சங்கரன் பிறந்து பத்து ஆண்டுகளுக்குப்பின் அந்தக் குடும்பத்தில் சிவன்
பிறந்தான். ஆனால் இரண்டாவது பிள்ளை பிறந்த சில ஆண்டுகளிலேயே, சிவனுடைய
தாய் நோயுற்று உயிர் நீத்தாள்.
சங்கரன்
வாலிபனான பிறகு, அவன் தந்தை அவனுக்கு பார்வதி என்ற பெண்ணை மணம்
முடித்தார். பார்வதி நல்ல குணவதியாக மட்டுமின்றி, மிகவும் சாமர்த்தியம்
கொண்டவளாகவும் இருந்தாள். சிவனை பாசத்துடன் பராமரித்து வந்தாள்.
சிவனுடைய படிப்பு முடிந்ததும், அவனுக்கு திருமணம் நடத்திவிட பார்வதி மிகவும் ஆசைப்பட்டாள்.
ஒருநாள் அவள் நேரிடையாகவே சிவனிடம் தன் விருப்பத்தை வெளியிட, அவன்
வெட்கித் தலைகுனிந்து கொண்டு அண்ணியிடம் தான் ஏற்கெனவே ஒரு பெண்ணின் மீது
பிரியம் வைத்திருப்பதாகத் தெரிவித்தான்.
அவள்
பெயர் கௌரி என்று கூறினான். அவன் குறிப்பிட்ட பெண் கௌரியை ஏற்கெனவே
பார்வதி அறிவாள். இதைக் கேட்டு மகிழ்ந்த பார்வதி சிவனிடம் அந்தப் பெண்ணை
சந்தித்து அவனது விருப்பத்தைத் தெரிவிக்கச் சொன்னாள்.
அதன்படியே, சிவன் கௌரியை அவள் வீட்டில் சந்தித்து தன் ஆசையைத்
தெரிவித்தான். ஏற்கெனவே சிவனை சந்தித்திருந்த அவள், அவன்மீது ஆசை
கொண்டிருந்தாள். இப்போது அவனே தன்னைத் தேடி வந்து தன் விருப்பத்தைத்
தெரிவித்ததும் நாணமும், மகிழ்ச்சியும் அவளுக்குள் பொங்கி எழுந்தன. ஆனால்,
உடனே தன் சம்மதத்தைத் தெரிவிக்க விரும்பாமல் உள்ளே சென்றாள்.
சற்று நேரத்தில் வெளியே வந்த அவள் புன்னகைத்துக் கொண்டே ஒரு ஜாடியை
அவனிடம் கொடுத்தாள். "இதில் எள்ளும், கடுகும் கலந்துள்ளன. இதிலிருந்து
எள்ளை மட்டும் பிரித்தெடுத்து நாளைக்குக் கொண்டு வாருங்கள்!" என்றாள்.
குழம்பிய சிவன் வீட்டிற்குத் திரும்பினான்.
தன் அண்ணியிடம் கௌரியின் வீட்டில் நடந்ததைக் கூறிய சிவன், "அவளுக்கு
சம்மதம் தான் என்று தோன்றுகிறது. ஆனால் என் புத்திசாலித்தனத்தை சோதிக்க
விரும்புகிறாள். இந்த ஜாடியில் கலந்துள்ள எள், கடுகிலிருந்து எள்ளை மட்டும்
பிரித்தெடுத்துக் கொண்டு வர வேண்டுமாம்! இந்தக் காரியத்தை என்னால் செய்ய
முடியாது!" என்றான் சிவன்.
கௌரி மிகவும் கெட்டிக்காரி என்று தெரிந்து கொண்ட பார்வதி, ஜாடியை
கொல்லைப்புறம் எடுத்துச் சென்று செடிகளின் இலைகளில் கட்டியிருந்த
எறும்புப்புற்றை அப்படியே எடுத்து ஜாடிக்குள் போட்டு வைத்தான்.
அடுத்தநாள் எறும்புகள் ஜாடியில் இருந்த கடுகுகள் அனைத்தையும் பொறுக்கிக் கொண்டு சென்று விட்டன.
அவை எள் உண்பதில்லையாதலால், எள் மட்டும் ஜாடியில் மிஞ்சியிருந்தது.
பார்வதி அந்த ஜாடியை சிவனிடம் தந்து கௌரியிடம் கொடுக்கச் சொன்னாள். தன்
அண்ணி அந்த கௌரியை விட கெட்டிக்காரி என்று சிவன் உணர்ந்து கொண்டான்.
அதை கௌரியிடம் தந்ததும், கௌரி புன்னகையுடன் அதை எடுத்துக் கொண்டு
உள்ளே சென்றவள் மீண்டும் காலி ஜாடியுடன் வெளியே வந்தாள். "நாளைக் காலையில்
இந்த ஜாடி நிறைய பனித்துளிகளை சேகரித்து வரமுடியுமா?" என்று கேட்டாள்.
குழப்பத்துடன் வீடு திரும்பிய சிவனைக் கண்டு பார்வதி, "இந்த முறை என்ன நடந்தது?" என்று கேட்க, அவனும் விளக்கினான்.
"கவலைப்படாதே! இதையும் நான் செய்து முடிக்கிறேன்" என்று கூறிய பார்வதி
காலி ஜாடியை எடுத்து வைத்துக் கொண்டாள். பிறகு, அவள் கிராமத்து சலவைத்
தொழிலாளி ஒருவனிடம் சென்று" நீ எனக்கு ஒரு உதவி செய்! உன்னிடமுள்ள எல்லாத்
துணிகளையும் இன்று இரவில் திறந்த வெளியில் கொடிகட்டித் தொங்கவிடு! இரவில்
பெய்யும் பனியினால் அவை நனையட்டும். பிறகு, காலையில் துணிகளைப் பிழிந்தெடு!
அவற்றில்உள்ள பனித்துளிகளை பாத்திரத்தில் சேகரித்து என்னிடம் எடுத்துவா!"
என்றாள். அப்படியே, அவனும் பாத்திரம் நிறைய பனிநீரை நிரப்பிக் கொண்டு வர,
அதை ஜாடியில் விட்டு சிவனிடம் கொடுத்தனுப்பினாள்.
சிவன்
அதை கௌரியிடம் தந்ததும், அவள் விழிகள் வியப்பினால் மலர்ந்தன.
ஜாடிக்குள்ளிருந்த பளிங்கு போன்ற தெளிந்த நீரைக் கண்டதும் அது பனித்துளிகள்
தான் என்று நிச்சயமாகத் தெரிந்தது. சிவனை நோக்கி ஒரு புன்னகையை வீசி
விட்டு, "எனக்கு நூறு தளிர் வெற்றிலைகள் தேவை! அவை புதியவனாக இருக்க
வேண்டும். கொடியிலிருந்து கையினாலோ, கத்தரிக்கோலின் உதவி கொண்டோ அவற்றைப்
பறிக்கக் கூடாது" என்றாள்.
"இதைக் கேட்டு முணுமுணுத்தவாறே திரும்பிய சிவனைக் கண்டு பார்வதி
திடுக்கிட்டாள். அவள் சிவனை நோக்கி, "என்ன? மீண்டும் மிகக் கடினமான சவாலா?"
என்று கேட்டாள்.
சிவன் மூன்றாவது சோதனையை விளக்க, திடீரென அவளுக்கு ஒரு யோசனை
உதயமாகியது. அவளிடம் ஒரு வளர்ப்புக் கிளி இருந்தது. அதை எடுத்துக் கொண்டு
வெற்றிலைத் தோட்டத்திற்குச் சென்ற பார்வதி, வெற்றிலைகளைப் பறிக்கச் சொல்லி
அதை ஏவி விட்டாள். உடனே, கிளி நூற்றுக்கணக்கான வெற்றிலைகளை மடமடவென்று மிக
விரைவாகக் கொத்திப் பறித்தது. அவற்றிலிருந்து, நூறு தளிர் வெற்றிலைகளைப்
பொறுக்கியெடுத்து சிவனிடம் தந்தபிறகு, தானும் அவனுடன் கிளம்பினாள்.
சிவனுடன், அவனுடைய அண்ணியும் வருவது கண்டு கௌரி திடுக்கிட்டாள்.
தன்னுடைய கொழுந்தனை அளவிற்கு மீறி சோதித்தற்காக பார்வதி தன்னுடன் சண்டை போட
வருகிறாளோ என்று எண்ணினாள். அவ்வாறு பார்வதி தன்னை கோபிப்பதற்கு முன் அவளை
சமாதானப் படுத்த விரும்பி அவள் முன்னே ஓடிச் சென்று, "அக்கா! என்னை
மன்னித்து விடுங்கள்! விளையாட்டிற்காக உங்கள் கொழுந்தனை மீண்டும் மீண்டும்
சோதனை செய்தேன். அவரைத் தவிர வேறு யாரையும் மணப்பதாக இல்லை!" என்று கெஞ்சிய
கௌரியை, தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்ட பார்வதி, "கௌரி! அப்படி நீ
மாட்டேன் என்று சொன்னாலும், நான் உன்னை விட்டுவிடுவேன் என்றா நினைத்தாய்?"
என்றாள்.
விரைவிலேயே,
சிவன்-கௌரி திருமணம் இனிதே நடைபெற்றது. பார்வதி தனது சாமர்த்தியத்தினால்
அனைத்து சோதனைகளிலும் சிவனை வெற்றி பெறச் செய்ததை அனைவரும் பாராட்டினர்.
0 comments:
Post a Comment