பொருத்தமான மணமகன்


 பல ஆண்டுகளுக்கு முன், காஷ்மீரத்தை ஆண்டு வந்த ஒரு நல்ல தயாள குணமுள்ள மன்னனுக்கு மூன்று புதல்வர்கள் இருந்தனர். அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகி அழகிலும், பராக்கிரமத்திலும் சமமாக இருந்தனர். மூவரும் தலைநகரத்திலிருந்து தொலைவில் தங்கி, பல ஆண்டுகளாக அரசாளுங் கலைகளிலும், போர் முறைகளிலும் தீவிரப் பயிற்சி பெற்று வந்தனர். அம்மூவர் மேலும் சமமான அன்பு பூண்டிருந்த மன்னன், பயிற்சிக் காலம் முடிந்ததும் அவர்களை தலை நகரத்திற்கு திரும்புமாறு அழைத்தான். அவர்களுக்குத் திருமணம் செய்விக்கும் நேரம் வந்துவிட்டது என்றும் உணர்ந்தான்.

தன் புதல்வர்களுக்குப் பொருத்தமான பெண்களைத் தேடி நாட்டின் எல்லா இடங்களுக்கும், மற்றும் பிற நாடுகளுக்கும் தூதுவர்களை அனுப்பி விசாரித்து வந்தான். இப்படஇனுப்பிய தூதுவர்களில் ஒருவன் திரும்பி வந்து ஒரு நடன மாதின் அழகான பெண்ணை தான் பார்த்துவிட்டு வந்ததாகவும், அந்த நடன மாது தூதுவனிடம் விவரங்களைக் கேட்டுவிட்டு, மூத்த இளவரசனையே தன் மகளுக்குத் திருமணம் புரிய விரும்புவதாகவும் சொன்னான். காரணம், மூத்த இளவரசனுக்குத்தான் பிற்காலத்தில் பட்டம் சூட்டுவார்கள் ஆதலால் தன் மகள் பட்டத்து ராணியாகி விடுவாள் என்பதுதான்.

மன்னனுடைய இரண்டாவது புதல்வனுக்கு இசையிலும், ஓவியம் தீட்டுவதிலும் மிகவும் ஆர்வம் இருந்ததைக் கண்டு, மன்னன் மேற்கூறிய பெண் அவனுக்குப் பொருத்தமாக இருப்பாள் என நினைத்தான். ஆனால் தனது புதல்வர்களின் விருப்பத்தை மீறி எதுவும் செய்ய விரும்பாததால் ஒரு சோதனை நிகழ்த்திப் பார்க்க தீர்மானித்தான்.

 தன்னுடைய புதல்வர்களை அழைத்து அவர்களிடம் மேற்கூறிய பெண்ணைப்பற்றிக் கூறினான். பிறகு அவர்களை ஓர் ஆறுமாத காலத்திற்கு இதுவரை செல்லாத வெளி நாடுகளுக்கு பயணம் செய்து இதுவரை யாரும் பார்த்திராத பரிசுப்பொருட்களை அந்தப் பெண்ணிற்காக வாங்கி வரச் சொன்னான். இவற்றில் யார் கொண்டு வரும் பரிசு மிகவும் அற்புதமாக உள்ளதோ, அவனே அந்தப் பெண்ணை மணக்கலாம் என்றும் கூறினான்.

இதைக் கேட்ட மூவரும் மகிழ்ச்சியுடன் மறுநாளே மூன்று வெவ்வேறு திசைகளில் குதிரை மீதேறி பயணமாயினர். ஆறுமாதங்கழித்து அரண்மனைக்குத் திரும்புமுன் தாம் மூவரும் ஒரு பொது இடத்தில் சந்திக்க வேண்டும் என்றும் தீர்மானித்துக் கொண்டனர்.

மூத்தவன் கிழக்கு திசையிலும், இரண்டாமவன் மேற்கிலும், மூன்றாமவன் தெற்கிலும் இவ்வாறு வெவ்வேறு திசைகளை நோக்கிப் புறப்பட்டனர். மூத்தவன் பல இடங்களுக்குச் சென்றும், பல புதிய பொருட்களைப் பார்த்தும், அதிசயமாக ஒன்றும் தென்படவில்லை. இறுதியில் வெறுங்கையுடன் திரும்ப வேண்டியதுதானா என்று வருத்தப்பட ஆரம்பித்தான்.

இறுதியில் ஓரிடத்தில் அவன் சில அதிசயக் காட்சிகளைக் கண்டான். அந்த இடத்தில் ஒரே மரத்தில் பலவிதப் பழங்களையும், பறவைகள் மனிதர்கள் போல் பேசுவதையும் கண்டான். பழங்களைப் பறித்து எடுத்துச் செல்வது வீணான வேலை என்றும், பறவைகளைப் பிடிப்பது இயலாத காரியம் என்றும் உணர்ந்து வேறு ஏதாவது அதிசயப் பொருள் கிடைக்குமா எனத் தேடத் தொடங்கினான்.

அப்போது ஒரு வியாபாரி பல அழகான கம்பள விரிப்புகளை விற்கக் கண்டான். அவற்றின் விலை ஒன்றுக்கு ஐயாயிரம் ரூபாய் என்று அறிந்த இளவரசன் வியப்புடன் அதிக விலைக்குக் காரணம் கேட்டான்.
 அதற்கு அந்த வியாபாரி அந்த கம்பளத்தில் உட்கார்ந்து எங்கு செல்ல விரும்பினாலும் அங்கே பறந்து சென்று விடலாம் எனக் கூறவே, ஒரு அழகான கம்பளத்தை விலைக்கு வாங்கிக் கொண்டு, நாடு திரும்பிச் செல்லத் தொடங்கினான்.
இரண்டாவது இளவரசனும் பல இடங்களைத் தேடி அவனுக்கும் எங்கும் அபூர்வமான பொருள் கிடைக்கவில்லை.

இறுதியில் ஒரு ஊரில் யாருமே வசிக்காத வீடுகளும், விற்பனைக்குப் பொருட்கள் இருந்தும் விற்பனையாளர்களே இல்லாத கடைகளையும் கண்டு வியப்புற்றான்.
யாருமேயில்லாத ஒரு தோட்டத்தில் ஒரு மாதுளை மரத்தில் பழங்கள் இருந்ததைக் கண்டு, அதைப் பறிக்க முயற்சிக்கையில், திடீரென ஒரு தோட்டக்காரன் வந்து, "அதைப் பறிக்காதே" என்றான். "ஏன்?" என்று இளவரசன் கேட்க, "அவை விலையுயர்ந்தவை. ஒன்றின் விலை ஐந்தாயிரம் ரூபாய்" என்றான் அந்தத் தோட்டக்காரன்.

மேலும் விசாரித்த போது, அந்தப் பழம் எந்த வியாதியையும் குணப்படுத்த வல்லது என்றும், அதைப் பிளந்து அதிலுள்ள முத்துக்களை எடுத்து விட்டாலும் மீண்டும் பழம் பழைய நிலைக்கே முழுதாக ஆகி விடும் என்றும் சொன்னான். உடனே அந்தப் பழங்களில் ஒன்றை வாங்கிய இளவரசன், தன் நாட்டை நோக்கிப்  பயணமானான்.

மூன்றாமவன் வெகுதூரம் தென்திசையில் பயணம் செய்தபின், ஓர் அதிசயமான ஊரில் கண்ணாடியால் செய்யப்பட்ட வீடுகளைப் பார்த்தான். அந்த ஊர் மக்களும் கண்ணாடியாலான உடையை அணிந்திருந்தார்கள்.
ஓரு கடையில் அழகான முகம் பார்க்கும் கண்ணாடிகளைக் கண்டான். ஒன்றின் விலை ஐயாயிரம் ரூபாய் என அறிந்து வாங்க வேண்டாம் என்று நினைத்தவனைப் பார்த்து கடைக்காரன் அது அபூர்வ சக்தியுடையது என்றும், தான் பார்க்க விரும்பும் இடத்தையோ, நபரையோ மனதில் நினைத்துக் கொண்டு அந்தக் கண்ணாடியில் பார்த்தால் அவர்களை அல்லது அந்த இடத்தை கண்ணாடியில் பார்க்கலாம் என்றான்.
 தன் சகோதரர்களை நினைத்துக் கொண்டே ஒரு கண்ணாடியில் பார்க்க, அவர்களது உருவம் தெரியக் கண்டான். பரிசுப் பொருட்களுடன் அவர்கள் நாடு திரும்புவதைக் கண்டவுடன், உடனே ஒரு கண்ணாடியை வாங்கிக் கொண்டு பயணமானான்.

மூவரும் ஒப்பந்தப்படியே நாடு திரும்புமுன் ஒரு பொது இடத்தில் சந்தித்தனர். மூவரும் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தபோது, திடீரென அந்தப் பெண்ணின் ஞாபகம் அவர்களுக்கு வந்தது. மூன்றாவது இளவரசன் தன் ஆர்வத்தைக் கட்டுப் படுத்த முடியாமல், தனது கண்ணாடியை வெளியில் எடுத்து அவளைப் பற்றி நினைத்தான். ஆனால் கண்ணாடியில் தெரிந்த காட்சியைக் கண்டு, "அடக் கடவுளே" என்று கூறினான்.

அவனது சகோதரர்களும் ஆவலுடன் எட்டிப் பார்க்க, அந்தப் பெண் உடல் நலக் குறைவால் படுத்த படுக்கையாக இருப்பதைக் கண்டார்கள். அந்தப் பெண்ணின் தாய் ஏதோ மருந்து கொடுத்துக் கொண்டிருக்கக் கண்டார்கள். அப்போது இரண்டாமவனுக்குத் தன்னிடமுள்ள மாதுளம் பழத்தின் ஞாபகம் வந்தது. "ஆகா, இப்போதே நான் சென்று அவளுக்கு இந்த மாதுளம்பழத்தைக் கொடுத்தால் குணமாகி விடுவாள் ஆனால் அவ்வளவு தூரம் உடனே எப்படி போக முடியும்" என்று கூறினான்.

உடனே மூத்தவன் அந்தப் பெண்ணிற்குப் பரிசாக வாங்கி வந்த  தன்னிடமுள்ள கம்பளத்தைக் காட்டி, அதில் மற்றவர்களையும் உட்காரச் சொன்னான். மூவரும் அந்தக் கம்பளத்தில் பறந்து போய் அந்த நடனமாதின் இருப்பிடத்தை  வந்து அடைந்தனர். மூவரும் நடனமாதின் பெண்ணை குணப்படுத்த வந்திருப்பதாகக் கூறியதும் நடனமாது அம்மூவரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்றாள்.

படுத்த படுக்கையாயிருந்த அந்தப் பெண்ணிற்கு இரண்டாமவன் மாதுளம் பழத்தை வெட்டி அதிலுள்ள விதைகளை எடுத்து அந்தப் பெண்ணிற்கு சாப்பிட கொடுத்தான். அதை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அந்தப் பெண் மலர்ந்த முகத்துடன் எழுந்து உட்கார்ந்து கொண்டு, "அம்மா, நான் நன்றாக ஆகிவிட்டேன். என் வியாதி மறைந்து விட்டது," என்று மகிழ்ச்சியுடன் கூறினாள்.
 அவர்கள் இளவரசர்கள் என்றும், அதில் ஒருவன் தான் தன்னை மணந்து கொள்ளப் போகிறான் என்று  அறியாத அந்தப் பெண்ணும், அவள் தாயும் தங்களது மனமார்ந்த நன்றியை அவர்களுக்குத் தெரிவித்தனர். இளவரசர்களும் அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு, தாங்கள் குதிரைகளை நிறுத்தி வைத்துள்ள இடத்திற்கும் பின்னர் அங்கிருந்து தங்கள் அரண்மனையை நோக்கிக் கம்பளத்தில் ஏறிப் பறந்தனர்.

அரண்மனையை அடைந்து தங்கள் தந்தையைக் கண்டு தங்கள் வீட்டிற்கு மருமகளாக வரும் பெண்ணை எந்த நிலமையில் அவர்கள் கண்டனர் என்று நடந்தவற்றைக் கூறினர். ஆனால் இதையெல்லாம் கேட்ட பிறகும் கூட தமது புதல்வர்களுக்குள் யார் அந்தப் பெண்ணை மணக்கத் தகுதியானவன் என்ற முடிவுக்கு மன்னனால் வர முடியவில்லை. அந்தப் பெண்ணையும், அவள் தாயையும் தங்கள் அரண்மனைக்கு அழைத்து அந்தப் பொறுப்பை அவர்களிடமே விட்டு விடலாம் என நினைத்தான். அதன்படியே அவர்களை அழைக்க, இருவரும் அரண்மனைக்கு வந்தனர். இருவரையும் ராஜமரியாதையுடன் வரவேற்று சபையில் அனைவருக்கும் முன்பு தன்னுடைய புதல்வர்களின் பயண அனுபவங்களையும் அவர்கள் எவ்வாறு அந்தப் பெண்ணை குணப்படுத்தினர் என்ற விவரங்களையும் மன்னன் விளக்கிக் கூறினான்.

"என்னுடைய புதல்வர்கள் தாங்கள் யார் என்பதை தங்களிடம் தெரிவிக்கவில்லை. ஆனால் அவர்கள் உங்களுக்குச் செய்த உதவிக்கு உங்களிடமிருந்து அவர்கள் விடை பெறும்பொழுது நன்றி தெரிவித்து விட்டீர்கள். நீங்கள் நடந்தவற்றை கோர்வையாக எண்ணிப்பார்த்தீர்கள் என்றால் உண்மையிலேயே என் இரண்டாவது புதல்வன் கொண்டு வந்த மாதுளம் பழம் தான் தங்கள் பெண்ணைக் காப்பாற்றியது.

 ஆனால் தங்கள் பெண் உடல் நலக்குறைவாக இருக்கிறாள் என்று கண்டு பிடித்ததே என்னுடைய மூன்றாவது மகன்தான். என் மூத்தமகனது கம்பளம் மட்டும் இல்லாவிட்டால் சரியான நேரத்தில் அந்த மாதுளம் பழம் உங்கள் பெண்ணிற்கு கிடைத்திருக்காது. ஆக, உங்கள் பெண் குணமானதில் மூவருக்குமே சமபங்கு உண்டு. அந்த மூவரையும் உங்கள் எதிரே வரவழைக்கிறேன்.

மணாளனாக எந்தப் புதல்வனைத் தேர்ந்தெடுப்பது என்று எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்" என்றான் மன்னன்.
மன்னன் அவர்கள் இருவரிடம் அந்த பொறுப்பை விட்டு விட்டு, தன் மூன்று மகன்களையும் இருவர் முன் நிறுத்தினான். மூவரையும் அரச உடையில் கண்டு களித்த இரு விருந்தாளிகளும் மூவரையும் உற்று கவனித்தனர்.
சற்று நேரத்திற்குப் பின் பெண்ணின் அம்மா, ‘அரசே, உங்கள் இரண்டாவது மகன்தான் என் பெண் உயிர் பிழைக்க முக்கியக் காரணமாயிருந்தவன். அவன் மட்டும் அந்தப் பழம் கொண்டு வரவில்லையெனில், மூவரும் சரியான நேரத்தில் வந்தும் பயன் இருந்திருக்காது. ஆகவே அவனையே மணமகனாகத் தேர்ந்தெடுக்க விரும்புகிறேன்," என்றாள். இதுவரை மௌனமாக இருந்த அந்தப்பெண்ணும், "அம்மா. நீ சொல்வது சரி," என்று சொல்லி நாணத்தில் தலை குனிந்தாள்.

ஏற்கனவே கலையார்வம் கொண்ட தனது இரண்டாவது புதல்வனுக்குத்தான் அந்தப் பெண் பொருத்தமானவள் என்று தான் நினைத்தபடியே நடந்தது குறித்து மன்னன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். கூடவே, "எனது இரண்டாவது புதல்வன் முதலில் திருமணம் புரிவதால், அவனது மனைவியே பட்டத்து ராணி ஆவாள்," என்று அறிவித்தான்.

இதைத்தான் அந்தப் பெண்ணின் தாயும் ஆரம்பத்திலேயே விரும்பினாள். இவ்வாறு திருமணம் எல்லோரது விருப்பத்திற்கிணங்க நடந்து முடிந்தது.

0 comments:

Post a Comment

Flag Counter