ரிஷபராஜா

சில நூற்றாண்டுகளுக்குமுன் நடந்த நிகழ்ச்சி இது! சரக்குகளை ஏந்திய ஒரு வணிகக் கப்பல் வங்கக்கடலில் மெதுவாக ஊர்ந்து சென்று கொண்டுஇருந்தது. திடீரென, எங்கிருந்தோ நூற்றுக்கணக்கான ஓடங்கள் வந்து மின்னல் வேகத்தில் விற்பனைப் பொருட்களை ஒன்று விடாமல் கொள்ளையடித்துச் சென்றனர்.சரக்குக் கப்பலை ஓட்டி வந்த மாலுமிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
 
பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே, ஆங்கிலேயர்கள் தங்கள் கிழக்கிந்திய கம்பெனியின் வணிக மையங்களில் ஒன்றாக கலிங்கத்தைத் (ஒரிசா)தேர்ந்தெடுத்துஇருந்தனர். வங்கக் கடலின் வழியாக அவர்களுடைய சரக்குக் கப்பல்கள் இந்தியாவிலிருந்து பொருட்களை எடுத்துக் கொண்டு மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்ய கொண்டு சென்றன. கிழக்குக் கடற்கரை ராஜ்யம் ஒன்றில் ஆட்சி செலுத்தி வந்த கலிங்க மன்னர்களில் ஒருவனுக்கு இவைப் பிடிக்கவில்லை. ஆகையால் அவன், தன் ஆட்களு க்குப் பயிற்சி அளித்து, அவர்களைக் கடல் கொள்ளைக்காரர்களாக மாற்றி ஆங்கிலேயக் கப்பல்களை நடுக் கடலில் சூறையாடத் தொடங் கினான். தங்களுடைய வியாபாரம் பெரிதும் பாதிக்கப்படுவதை கிழக்கிந்திய கம்பெனியினால் பொறுக்க முடிய வில்லை. ஆகையால் கலிங்க மன்னனைச் சிறைப்பிடிக்க நினைத்தனர். ஆனால் அந்த மன்னன் யார் என்று தெரிந்து கொள்ளவே அவர்களுக்குப் பல ஆண்டுகள் சென்றன.
 
கலிங்கத்தில், கடற்கரையருகே பரதீப் என்ற ஒரு அழகான நகரம் இருந்தது. அடர்ந்த காடுகளினால் சூழப்பட்டிருந்த பரதீப் குஜாங்க் ராஜ்யத்தின் தலைநகராக விளங்கியது. குஜாங்கின் மன்னனான சந்திரத்வஜன் தான் ஆங்கி லேயர்களின் வியாபாரத்திற்குப் பெருத்த சேதத்தை விளைவித்து வந்தவன். அவனுக்கு ஷாந்த ராஜா (ரிஷபராஜா) என்ற பட்டப்பெயரும் இருந்தது.
அவனுக்கு மட்டுமன்றி, அவன் வமிசத்தில் தோன்றிய அனைவருக்குமே அந்தப் பட்டப் பெயர் இருந்தது. அதற்கான ஒரு வரலாறும் உள்ளது.
 
ஒருமுறை, குஜாங்க் மன்னர் ஒருவர் பூரி ஜெகந்நாதர் கோயிலுக்கு விஜயம் செய்தார். செல்லும் வழியில், கோயில் காளை ஒன்று அவரை நோக்கி சீறிப் பாய்ந்தது. மன்னனுடன் வந்த ஆட்கள் சீறிவரும் காளையைக் கண்டு பயந்து போய் சிதறி ஓடி விட்டனர். குஜாங்க் மன்னருடன் வந்த ஆட்களில் அரச குலத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவனும் இருந்தான். அவன் மன்னரை தன் தந்தையைப் போல் கருதி வந்தவன். மன்னருடைய ஆபத்தான நிலையை உணர்ந்த அந்த இளைஞன் சற்றும் அஞ்சாமல் அந்த முரட்டுக்காளையின் கொம்புகளைத் தன் இரு கைகளினாலும் இறுகப் பற்றிக் கொண்டு, அதைத் தன் பலங்கொண்ட மட்டும் தள்ளி விட்டான். அந்தக் காளை ஒரு புதரில் சென்று விழுந்தது.
 
அந்தக் காட்சியைத் தன் மாளிகையின் மாடியில் இருந்து கவனித்துக்கொண்டிருந்த பூரி மன்னர் அந்த இளைஞனுடைய அசாதாரணமான துணிச்சலையும், வலிமையையும் கண்டு பிரமித்து அவனுக்கு ஷாந்தராஜா (ரிஷபராஜா) என்ற பட்டப் பெயரைச் சூட்டினார். குஜாங்க் மன்னருக்கு சந்ததியில்லை! தன் உயிரைக் காப்பாற்றிய அந்த இளைஞனையே தன் புதல்வனாக தத்து எடுத்துக் கொண்டார். அவருக்குப் பிறகு, ரிஷபராஜா குஜாங்க் ராஜ்ய மன்னன் ஆனான். அன்று தொடங்கி அவனுடைய சந்ததியினர் அனை வருக்கும் ரிஷபராஜா என்ற பட்டப் பெயர் நிலைத்தது.
 
அந்த வமிசத்தில் தோன்றியவன் தான் சந்திரத்வஜன்! ஒருவாறாக, ஆங்கிலேயர்கள் தங்களுக்குத் தீராத தலைவலியாக இருப்பது சந்திரத்வஜன்தான் என்று கண்டு பிடித்தனர். அன்றுமுதல் அவனை சிறைப்பிடிக்கப் பல முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்தனர்.
 
சந்திரத்வஜன் ஆன்மீகத்திலும் நாட்டமுடையவனாக இருந்தான். அதிகாலையிலும், இரவினிலும் அவன் அடர்ந்த காட்டினில் தனியே அமர்ந்து பல மணி நேரங்கள் தியானத்தில் செலவிடுவதுண்டு. அவன் எங்கு சென்று தனியாக தியானம் செய்கிறான் என்பது அவனுடைய நேருங்கிய நண்பர்களில் சிலருக்கு மட்டுமே தெரியும்.
ஆனால் அவனுடைய நண்பர்களில் ஒருவனே அவனுக்கு நம்பிக்கை துரோகம் செய்ய, ஒருநாள் அவன் தனியே அமர்ந்து தியானம் செய்யும்போது, ஆங்கிலேயர்கள் அவனை சிறைப்பிடித்து விட்டனர்.
 
சந்திரத்வஜனைப் பற்றி, ஆங்கி லேய சரித்திர நிபுணரான டோயன் பீ தனது ‘எ ஸ்கெட்ச் ஆஃப் ஹிஸ்டரி ஆஃப் ஒரிசா' என்ற நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: "ஒரிசாவின் மூன்று முக்கிய நகரங்களை நாங்கள் கைப்பற்றினோம். நமது வீரர்களின் அணி மேஜர் ஃபோர்ப்ஸ் தலைமையில் சந்திரத்வஜனைப் பிடிக்க பார்முல் சென்றது. முதலில் சந்திரத்வஜன் யாரிடமும் சிக்காமல் தப்பினாலும், பின்னர் அவன் பிடிபட்டான். அவன் வசமிருந்த போர்க்கருவிகள் அனைத்தும் ஆங்கிலேயர்களுடையவை! அவற்றை சந்திரத்வஜன் ஏதாவது உடைந்த கப்பலிலிருந்தோ அல்லது சரக்குக் கப்பலைக் கொள்ளைஅடித்தோப் பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது."
 
மகாநதி ஆற்றின் கரையில் அமைந்த பரபட்டி கோட்டையில் சந்திரத்வஜன் சிறை வைக்கப்பட்டான். கட்டக்கில் உள்ள இந்த பரபட்டிக் கோட்டை ஒரு காலத்தில் கலிங்க மன்னர்கள் வசித்து வந்த மாளிகையாக இருந்தது. அங்கு இருந்து தப்பிச் செல்வது மிகவும் கடினம் என்று உணர்ந்தும், சந்திரத்வஜன் அதைப் பற்றி கவலைப் படாமல் அமைதியாக இருந்தான்.
 
தன்னை சிறை வைத்திருந்த ஆங்கிலேயர்களை பகைவர்கள் என்று கருதாமல், அவர்களுடன் மிகவும் பிரியத்துடன் சந்திரத்வஜன் பழகியதைக் கண்டு, ஆங்கிலேயர்களே வியப்புற்றனர். தனக்குத் தெரிந்த மல்யுத்தக் கலைகளை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தான். நாளடைவில், ஆங்கிலேயர்கள் அவனைத் தங்கள் நண்பனாகவே நினைக்க ஆரம்பித்தனர். ஒருநாள் மாலை நேரத்தில், பரபட்டிக் கோட்டையில் இருந்த ஆங்கிலேய அதிகாரிகள் ஓர் அதிசயமான காட்சியைக் கண்டனர். மகாநதி ஆற்றில் கற்பனைக்கு எட்டாத அழகுடன் ஒரு மயில் உருவத்தில் வடிவம் அமைக்கப் பட்டு இருந்த ஓடம் சென்று கொண்டிருந்தது.
சிறிது நேரத்தில் அது கரையருகே வர, அதைச் செலுத்திக் கொண்டிருந்த இருபத்தி நான்கு ஆட்கள் தென்பட்டனர். அவர்களுக்கு நடுநாயகமாக ஒரு பெரியவர் வீற்றிருந்தார்.
 
கரையருகே வந்து அது நின்றதும், ஆங்கிலேயர்கள் அதைச் சூழ்ந்து கொண்டு அதிலிருந்த முதியவரிடம் ஓடத்தைப் பற்றிய விவரங்களைக் கேட்டனர். அதற்கு அவர் அந்த ஓடம் ஒரு செல்வருடையது என்றும், வியாபாரத்தில் அவருக்கு ஏற்பட்ட பெரும் நஷ்டத்தினால் அதை விற்க முயற்சிக்கிறார் என்றும் கூறினார். உடனே, அதை விலைக்கு வாங்கத் துடித்த ஆங்கிலேயர்கள் அதனுடைய விலையைக் கேட்டதும் திடுக்கிட்டனர்.
 
"துரைமார்களே! விலையைக் கேட்டு நீங்கள் தயங்குவது எனக்குப் புரிகிறது. ஆனால், இதன் விலை உண்மையிலேயே மிக அதிகம். உங்களுக்கு இதன் விலையை மதிப்பிடத் தெரியவில்லை. நான் அதிக விலை கூறுவதாக நீங்கள் சந்தேகப்பட்டால், எங்கள் நாட்டு ஓடங்களைப் பற்றி நன்கு தெரிந்த ஒருவரை அழைத்து வாருங்கள். அவர் இதைப் பார்த்து சரியான விலையை மதிப்பிடட்டும்!" என்றார் அந்த முதியவர்.
 
அவர் கூறிய அந்த யோசனையை ஏற்றுக் கொண்ட பின், ஆங்கிலேயர்கள் யாரை அழைத்து வருவது என்று யோசித்தனர். உடனே அவர்களுக்கு ரிஷபராஜா சந்திரத்வஜன் ஞாபகம் வர, அவனை சிறையில் இருந்து உடனே வரவழைத்தனர். விரைவில் அங்கு அழைத்து வரப்பட்ட சந்திரத்வஜன், முதியவரிடம் ஒடத்தைப் பற்றிய விவரங்களை விளக்கமாக நேடு நேரம் கேட்டான். பிறகு, ஓடத்தின் உட்பகுதியை சோதனையிட ஓடத்தில் ஏறி அமர்ந்தான். அதற்குள் மாலை மங்கி இருட்டாகி விட்டது.
 
திடீரென, கண்ணிமைக்கும் நேரத்தில், சந்திரத்வஜன் ஓடத்தின் உள்ளே அமர்ந்திருக்கும்போதே ஓடம் கிளம்பிவிட்டது. அதிலிருந்த ஆட்கள் அசுர வேகத்தில் துடுப்புப் போட்டு ஓடத்தை செலுத்த, ஆங்கிலேயர்கள் பெருத்த அதிர்ச்சிக் குள்ளாயினர். இவ்வாறு ஆங்கிலேயர்களின் கண்களில் மண்ணைத் தூவி தங்கள் மன்னரை விடுவிக்கத் திட்டமிட்ட அந்த முதியவர் வேறு யாருமில்லை. மன்னருடைய புத்திசாலி மந்திரி பட்டஜோஷிதான்!

0 comments:

Post a Comment

Flag Counter