அது ஓர் அழகான கிராமம்! அந்த கிராமத்தின் பச்சைப் பசேலென்ற வயல்கள்,
கண்களைக் குளிரவைக்கும் தங்களுடைய வண்ண அழகை வெளிக்காட்டி, நீலவானத்தின்
அழகுடன் போட்டியிட்டன. ஒருநாள் மாலை, புள்ளினங்கள் சிறகடித்து வீடு சேரும்
நேரத்தில், வயல்களில் வேலை செய்து களைத்த உழவர்களும் வீடு திரும்பிக்
கொண்டு இருந்தனர்.
தங்கள் மனைவிமார்களும், குழந்தைகளும் புடைசூழ மகிழ்ச்சியுடன் அனைவரும்
தங்கள் வீடு நோக்கிச் சென்று கொண்டு இருக்கையில், அவர்களில் ஒரு சுட்டிப்
பையன் மட்டும் பட்டுப்பூச்சிகளை விடாமல் துரத்தி ஓடிக் கொண்டு இருந்தான்.
பட்டுப்பூச்சிகள் தான் எத்தனை ரகம்? சில சிவப்பாகவும், சில
பச்சையாகவும், சில வெண்மையில் சிவப்புப் புள்ளிகளுடனும் எத்தனை அழகாகத்
திகழ்கின்றன? மலர்களும் ஒருவகையில் பட்டுப்பூச்சிகள் தான்.. பறக்காதப்
பட்டுப்பூச்சிகள்!
உழவர்கள் தங்கள் வீடுகளை நோக்கி நடந்த வண்ணமிருந்தனர். வீடுகள்
வயல்களிலிருந்து மிகத் தொலைவில் இருந்தன. இருந்தால்என்ன? நெடுந்தொலைவு
நடப்பது அவர்களுக்குப் பழகிப்போன ஒன்றுதான்!
நம் கவனத்தைச் சற்றே ஒரு சிறுவனை நோக்கித் திருப்புவோமா?
பட்டுப்பூச்சிகளைத் துரத்திக் கொண்டே ஓடியவன், தன் தாயிடமிருந்து பிரிந்து
வெகுதூரம் சென்று விட்டான். திடீரென பாதையை நோக்கிய சிறுவன் தான் தன்னுடைய
தாயிடமிருந்து விலகி வெகுதூரம் வந்துவிட்டதை உணர்ந்தான். "அம்மா! அம்மா!"
என்று பெருங்குரலெடுத்து அவன் கூவினான்! அதற்குள் மாலை மங்கிவிட்டது.
அந்தச்
சிறுவனின் ‘அம்மா! அம்மா!' என்ற தீனக்குரல் காற்றில் எங்கும்
எதிரொலித்தது. ஆனால் அவனுடைய தீனக்குரலை யார் செவிகளிலும் விழவில்லை.
அவனைச் சுற்றி ஒரே தனிமை!
அதிருஷ்டவசமாக எதிர்ப்புறம் ஒரு பருமனான உழவன் வந்து கொண்டிருந்தான்.
தாயைக் காணாமல் அழுது கொண்டிருந்த சிறுவனை நோக்கி, "ஏன் அழுகிறாய் மகனே?"
என்று பரிவுடன் கேட்டான்.
"அம்மா! என் அம்மா வேண்டும்!" என்று அந்தச் சிறுவன் கேவிக்கேவி அழுதான்.
"உன் அம்மா எப்படி இருப்பாள்?" என்று கேட்டான் அந்த உழவன். "என் அம்மா அழகாயிருப்பாள்!" என்றான் அந்தச் சிறுவன். "கவலைப்படாதே!
உன்னை உன் அம்மாவிடம் சேர்க்கிறேன்" என்று சொல்லி விட்டு, அந்தச்
சிறுவனைக் கைப்பிடித்து, மற்ற உழவர்கள் வீடு திரும்பி வரும் பாதைக்கு
அழைத்துச் சென்றான்.
அப்போது அழகான ஒரு பெண்மணி எதிர்ப்பட, அவளைக்காட்டி, "அதோ பார்! அவள்
அழகாயிருக்கிறாள். அதுதானே உன் அம்மா?" என்று உழவன் கேட்டான். "இல்லை! என்
அம்மா உலகத்திலேயே மிக அழகான பெண்!" என்றான் சிறுவன். சற்று நேரத்தில்,
மற்றொரு பெண்மணி எதிரே வர, அவளைக்காட்டி, "அதுதான் உன் அம்மாவா?" என்று
அவன் கேட்டான்.
"இல்லை! என் அம்மா உலகத்திலேயே மிகவும் அழகான பெண்!" என்று சிறுவன் கூறினான்.
எதிரே, பல பெண்மணிகள் ஒருவர் பின் ஒருவராக வந்தனர். அவர்கள் அனைவருமே
அழகாயிருந்தும், அவர்களில் யாருமே அவன் தாயில்லை. சிறுவனின் பதற்றமும்,
கலக்கமும் வினாடிக்கு வினாடி மிகவும் அதிகரித்தது.
கடைசியாக, ஒரு பெண்மணி எதிரே வர, அவளைக் கண்டதும் சிறுவன்
மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து, "அதோ என் அம்மா! அதுதான் என் அம்மா! என்
அம்மா கிடைத்து விட்டாள்!" என்று கூச்சலிட்டான்.
அப்போது, அந்த உழவன் இடிக்குரலில் சிரித்த சிரிப்பின் ஒலி வானத்தை
எட்டியது. ஏனெனில், அந்தச் சிறுவனின் தாய் மிக சாதாரணமான தோற்றத்துடன்
காணப்பட்டாள். அவளை அழகு என்று சத்தியம் செய்தால்கூட நம்ப முடியாது.
போதாக்குறைக்கு, அவளுக்கு ஒரு கண்ணில் பார்வையில்லை. வெயிலில் வேலை
செய்ததால், கறுத்த மேனியுடன், மிக சுமாராக இருந்தாள்.
"இதுவா உன் அம்மா? இவளையா உலகிலேயே மிக அழகான பெண் என்றாய்?" என்று கேட்டு விட்டு உழவன் மீண்டும் சிரித்தான்.
"ஆமாம்! அவள் என் அம்மா! எனக்கு என் அம்மா தான் உலகத்திலேயே மிக அழகான பெண்!" என்று அடித்துக் கூறினான் சிறுவன்.
0 comments:
Post a Comment