உழைத்துக் கொடு


 பல நூற்றாண்டுகளுக்கு முன் தமிழகத்தை ஆண்ட மன்னன் கொடை வள்ளல் என்ற பெயர் பெற்றிருந்தான். அவனிடம்  யார் போய் எதைக் கேட்டாலும் அவன் அதைக் கொடுத்து வரவே அவன் புகழ் எங்கும் பரவி இருந்தது. பண்டிதர்கள் பாமரர்கள் என்று பாரபட்சம் காட்டாமல் பணம், பண்டம், நவரத்தினம், தானியம், என்று அவன் கொடுத்து வந்தது அவனை யாவர் பார்வையிலும் மிகவும் உயர்த்தி விட்டது.

ஒருமுறை மன்னன் தன் பிறந்தநாளின் போது மக்களுக்குப் பரிசுகளைக் கொடுத்துக் கொண்டிருந்தான். பரிசு பெற்றுக் கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் நின்று பரிசுகளை வாங்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். மக்கள் கூட்டம் குறைந்து கொண்டே போயிற்று. கடைசியில் ஒரே ஒரு அந்தணர் மட்டும் பொறுமையாக வெகு நேரமாக நின்று கொண்டிருப்பதை மன்னன் கவனித்தான். அவன் அவரிடம் "பண்டிதரே! ஏன் அசையாமல் நின்று கொண்டிருக்கிறீர்கள்? வாருங்கள். உங்களுக்கு என்ன வேண்டுமோ தயங்காமல் கேளுங்கள். அதைக் கொடுக்கிறேன்" என்றான்.
அந்த அந்தணரும் "அரசே! எனக்குப் பொன்னும் வேண்டாம். மணியோ முத்தோ மானியமோ எதுவும் வேண்டாம். ஆனால் நீங்களாக நேற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்துச் சம்பாதித்து வாங்கிய பொருள் ஏதாவது உங்களிடம் இருந்தால் அதைக் கொடுங்கள். மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொள்கிறேன்" என்றார்.

அதைக் கேட்ட மன்னன் திகைத்துப் போனான். அந்தணர் கூறியது அவன் மனதில் சுருக்கென்று தைத்தது. ஆம். அவன் தன் பொருள் என்று எதை எல்லாம் எண்ணினானோ அவை தான் உழைத்துச் சம்பாதித்தவை அல்ல என்பதை அறிந்து கொண்டான். ஆம் அவை யாவும் மக்கள் கொடுத்தவரிப் பணத்தில் வாங்கப் பட்ட பொருள்களே! இதை உணர்ந்த அவன் அந்த அந்தணரிடம் "பண்டிதரே! நானாக உழைத்துச் சம்பாதித்தது என்று எதுவும் இப்போது என்னிடம் இல்லை. 
 
 என்னிடம் இப்போது உள்ளவற்றில் நீங்கள் எதை வேண்டுமானாலும் கேளுங்கள். கொடுக்கிறேன்" என்று சற்று நாணிக் குறுகிக் கூறினான்.
அந்தணரே "அரசே! இப்போது உங்களிடம் உள்ள எதையும் நான் கேட்க மாட்டேன். எனவே நீங்கள் உழைத்து சம்பாதித்தது எதுவானாலும் ஏற்றுக் கொள்வேன். மற்றவை எவ்வளவு விலை உயர்ந்தனவாக இருந்தாலும் அவை எனக்கு வேண்டவே வேண்டாமே" என்று உறுதி படக் கூறினார். அப்போது மன்னன் "பண்டிதரே! நீங்கள் தயவு செய்து நாளைக்கு வந்தால் நீங்கள் கேட்டபடியே பொருளைக் கொடுக்கிறேன்" என்றான். அந்தணரும் மன்னனை வணங்கி விட்டு சிரித்தவாறே சென்றார்.

மன்னனுக்கு அந்தணர் கூறியதன் பொருள் விளங்கி விட்டது. மன்னனுக்கு மக்களிடமிருந்து கிடைப்பதெல்லாம் அவர்கள் உழைத்துச் சம்பாதித்துக் கொடுத்த பணமே என்றும் அவன் அதைத் தன் பணமாகக் கருதி செலவு செய்வது சரஇல்ல என்றும் உணர்ந்தான். அதனால் அவர் கூறியபடி அந்தணருக்கு ஒன்றை கொடுக்க வேண்டும் என்று அவன் தீர்மானித்துக் கொண்டான்.

மன்னன் தன் பட்டாடைகளைக் களைந்து விட்டு சாதாரணக் கூலியாள் போல ஆடைகளை அணிந்து கொண்டு அரண்மனையை விட்டு வெளியே நடந்து சென்றான். அவன் தான் செய்யக் கூடிய வேலை ஏதாவது கிடைக்குமா என்று அலைந்து பார்த்தான். ஆனால் ஒரு வேலை கூடக்கிடைக்கவில்லை. கடைசியில் ஒரு மீனவர் குப்பத்திற்குப் போய் பல மீனவர்களிடம் தனக்கு வேலை கொடுக்கும்படிக் கேட்டான். அநேகமாக எல்லோருமே வேலை இல்லை என்றே சொல்லி விட்டார்கள். ஆனால் ஒருவன் மட்டும் அவனது நிலையைக் கண்டு பரிதாபப் பட்டு "நான் உனக்கு வேலை கொடுக்கிறேன். நீ வலை வீசி மீன் பிடித்துக் கொண்டு வரவேண்டும். நீ கொண்டு வருவனவற்றில் பெரிய மீன்களாக இருந்தால் ஒரு மீனிற்கு ஒரு செப்புக் காசு வீதம் கொடுப்பேன். சிறிய மீனாக இருந்தால் ஒரு மீனிற்கு ஒரு சோழி வீதம் தான் கொடுப்பேன்" என்று கூறி மீன் பிடிக்கும் வலையை அவனிடம் கொடுத்தான்.
 
 அவனும் வலையை வாங்கிக் கொண்டு கடலுக்குப் போய் வலையை விரித்துப் போட்டான். அதில் ஒரு பெரிய மீனும் ஒரு சிறிய மீனும் சிக்கின. அவனும் கிடைத்தது போதும் என்று திருப்தி அடைந்து அந்த மீன்களைக் கொண்டு போய் மீனவனிடம் கொடுக்கவே, மீனவனும் ஒரு செப்புக்காசையும் ஒரு சோழியையும் கொடுத்தான். அவனும் அதை வாங்கிக் கொண்டு அரண்மனைக்குச் சென்றான்.

மறுநாள் மன்னன் தர்பாருக்கு வந்தபோது அங்கே அந்தணர் நின்று கொண்டிருப்பதைக் கண்டான். அவன் அவரைத் தன்னருகே அழைத்து "பண்டிதரே! நேற்றிரவு நான் வேலை செய்து ஒரு செப்புக்காசும் ஒரு சோழியும் சம்பாதித்தேன். அவற்றை உங்களுக்கு தானமாகக் கொடுக்கிறேன். பெற்றுக் கொள்ளுங்கள்" என்றான்.

அந்தணரும் மகிழ்ச்சியுடன் அவற்றை வாங்கிக் கொண்டு "இவை போன்ற பொருள்களைத் தான் விரும்புவது" எனக்கூறி மன்னனை வணங்கிவிட்டுத் தன் வீட்டிற்குச் சென்றார். அங்கு அவரது மனைவி மன்னனைக் காணச் சென்ற தன் கணவன் விலையுயர்ந்த பொருள்களை சன்மானமாகப் பெற்று எடுத்துக் கொண்டு வருவார் என்று எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தாள். அவர் வந்ததும் ஆவலுடன் அவள் "சன்மானம் கிடைத்ததா? அவை என்ன? யாராவது அவற்றைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்களா?" என்று ஆவலுடன் கேட்டாள்.

அவரும் "மன்னர் விலையே மதிக்க முடியாத பொருள்களை சன்மானமாகக் கொடுத்திருக்கிறார்" என்று சிரித்துக் கொண்டே கூறி தாம் பெற்ற ஒரு செப்புக் காசையும் ஒரு சோழியையும் அவளிடம் கொடுத்தார். அவற்றை வாங்கிப் பார்த்த அவள் ஏமாற்றமும் ஆத்திரமும் அடைந்து "பூ இவ்வளவு தானா உங்களுக்குக் கிடைத்த சன்மானம்? இவற்றைப் பெற்றுக் கொள்ளத்தான் இரண்டு நாட்களாக அரண்மனைக்குப் போய் மன்னரைப் பார்த்தீர்களா?" என்று அழாத குறையாகக் கேட்டாள்.
 
 அந்தணரோ! "இவை மன்னரே உழைத்துச் சம்பாதித்தவை. இவற்றை எனக்குக் கொடுத்தது மிகமிக விலையுயர்ந்த பொருள்களைக் கொடுத்ததற்குச் சமம். இவை வேறு யாருக்குமே கிடைக்காதே" என்றார். அதைக் கேட்ட அவரது மனைவிக்குக் கோபமே வந்து விட்டது. அவற்றைத் தூக்கித் தன் வீட்டு வாசலில் எறிந்து அவள் "ஒரு செப்புக் காசும் ஒரு சோழியும் விலையுயர்ந்த பொருள்களா? யாருக்கு வேண்டும் அவை?" என்று கூவினாள். அந்தணர் வீண் சண்டை எதற்கு என்று எதுவும் பேசவில்லை.

அன்றைய வேலைகளை இருவரும் செய்து விட்டு இரவானதும் படுத்துத் தூங்கினார்கள். மறுநாள் காலையில் அவர்கள் எழுந்து வாசலைப் பார்த்த போது அங்கு இரண்டு மரங்கள் முளைத்து உயர்ந்து நிற்பதைக் கண்டார்கள். ஒரு மரத்தில் தங்கக் காசுகளாகத் தொங்கிக் கொண்டிருந்தன. மற்ற மரத்தில் வெள்ளிச் சோழிகளாக இருந்தன. அவற்றைக் கண்டு இருவரும் ஆச்சரியப்பட்டு தங்க நாணயங்களையும் வெள்ளிச் சோழிகளையும் பறித்து எடுத்தார்கள். அந்தணர் தம் மனைவியிடம் "பார்த்தாயா! நான் சொன்னது சரிதானே! செப்புக்காசும் சோழியும் மரங்களாக முளைத்தன தங்கக் காசுகளையும் வெள்ளிச்சோழிகளையும் கொடுத்திருக்கின்றன. அவை விலையுயர்ந்த பொருள்கள் தாமே?" என்று கேட்டாள். 

அவரது மனைவியும் "ஆம். விலையுயர்ந்தவையே. அப்போது அவற்றின் மதிப்பு எனக்குத் தெரியவில்லை தான் எதையும் உழைத்துச் சம்பாதித்தாலே அதற்கு மதிப்பே அதிகம் தான்" என்றாள். அந்தணர் அவற்றை விற்றுப் பணமாக்கி சுகமாக வாழ்ந்து வந்தார்.

0 comments:

Post a Comment

Flag Counter