்றுப் பின்னாலேயே பிராமணரும் நடந்தார்.
 
சிறிது தூரம் போனதும் மற்றொரு திருடர் கூட்டம் அத்திருடர்களை மடக்கி நிறுத்தியது. அப்போது அத்திருடர்கள் புதிய திருடர் கூட்டத்திடம் "பணம் வேண்டுமானால் இதோ எங்கள் பின்னால் வரும் பிராமணனைப் பிடித்துக் கொள்ளுங்கள். அவன் தெரிந்து வைத்துள்ள மந்திரத்தை உச்சரித்தால் தங்கம், வைரம், ரத்தினம் என்று ஆகாயத்திலிருந்து கொட்டுகிறது. இதெல்லாம் அவன் எங்களுக்கு அவ்வாறு வரவழைத்துக் கொடுத்ததுதான்" எனக் கூறித் தாம் எடுத்துச் செல்லும் விலையுயர்ந்த பொருள்களை அவர்களிடம் காட்டிவிட்டுப் போனார்கள்.
 
உடனே அந்தத் திருடர் கூட்டம் பிராமணனைப் பிடித்துக் கொண்டு "எங்களுக்கும் அத்திருடர்களுக்குக் கொடுத்ததுபோல வரவழைத்துக் கொடு" என்றார்கள்.
 
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பிராமணர் "அந்தப் பணத்தை நான் மந்திர சக்தியால் வரவழைத்துக் கொடுத்தது உண்மையே. ஆனால் எல்லாக்கிரகங்களும் ஒன்று கூடும் வேளையில் அந்த மந்திரத்தை உச்சரித்தால்தான் அவ்வாறு கிடைக்கும். அந்த மாதிரி எல்லா கிரகங்களும் வருடத்திற்கு ஒருமுறை தான் கூடும்" என்றார். அத்திருடர்கள் அவ்வாறு அந்த பிராமணர் கூறியதை நம்பவில்லை.
தங்களுக்குப் பணம் வரவழைத்துக் கொடுக்காமல் அவர் ஏமாற்ற முயல்கிறார் என எண்ணிவிட்டார்கள். அதனால் அவர்கள் "அதெல்லாம் தெரியாது. எங்களுக்கு இப்போதே அவர்களுக்குக் கிடைத்தது போல நவரத்தினங்கள் கிடைத்தாக வேண்டும் என்றார்கள்.
 
ஆனால் பிராமணரோ "இன்று முடியாதே. இன்று கிரகங்கள் கூடியபோது மந்திரத்தை உச்சரித்து விலையுயர்ந்த பொருள்களை மழை போலப் பெய்யச் செய்யச் செய்து அவர்களுக்கு நவரத்தினங்கள் கிடைக்கச் செய்துவிட்டேன். இனி அடுத்த வருடம் கிரகங்கள் ஒன்று கூடும் நாளன்று தான் இவ்வாறு செய்ய முடியும்" என்றார்.
 
திருடர்கள் அவர் சொல்வதை நம்பவில்லை. அவர்கள் அந்தப் பிராமணரை இரு துண்டுகளாக வெட்டி ஒரு மரத்தில் தொங்கப் போட்டனர். பிறகு தம்மிடமிருந்து தப்பிச் சென்ற திருடர்களைப் பிடித்துத் தாக்கினார்கள். அவர்களை எல்லாம் கொன்று அவர்கள் தூக்கிவந்த பணத்தையும் வைர ரத்தினங்களையும் எடுத்துக் கொண்டனர்.
 
பணம் நிறைய வந்தாலே பல சிக்கல்களும் அபாயங்களும் கூடவே வரத்தானே செய்யும். திருடர்கள் ஏராளமான பணம் பெற்றதும் அவர்களிடையேயும் ஆசையும் சுயநலமும் அதிகரித்துவிட்டது. அதனால் அந்தக் கூட்டத்திலும் இரு பிரிவுகள் ஏற்பட்டு தமக்குள் சண்டை போட்டுக் கொண்டனர். சண்டை மிகவும் முற்றிப்போய் அவர்கள் ஒருவரையொருவர் வெட்டி வீழ்த்தவே முடிவில் இருவரே மிஞ்சினார்கள். அவர்கள் அந்தப் பணத்தையும் இரத்தினங்களையும் காட்டில் ஓரிடத்தில் புதைத்து வைத்தனர். ஒருவன் அதற்குக் காவலாக நிற்க மற்றவன் ஊருக்குள் போய் சாப்பிட ஏதாவது வாங்கி வருவதாகக் கூறிச் சென்றான்.
 
நகருக்குச் சென்றவன் கிடைத்த பொருளைத் தான் ஒருவனே அடைய வேண்டும் என நினைத்து, மற்றவனுக்குத் தான் வாங்கி வந்த உணவில் விஷத்தைக் கலந்து கொண்டு வந்தான்.
இதுபோல பணத்தைக் காவல் காத்தவன் தானே எல்லாவற்றையும் அடைய எண்ணி, மற்றவன் வந்ததும் அவன் மீது திடீரெனப் பாய்ந்து தன் கத்தியால் குத்திக் கொன்றான். அதன்பிறகு அவன் கொண்டு வந்த உணவைச் சாப்பிட்டான். சாப்பிட்டவுடன் விஷம் தலைக்கு ஏறி அவன் மறு நிமிடமே இறந்து விழுந்தான்.
 
இப்படியாக இரு திருடர் கூட்டத்தில் உள்ள அனைவரும், பிராமணரும் இறந்து போயினர். இரண்டு நாட்களுக்குப் பிறகு போதிசத்வர் திருடர்கள் கேட்ட பணத்தை எடுத்துக் கொண்டு தம் குருவை விடுவித்து அழைத்துப் போக வந்தார்.
 
அங்கு ஒரு மரத்தில் தம் குருவின் உடல் வெட்டப்பட்டு தொங்கிக் கொண்டிருப்பதை அவர் கண்டு "குருவே! நான் சொன்னதை கேட்காமல் மந்திரத்தை உச்சரித்து இப்படி உயிர் இழந்தீர்களே" எனக்கூறிக் கண்ணீர் வடித்தார். பின்னர் தனது குருவின் உடலை முறைப்படி எரித்து ஈமச்சடங்குகளைச் செய்தார். அதன்பிறகு காட்டு மலர்களைச் சேகரித்து அவரது உடலை எரித்த இடத்தில் தூவினார்.
 
அப்போது அவர் �நான் கூறியபடி மட்டும் என் குரு நடந்து மந்திரத்தை உச்சரிக்காமல் இருந்திருந்தால் இவ்வளவு உயிர்சேதம் ஏற்பட்டுஇருக்காது. நான் சொன்னதை ஏற்காததால் அவரும் தம் உயிரை இழக்க வேண்டியதாயிற்று. முன்பின் யோசியாமலும் பிறர் சொல்லும் அறிவுரைகளை ஏற்காமலும் நடப்பவர்கள் தமக்கும் கெடுதலை விளைவித்துக் கொண்டு பிறருக்கும் தீங்கை விளைவிப்பார்கள். என் குருவின் மந்திரத்தால் யாருக்கும் எவ்வித பயனும் ஏற்படவில்லை. இது மற்றவர்களுக்கு ஒரு படிப்பினை� என எண்ணி அதனையே மற்றவர்களுக்கும் எடுத்துக்கூறி அறிவுரைகளை உபதேசித்து வரலானார்.
 

Flag Counter