நகைகளைத் தின்ற எலி

பல ஆண்டுகளுக்குமுன், லூனி எனும் நதிக்கரையில் அமைந்திருந்த தானி எனும் கிராமத்தில் லட்சுமணன், மனோகர் என்ற இரண்டு நண்பர்கள் வசித்து வந்தனர். லட்சுமணனுடைய மனைவி காமினி, மனோகரின் மனைவி பாய் ஆகிய இருவரும் திருமணத்திற்குப் பின் நெருங்கிய தோழிகளாயினர். லட்சுமணனும், அவன் மனைவியும் நேர்மையானவர்கள். ஆனால் மனோகர் தம்பதிக்குப் பேராசை அதிகம் இருந்தது.

தொடர்ந்து சில ஆண்டுகளாக மழை பெய்யாததால், கிராமத்தில் பஞ்சம் ஏற்பட்டது. லட்சுமணனுடைய தொழில் விவசாயத்தைச் சார்ந்ததாக இருந்ததால், அவனுடைய வருமானம் பாதிக்கப்பட்டது. அதனால் தன் மனைவியிடம் ஆலோசித்த பின், அவன் வேறொரு கிராமத்திற்குச் சென்று தொழில் செய்யத் தீர்மானித்தான்.

 கிராமத்தை விட்டுச் செல்வதற்குமுன் தங்களிடமுள்ள நகைகளை தன் நண்பன் மனோகரிடம் கொடுத்து வைக்க லட்சுமணன் எண்ணினான். இதை தன் மனைவி காமினியிடம் கூறியதும், அவளும் அதற்கு சம்மதித்தாள். அவள் தன் நகைகளை மூட்டையாகக் கட்டி, மனோகரின் வீட்டிற்கு எடுத்துச் சென்றாள். கூடவே, லட்சுமணனும் சென்றான். அப்போது மனோகர் வீட்டில் இல்லை. தங்களை வரவேற்ற அவன் மனைவி பாயிடம், "நாங்கள் மலர்தேஷ் கிராமத்திற்குச் சென்று வசிக்கத் தீர்மானம் செய்திருக்கிறோம். இங்கு பஞ்சம் நீங்கியபிறகு திரும்பி வருவோம். அதுவரை என்னுடைய தங்க நகைகளை உங்கள் வீட்டில் பாதுகாப்பாக வைத்து விட்டுச் செல்ல விரும்புகிறேன்" என்றாள்.
 அதற்குள் வெளியூர் சென்றிருந்த மனோகர் திரும்பி வந்துவிட, விஷயம் கேட்டபின் அவன் லட்சுமணனிடம் "நண்பா! தாராளமாக உன் நகைகளை எங்களிடம் விட்டுச் செல்லலாம். நீ வரும் வரை அதைப் பத்திரமாக வைத்துஇருப்போம்" என்று உறுதி கூறினான்.
பிறகு அவர்களிடம் விடை பெற்றுக் கொண்ட லட்சுமணனும், காமினியும் புதிய கிராமத்தை நோக்கிப் பயணம் தொடங்கினர். அதை அடைந்த பிறகு, லட்சுமணன் வியாபாரம் செய்யத் தீர்மானித்து ஒரு பெரிய வீட்டை வாங்கி, அதன் முன் புறத்தைக் கடையாகவும், பின்புறத்தைத் தன் இருப்பிடமாகவும் மாற்றிக் கொண்டான்.  வியாபாரத்த்தில்

லட்சுமணன் முதல் ஆண்டிலேயே வெற்றியும் கண்டான். தானியிலிருந்து வந்த சிலர் மூலமாகத் தங்கள் பழைய கிராமத்தில் பஞ்சம் நீங்கி விட்ட செய்தியைத் தெரிந்து கொண்ட லட்சுமணன் கணிசமான லாபம் கிடைத்தபிறகு ஊர் திரும்ப எண்ணினான். அவன் நினைத்தவாறே, இரண்டாவது ஆண்டில் அவனுடைய
 வியாபாரம் மிகச் செழிப்பாக நடந்தது. அவன் எதிர்பார்த்த லாபமும் கிட்டியது. ஆகையால் லட்சுமணன் தன் கடையை விற்றுவிட்டு, தன் மனைவியுடன் தானி கிராமத்திற்குத் திரும்பினான்.

லட்சுமணன் திரும்பி வந்த செய்தி மனோகருக்குக் கவலையை அளித்தது. ஏனென்றால், தன்னிடம் லட்சுமணன் கொடுத்துச் சென்ற நகைகளைத் தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள மனப்பால் குடித்த மனோகர், லட்சுமணன் திடீரென திரும்பியதால் ஏதாவது சாக்கு சொல்லி நகைகளைத் தன்னிடமே வைத்துக்கொள்ளத் திட்டமிட்டு அதை தன் மனைவியிடமும் விளக்கினான். லட்சுமணன் ஊர் திரும்பியதும், மனோகர் தம்பதி தங்கள் நண்பர்களை சந்திக்கச் செல்லவேயில்லை.

ஒருநாள் கழித்து, காமினியே மனோகர் வீட்டைத் தேடி வந்தாள். மனோகர் அப்போது வீட்டில் இல்லை. மனோகரின் மனைவியிடம், "பாய்! எனது தங்க நகைகளைத் திருப்பித் தருகிறாயா?" என்று கேட்டாள் காமினி.
உடனே, பாய் ‘கோ’வென்று கதறி, கண்ணீர் வடித்தாள்.

 ‘ஐயோ! நடந்ததை நான் எப்படிச் சொல்வேன், காமினி!" என்று புலம்பிய பாய், தொடர்ந்து, "அத்தனை நகைகளையும் எலி தின்று விட்டது. அதை உங்களிடம் எந்த முகத்தை வைத்துக் கொண்ட சொல்வது என்ற வமானத்தினால்தான், நாங்கள் இதுவரை உங்களை சந்திக்க வரவில்லை" என்று நாடகமாடினாள்.

காமினிக்கு ‘பகீர்’ என்றது. கணவனும், மனைவியும்  சேர்ந்து நடத்தும் நாடகம் இது என்று புரிந்து கொண்ட காமினி பதிலேதும் சொல்லாமல் மௌனமாக வீடு திரும்பினாள். தன் கணவனிடம் மனோகர் தம்பதியின் நயவஞ்சகத்தைப் பற்றிக் கூறி அழுத காமினியை, லட்சுமணன் சமாதானம் செய்தான்.
ஒருநாள் லட்சுமணன் மனோகரைத் தேடிச் சென்றான். தங்களுடைய நகைகளைப் பற்றி வந்த நாள் முதல் லட்சுமணன் எதுவும் கேட்காததால், தாங்கள் கூறிய காரணத்தை அவன் நம்பிவிட்டான் என்று எண்ணிய மனோகர் அவனை உற்சாகமாக வரவேற்றான்.

"எனக்கு ஒரு உதவி செய்வாயா?" என்று லட்சுமணன் கேட்டதும், "சொல் நண்பா! என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறேன்" என்றான் மனோகர்.
"காமினிக்கு உடல் நலம் சரியில்லை. எனக்கு வெளியூர் செல்ல வேண்டி இருக்கிறது. அவளுக்குத் துணையாக உன் மகனை அனுப்பி வைக்க முடியுமா?" என்று லட்சுமணன் கேட்டான்.

உடனே எந்தவிதத் தயக்கமுமின்றி தன் பத்து வயது மகனை மனோகர் அனுப்பி வைக்க சம்மதித்தான். அவனை அழைத்துக் கொண்டு வெளியூர் சென்ற லட்சுமணன் தன் உறவினர் வீட்டிற்குச் சென்றான். அங்கேயே அந்த சிறுவனை விட்டுவிட்டு தான் மட்டும் ஊர் திரும்பினான். உறவினர் வீட்டில் தன் வயதையொட்ட பிள்ளைகள் இருந்ததால், மனோகரின் மகன் அவர்களுடன் உற்சாகமாக விளையாடத் தொடங்கினான்.
இரண்டு, மூன்று நாள்கள் சென்றும் தம்பதி லட்சுமணன் திருப்பிஅனுப்பாததால் கவலைகொண்ட மனோகர் தம்பதி லட்சுமணன் வீட்டிற்குச் சென்றனர். இப்போதுகாமினி அவர்களைக் கண்டதும் அழத் தொடங்கினாள். 

"நடந்ததை என் வாயினால் எப்படிச் சொல்வேன்? வரும் வழியில் உங்கள் பிள்ளையை ஒரு கழுகு தூக்கிச் சென்று விட்டது. ஆகையால் நாங்கள் இதுவரை உங்களைச் சந்திக்க வரவில்லை" என்று காமினி நாடகமாடினாள்.
பயங்கரக் கோபம் கொண்ட மனோகர் தம்பதி நேராக கிராமத் தலைவரிடம் சென்று புகார் செய்தனர். கிராமத் தலைவரும் விசாரணை செய்வதற்காக அவர்களை அழைத்துக் கொண்டு லட்சுமணன் வீட்டை அடைந்தார்.
"என்னப்பா லட்சுமணா? மனோகரின் பிள்ளையை கழுகு தூக்கிச் சென்று  விட்டதாகக் கூறினாயாமே!" என்று கிராமத்தலைவர் கேட்டார்.

"ஐயா! தங்க நகைகளை எலி தின்றது என்பது உண்மையானால், பத்து வயது பிள்ளையை கழுகு தூக்கிச் சென்றது என்பது மட்டும் ஏன் உண்மையாக இருக்கக்கூடாது?" என்று லட்சுமணன் எதிர்க்கேள்வி கேட்டான். "நகைகளை எலி தின்றதா? என்னப்பா சொல்கிறாய்?"  என்று தலைவர் வியப்புடன் கேட்க, நடந்த விஷயத்தை லட்சுமணன் அவரிடம் விளக்கினான்.
உடனே பாய், "ஐயா! நாங்கள் சொன்னது பொய்தான்! அவர்களுடைய நகைகள் எங்களிடம் பத்திரமாக உள்ளன. அவற்றை இப்போதே திருப்பித் தந்து விடுகிறேன். தயவு செய்து என் மகனைத் திருப்பிக் கொடுக்கச் சொல்லுங்கள்" என்று கெஞ்சினாள்.

"அவர்களுடைய மகன் என் உறவினர் வீட்டில் பத்திரமாக இருக்கிறான். என்னுடைய நகைகள் கிடைத்ததும், நானும் அவனைத் திருப்பி அனுப்புகிறேன்" என்ற லட்சுமணன் மனோகரை நோக்கி "வினை விதைத்தவன் வினை அறுப்பான்" என்ற பழமொழியின் பொருளை இப்போதாவது புரிந்து கொள் நண்பா!" என்று கூறினான்.

 

0 comments:

Post a Comment

Flag Counter