அளவிலா ஆற்றல் தரும் அதிசயப்பழம்

சில ஆண்டுகளுக்குமுன், இரண்டு விஞ்ஞானிகள் கேரள மாநிலத்து அகஸ்தியமலைப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அபூர்வமான மூலிகைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்ய அவர்கள் நகரப்பகுதியில் இருந்து காட்டிற்குள் வந்திருந்தனர். காணி என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த மல்லன்காணி அவர்களுக்கு வழி காட்டியாக உதவி செய்தான்.
 
கரடு முரடான காட்டுப் பாதையில் பயணித்த விஞ்ஞானிகள் இருவரும் விரைவிலேயே களைத்துப் போயினர். ஆனால் மல்லனுக்குக் களைப்பே ஏற்படவில்லை. இடையிலேயே, மடியிலிருந்து ஏதோ ஒரு பழத்தை எடுத்துக் கடித்துத் தின்று கொண்டே களைப்பு என்பது துளிக்கூட இல்லாமல், தங்களுடன் நடந்து வந்த அவனுடைய சக்தியைக் கண்டு விஞ்ஞானிகள் வியப்பு அடைந்தனர். ‘அடிக்கடி அவன் உண்ணும் பழங்களில்தான் ஏதோ அபூர்வ சக்தி உள்ளதா?' என்று இருவரும் எண்ணினர்.
 
தங்களுடைய சந்தேகத்திற்கு விடை காண எண்ணி, அவனிடமிருந்து சில பழங்களை வாங்கி இருவரும் உண்டனர். என்ன ஆச்சரியம்? எங்குஇருந்தோ அவர்களுடைய உடல்களிலும் சக்தி பிறந்தது.
 
அதையறிந்த விஞ்ஞானிகள் பரபரப்படைந்தனர். அந்தப் பழத்தை அவர்கள் அதற்கு முன் பார்த்ததும் இல்லை. அதைப்பற்றிக் கேள்விப்பட்டதுமில்லை. அத்தகைய அபூர்வ சக்தி வாய்ந்த பழங்கள் நகரங்களில் வாழும் மனிதர்களுக்கும் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்குமென்றும், அவற்றிலிருந்து மருந்து தயாரித்தால், அது எத்தனை நோயாளிகளுக்குப் பயன்படும் என்றும் எண்ணினர்.
 
உடனே, இருவரும் மல்லனை அந்தப் பழங்கள் உண்டாகும் மரத்தினைத் தங்களுக்குக் காட்ட வேண்டினர். ஆனால் மல்லன் அவற்றை அறிமுகமற்றவர்களுக்குக் காட்டக் கூடாது என்று கூறினான். தங்கள் சாதியில் மூத்தவர்களிடம் அதைப்பற்றி சொல்லி, அவர்கள் அனுமதித்தால் மட்டுமே அவற்றைக் காட்ட முடியும் என்றும் கூறினான். பிறகு அவர்களை தங்கள் இனத்து மூத்தவர்களிடம் அழைத்துச் சென்றான்.
 
காணியினத் தலைவர்கள் தங்கள் இன மக்கள் அனைவரையும் கூட்டி அதுபற்றி விவாதித்தனர். கூட்டத்தில் பலர் தாங்கள் பாதுகாத்து வரும் ரகசியங்களை அந்நியர்களுக்குத் தெரிவிக்கக் கூடாது என்றனர்.
 
அவர்களுடன் விஞ்ஞானிகள் நீண்ட நேரம் விவாதம் செய்தனர். சிற்சில மக்களுக்கு மட்டுமே பயன்படும் பொருட்கள் உலகத்தவர் அனைவருக்கும் கிடைத்தால் நன்மையே தவிர ஆபத்தில்லை என்பதை வலியுறுத்தினர். தவிர, அப்பழங்களை வெளியுலகிற்குப் பயன்படுத்தினால் அதனால் கிடைக்கும் வருமானம் காணியின மக்களுக்குப் பெரிதும் பயனாகும் என்றும் புரிய வைத்த பிறகே, அவர்கள் ரகசியத்தைக் கூற ஒப்புக் கொண்டனர்.
 
கடைசியில் அவர்கள் பழத்தின் பெயரைக்கூறவும், பழம் தோன்றும் மரத்தைக் காட்டவும் ஒப்புக் கொண்டு, மல்லனை அவர்களுடன் அனுப்பினர். அவ்வாறே, மல்லன் காட்டில் அவர்களை அப்பழங்கள் தோன்றும் தாவரங்கள் இருக்குமிடத்திற்குக் கூட்டிச் சென்றான். அவை செடிகள் வடிவத்திலேயே இருந்தன. அந்தப் பழத்தின் பெயர் ‘ஆரோக்கிய அப்பச்சா' என்று மல்லன் தெரிவித்தான்.
 
அந்தப் பழங்கள் சிலவற்றையும், சில செடிகளையும் விஞ்ஞானிகள் தங்களுடன் எடுத்துச் சென்று, ஆராய்ச்சி சாலையில் ஆய்வு செய்தனர். ஆரோக்கிய அப்பச்சாவில் நிறைந்திருந்த சில ரசாயனப் பொருட்கள் உடலுக்கு சுறுசுறுப்பையும், அளவில்லா ஆற்றலையும் தருகின்றன என்ற உண்மையைக் கண்டு பிடித்தனர். அதன் விஞ்ஞானப் பெயர் ‘ட்ரிக்கோபஸ் ஜீலானிகஸ் டிராவாங்கோரியஸ்' என்பதாகும்.
 
ந்தச் செடி, உலகிலேயே கேரளத்திலும் தமிழகத்தின் சில பகுதிகளில் மட்டுமே பயிராகிறது என்றும், கண்டுபிடித்தனர்.
 
பலவிதமான ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, இறுதியாக அந்தத் தாவரங்களில் இருந்து விஞ்ஞானிகள் வெற்றிகரமாக ஒரு மருந்தினைத் தயாரித்தனர். அவர்களுடைய கனவு நனவாகியது. காணிப் பழங்குடியின மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது.
 
மருந்துகளின் விற்பனையிலிருந்து கிடைத்த வருமானத்தின் ஒரு பகுதி முறையாக அவர்களுக்குச் சென்றது. பழங்குடி மக்கள் தங்களுக்குள்ளாக ஒரு குழு அமைத்துக் கொண்டு, அந்த வருமானத்தை தங்களுடைய பொதுநலத் திட்டங்களில் செலவிட்டனர்.
 
தற்போது, அந்தத் தாவரங்கள் வளரும் காட்டுப்பகுதி காட்டிலாகாவின் பொறுப்பில் உள்ளது.
 
பழங்குடி மக்கள் தங்களுடைய நிலத்தில் ஆரோக்கிய அப்பச்சாச் செடிகளைப் பயிரிட காட்டிலாகா அனுமதித்துஉள்ளது. காட்டிலேயே வசித்துவரும் காணியின மக்களுக்கு, தாங்கள் பரம்பரையாகத் தெரிந்து வைத்துள்ள தாவரங்களைப் பற்றிய தகவல்கள் எவ்வளவு தூரம் பயன்படுகின்றன என்பது புரியவந்துஉள்ளது. தங்கள் வாழ்க்கையையே மேம்படுத்த அவை உதவுகின்றன என்ற உண்மை தற்போது அவர்களுக்குத் தெரியவந்துள்ளது.

0 comments:

Post a Comment

Flag Counter