சரியான தீர்ப்பு

 
நகரக் காவலரான சங்குப்பிள்ளை, ஒருநாள் மாலையில் ராஜ்யத்தின் தலைநகரை வலம் வந்து கொண்டிருக்கையில், கடைத் தெருவில் ஒரு இளைஞனை நான்கு நபர்கள் சூழ்ந்து கொண்டு அடிப்பதைப் பார்த்தார். உடனே அவர்களை அதட்டி, மிரட்டிய சங்குப்பிள்ளை, "இவனை ஏன் அடிக்கிறீர்கள்?" என்று கேட்டார்.
 
அதற்கு அவர்கள், "இவன் பரமன் கடையிலிருந்து ஒரு மூட்டை அரிசியைத் திருடிக் கொண்டு சென்றான்" என்றனர்.
 
"அவன் திருடியதாகவே இருக்கட்டும்! ஆனால் அவனை தண்டிக்க உங்களுக்கு அதிகாரம் இல்லை. அதனால் திருடனுடன் சேர்த்து உங்களையும் கைது செய்கிறேன்" என்று ஐவரையும் கைது செய்த சங்குப்பிள்ளை, அவர்களை மறுநாள் நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தினார். கடைக்காரரான பரமனும் வரவழைக்கப்பட்டார்.
 
முதலில் திருடிய இளைஞனிடம் நீதிபதி, "உன் பெயர் என்ன?" என்று கேட்டதற்கு "என் பெயர் வீரன்!" என்றான் அவன்! "பரமன் கடையிலிருந்து ஒரு மூட்டை அரிசியைத் திருடியதாக உன்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அது உண்மையா?" என்று நீதிபதி கேட்டார். "நீதிபதி அவர்களே! நான் செய்தது தவறா என்று நீங்களே முடிவு செய்யுங்கள்!
 
பரமன் கடையில் ஒரு வாரம் கூலி வேலை செய்தால் ஒரு மூட்டை அரிசி தருவதாகக் கூறினார். அதற்கு ஒப்புக்கொண்ட நானும், ஒரு வாரம் அவரிடம் வேலை செய்தேன். அதற்குப் பிறகு நான் கூலி கேட்ட போது, பரமன் அவர் வீட்டுக் கிணற்று சுவர்கள் இடிந்திருப்பதாகவும், அவற்றைப் புதிதாகக் கட்டவேண்டும் என்றும் கூறினார்.
முதலில் நான் ஒரு வாரமாகச் செய்த வேலைக்கு ஒரு மூட்டை அரிசி தர வேண்டுமென்றும், அதற்குப் பிறகு அடுத்த வேலை செய்வதாகவும் நான் சொன்னேன். அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. அதனால் எனக்குச் சேர வேண்டிய ஒரு மூட்டை அரிசியை நானே எடுத்துக் கொண்டேன். உடனே பரமன் "திருடன்! திருடன்!" என்று கூச்சல்போட, இந்த நால்வரும் என்னைப் பிடித்து அடிக்க ஆரம்பித்தனர்" என்றான்.
 
வீரன் சொன்னதை கேட்ட நீதிபதி பரமனிடம், "அவன் சொன்னது உண்மையா?" என்று கேட்டார்.
 
"அவன் என் கடையிலிருந்து அரிசி மூட்டையைத் திருடியது உண்மை! அதைத்தான் அவனே ஒப்புக்கொண்டு விட்டானே!" என்றான்.
 
"அதை விடு! நீ வாக்களித்தபடி அவனுக்கு ஒரு மூட்டை அரிசியை ஏன் கொடுக்க மறுத்தாய்?" என்று நீதிபதி வினவினார்.
 
"நான் கொடுக்கமாட்டேன் என்று சொல்லவில்லை. கிணற்று வேலை முடித்த பிறகு தருகிறேன் என்றுதான் சொன்னேன்" என்றான் பரமன்.
 
"பரமா! நீ செய்தது தவறுதான்! அதனால் நீ அவனுக்கு கூடுதலாகப் பணம் தர வேண்டும்" என்றார் நீதிபதி.
 
பிறகு வீரனை நோக்கி, "நீ பலவந்தமாக அரிசி மூட்டையை எடுத்தது தவறு! ஆகவே, பரமன் கொடுத்த கிணற்று வேலையை முடித்த பிறகு ஒரு மூட்டை அரிசியையும், பரமனிடமிருந்து கூடுதல் பணமாகப் பத்து பொற்காசுகளும் பெற்றுக் கொள்!" என்றார் நீதிபதி.
 
பிறகு, வீரனைப் பிடித்து அடித்த நால்வரையும் நோக்கி, "பரமன் திருடன், திருடன் என்று கூவியவுடன், நீங்கள் ஓடிப்போய் வீரனைப் பிடித்தது தவறில்லை. ஆனால் அவன் உண்மையாகத் திருடனா என்பது தெரியாமல் அவனை நீங்கள் எப்படி அடிக்கலாம்? சட்டத்தை நீங்களே கையில் எடுத்துக் கொண்டதற்காக, உங்களுக்கு ஒரு வாரம் சிறைதண்டனை அளிக்கிறேன்!" என்றார்.
 
நீதிமன்றத்தில் கூடியிருந்தவர்கள் தீர்ப்பைக் கேட்டு கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
 

0 comments:

Post a Comment

Flag Counter