பிரம்மதத்தன் காசியை ஆண்ட போது போதிசத்வர் காசியருகே ஒரு சன்னியாசியாக
பிறந்திருந்தார். அவர் தினமும் பிச்சை எடுத்து வருவார். ஒரு நாள் அவர் ஒரு
யானைப்பாகனின் வீட்டிற்குப் போனார். அந்த யானைப் பாகன் யானைகளைப்
பிடிப்பதிலும் அக்கலையை பிறருக்கு போதிப்பதிலும் மிகவும் திறமையானவனாக
இருந்தான்.
சன்னியாசியைக் கண்ட யானைப் பாகன் அவரை மரியாதையுடன் வரவேற்று
வீட்டிற்குள் அழைத்து போய் உணவு அளித்தான். பிறகு அவன் பணிவுடன் "தாங்கள்
சிறிது நாள்களாவது என் வீட்டில் தங்கி இருந்து நான் அளிக்கும் உணவை ஏற்க
வேண்டும்" என்று கூறினான். போதிசத்வரும் யானைப்பாகனின் வீட்டில் ஒரு வார
காலம் இருந்தார். பின்னர் அங்கிருந்து கிளம்பும்போது அவர் யானைப்பாகனுக்கு
நல்லாசிகள் கூறி விட்டு சென்றார். உயர்ந்த ஸ்தானத்திற்குக் கொண்டு போயின.
ஒரு நாளிரவு ஒரு விறகு வெட்டி ஒரு கோயில் மண்டபத்தில் படுத்துக்
கொண்டிருந்தான். அதனருகே இருந்த மரத்தின் மீது சில கோழிகள் இருந்தன.
மரத்தின் கீழ் ஏதோ சத்தம் ஏற்படுவது கேட்டு மரத்தின் மீதிருந்த ஒரு கோழிக்
குஞ்சு பயந்து நடுங்கிக் கீழே வேறொரு கிளையிலிருந்த கோழிக் குஞ்சின் மீது
விழுந்து அதன் தூக்கத்தைக் கலைத்தது.
தூக்கம் கலைந்த கோழிக் குஞ்சு "அடேயப்பா! உனக்கு அவ்வளவு கர்வமா? என்
பெருமை தெரியாதா? என்னைச் சாப்பிடுபவனுக்குப் புதையல் கிடைக்குமே" என்றது.
அது கேட்டு அதன் மீது விழுந்த கோழிக் குஞ்சு "என்னைச் சாப்பிடுபவன்
ராஜாவாகி விடுவானே" என்றது.
இரு
கோழிக் குஞ்சுகள் பேசியதை மண்டபத்தில் படுத்திருந்த விறகு வெட்டி கேட்டு
விட்டான். அவன் மூளை வேகமாகச் செயல் படத் தொடங்கியது. அவன் `ஆகா!
எனக்குத்தான் என்ன அதிர்ஷ்டம்! இங்கே ஒரு கோழிக் குஞ்சு உள்ளது. அதனைப்
பிடித்துக் கொன்று நான் சாப்பிட்டு விட்டால் இந்நாட்டின் மன்னனாகி
விடுவேன். இனிமேல் கஷ்டப்பட்டு விறகு வெட்டி விற்றுப் பிழைக்க வேண்டாம்' என
எண்ணினான். அவன் சற்று நேரம் கழித்து மரத்தின் மீதேறினான். எந்தக் குஞ்சு
தன்னைச் சாப்பிட்டால் ஒருவன் ராஜா ஆவான் என்று கூறியதோ அதனை அவன்
பிடித்துக் கொண்டு கீழே இறங்கித் தன் வீட்டிற்குப் போனான்.
தன் மனைவியிடம் விஷயத்தைக் கூறி அவன் அக்குஞ்சை நன்கு வாட்டி சமைத்து
வைக்கச் சொன்னான். அவளும் தான் ராணியாக போவதை நினைத்து உற்சாகத்துடன்
அந்தக் கோழிக் குஞ்சைக் கொன்று நன்கு வாட்டி சமைத்து ஒரு சிறு கலயத்தில்
எடுத்து வைத்தாள். அப்போது விறகு வெட்டி "நாம் இருவரும் இதனை எடுத்துக்
கொண்டு ஆற்றிற்குப் போவோம். நன்கு குளித்து கடவுளை வணங்கி விட்டு நிதானமாக
இதைச் சாப்பிடுவோம்" என்றான். அவளும் அவன் கூறியதற்கு சம்மதித்து கலயத்தை
எடுத்துக் கொண்டு ஆற்றிற்குக் கிளம்பினாள்.
ஆற்றின் கரையில் அக்கலயத்தை அவர்கள் வைத்து விட்டு குளத்தில்
குளித்தார்கள். அப்போது திடீரென ஆற்றில் வெள்ளம் வரவே விறகு வெட்டியும்
அவன் மனைவியும் உயிர் தப்ப நீந்தி எங்கோ போய் கரை சேர்ந்தார்கள். அவர்கள்
வைத்திருந்த கலயம் ஆற்று வெள்ளத்தில் மிதந்தவாறே போனது. விறகு வெட்டியோ
"ஐயோ! இந்த நாட்டின் மன்னனாகும் அதிருஷ்டம் எனக்கு இல்லையே" எனத் தன்
மனைவியிடம் கூறிக் கண்ணீர் வடித்தான்!
அதே சமயம் ஆற்றில் சிறிது தூரத்தில் போதிசத்வருக்கு உணவளித்த
யானைப்பாகன் ஒரு யானையை ஆற்றில் குளிப்பாட்டிக் கொண்டு இருந்தான். அவன்
கண்ணில் ஆற்றில் மிதந்து வரும் கலயம் தென்பட்டது. அவன் அதனைப் பிடித்து
எடுத்தான்.
அதில் நன்கு பக்குவப்படுத்தப் பட்ட கோழிக் குஞ்சின் மாமிசம் இருப்பது
கண்டு அதனை எடுத்து உடனேயே வாயில் போட்டு மென்று தின்று விட்டான்.
இது நடந்த மூன்றாவது நாள் காசி மீது அண்டை நாட்டு மன்னன் படை எடுத்து
வந்தான். அது கண்டு காசி மன்னன் பயந்து போனான். அவன் இயல்பாகவே ஒரு தொடை
நடுங்கி. போர் என்றால் பயந்து விடுவான். ஆகையால் அண்டை நாட்டு மன்னன்
திடீரெனப் படை எடுத்து வந்ததும் தான் எப்படியாவது உயிர் தப்ப வேண்டுமென
நினைத்து யானைப்பாகன் போல வேடம் பூண்டு யானைப்பாகனை அரசனின் ஆடைகளை
உடுத்திக் கொள்ளச் சொன்னான். பிறகு அவனை யானை மீது உட்கார வைத்துத் தான்
யானைப்பாகனின் இடத்தில் அமர்ந்தான். எதிரிகள் விட்ட அம்பு குறி தவறி
யானைப்பாகனாக வேடம் பூண்ட அரசனின் மீது பட அவன் இறந்து விழுந்தான்.
யானை மீது அமர்ந்திருந்த யானைப்பாகனோ போர்களத்தில் இருந்து ஓடாமல்
வீரர்களை உற்சாகப் படுத்தி போர் புரியச் சொன்னான். போர்களம் என்றால்
நடுங்கும் மன்னனா இப்படி போர் புரிகிறான் என அனைவரும் நினைத்தனர். மன்னனாக
இருந்த யானைப்பாகனும் வீராவேசத்துடன் போர் புரிந்தான். எதிரிப் படை பின்
வாங்கி ஓடி விட்டது. அண்டை நாட்டு மன்னன் இறந்து போனான்.
போர் முடிந்ததும் யானை மீது இருந்தது உண்மையில் மன்னன் அல்ல என்றும்
மன்னன் வேடத்தில் யானைப்பாகன்தான் இருந்தான் என்றும் எல்லாருக்கும்
தெரிந்தது. இறந்த காசி மன்னனுக்கு குழந்தைகளே இல்லை. அதனால் யாவரும்
"முன்பு இருந்த அரசனே தன் ஆடைகளை இந்த யானைப் பாகனுக்குக் கொடுத்ததால் இனி
நம் மன்னன் இவனே" என்றனர்.
மந்திரியும் புரோகிதரும் சேனாதிபதியும் மக்கள் அபிப்பிராயப் படியே யானைப்பாகனை மன்னன் ஆக்கினார்கள். அவனும் நன்கு ஆட்சி புரியலானான்.
0 comments:
Post a Comment