நவீன வேதாளக் கதை

 

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீது ஏறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழே இறங்கி அவன் அதைத் தூக்கிச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்கையில் அதனுள் இருந்த வேதாளம் எள்ளி நகைத்து "மன்னனே! நீ இந்த பயங்கர நள்ளிரவில் விடா முயற்சியுடன் ஏதோ ஒரு வேலையைச் செய்ய முயல்வதைப் பார்த்தால் யாரோ இதைச் செய்யும் படி உனக்கு அறிவுரை கூறி இருக்கிறார் என்றே நினைக்கிறேன். அரசர்களுக்கும் அவ்வப்போது ஆலோசனைகளை
 அமைச்சர்கள் கூறி வருவார்கள். அவற்றில் சில ஏற்கத்தக்கனவாக இருக்கும் மற்றவை புறக்கணிக்கத் தக்கதாய் இருக்கும்.
எனவே அரசர்கள் அந்த அறிவுரைகள் ஏற்கத்தக்கனவா என்று சிந்தித்து செயல்பட வேண்டும். ஏனெனில் அரசன் சொல்வது தான் சட்டம். அதுபோல ஒரு கிராமத்தில் அதன் கிராம அதிகாரி கூறுவதே சட்டம். இது பற்றி விளக்க ஒரு கதையைச் சொல்கிறேன். கவனமாகக் கேள்" என்று கதையை ஆரம்பித்தது.

தகடூர் என்ற கிராமத்தில் தங்கப்பன் தான் கிராம அதிகாரி. அவன் எந்த விஷயத்திலும் அந்த ஊரின் பண்டிதரும் அறிஞருமான நீலகண்டரின் அறிவுரைகேட்டு அதன் படி நடந்து வந்தான். நீலகண்டரும் யாராவது தவறு செய்தால் அதை ஏன் செய்தார் என்று நன்கு யோசித்து தக்க தண்டனை கொடுப்பதுப் பற்றி கிராம அதிகாரியிடம் கூறுவார். கிராம அதிகாரியும் அந்த அறிவுரைப்படி நடப்பான். அது போல ஊரில் ஒருவர் ஒரு நற்செயலைச் செய்தால் அதைப் பாராட்டிப் பரிசு அளிப்பதானால் அதனால் என்ன பயன்கள் விளையும் என அவர் யோசித்த பிறகே கிராம அதிகாரிக்கு அறிவுரை கூறுவார்.

அந்த ஊரில் முருகைய்யன் என்ற கிழவன் இருந்தான். அவன் திடீரென நோய்வாய்ப் பட்டு படுத்த படுக்கையாகக் கிடந்தான். அவன் சம்பாதித்துத் தான் தன் மகன் மருதனை வளர்த்து வந்தான். மருதன் சோம்பேறி.எந்த வேலையிலும் நாட்டம் கொள்ளாத இளைஞன். தன் தந்தையின் நிலை கண்டு அவன் சாப்பாட்டிற்காக வீடு வீடாகப் போய் பிச்சை எடுக்கலானான்.

அவன் நீலகண்டரின் வீட்டிற்குப் போய் பிச்சை கேட்ட போது அவர் "நீ ஏன் ஏதாவது வேலை செய்து உன் தந்தைக்கு சாப்பாடு போடக்கூடாது? இவ்வளவு நாட்களாக அவன் வேலை செய்து உனக்குச்சாப்பாடு போட்டு வந்ததால் தானே நீ சோம்பேறியாக ஊரில் திரிந்து கொண்டு இருந்தாய்? பிச்சை எடுப்பது பெரும் குற்றம். நீயோ வேலை செய்யாமல் பிறர் உழைப்பால் கிடைப்பதைச் சாப்பிட விரும்புகிறாய். இது குற்றம். நீ முதல் தடவையாகச் செய்ததால் தண்டிக்காமல் விட்டு விடுகிறன்.

ஆனால் இன்னொரு முறை இதைச் செய்தால் கிராம அதிகாரியிடம் சொல்லி உன்னைச் சிறைக்குள் தள்ளுவேன்" என்றார். அதைக் கேட்ட மருதன் பயந்து போய் ஊரை விட்டே ஓடி விட்டான்.

அதனால் அவனது தந்தை முருகைய்யன் அநாதையாகி விட்டான். அப்போது நீலகண்டர் கிராம அதிகாரியிடம் நடந்ததைக் கூறி" கிராமத்தின் அநாதைகளையும் உடல் ஊனமுற்றவர்களையும் பராமரிக்க வேண்டியது கிராம அதிகாரியின் கடமை. எனவே முருகைய்யனை இந்த கிராமத்தவர் முறைபோட்டுக் கொண்டு கவனித்து வரவேண்டும் என்று கட்டளை இடுங்கள்" என்று கட்டளை இடுங்கள்" என்று யோசனை கூறினார் கிராம அதிகாரியும் அதுசரியே எண்ணி அவ்வாறு கட்டளையும் பிறப்பித்தான்.

அந்த ஊரில் காலன், மாலன், வேலன் என்ற மூன்று இளைஞர்கள் இருந்தார்கள். அவர்கள் போக்கிரிகள் அவர்கள் கிராம அதிகாரியிடம் "எங்களுக்கு வேலை கொடுங்கள். அப்போது தான் எங்கள் பெற்றோர்களைக் காப்பாற்ற முடியும். வேலை கொடுக்கவிட்டால் நாங்கள் ஊரை விட்டே போய் விடுவோம். அப்போது எங்கள் பெற்றோரை பராமரிக்கும் பொறுப்பு உங்கள் மீது தான்விழும்" என்றார்கள்.

இதே சமயம் அவர்கள் சொன்னதைக் கேட்டுக் கொண்டே வந்த நீலகண்டர் "இவர்களை ஊரிலிருந்து போய் விட அனுமதித்து விடு. இவர்களது பெற்றோர்களை கவனித்துக் கொள்ள ஏற்பாடு செய்வோம்" என்றார். அதைக் கேட்டு அந்த மூன்று போக்கிரிகளும் சிரித்துக் கொண்டே அந்த ஊரிலிருந்து வெளியேறினார்கள். நீலகண்டரும் கிராம அதிகாரியிடம். "கவலைப் படாதீர்கள். இவர்கள் மட்டும் அல்ல. மருதனும் விரைவில் திரும்பி வந்து தம் பெற்றோர்களை கவனித்துக் கொள்ளத்தான் போகிறான்" என்றார். இதற்குப் பிறகு யாரும் வந்து கிராம அதிகாரியிடம் எவ்விதப் புகாரும் செய்யவில்லை.

சில நாட்களுக்குப் பிறகு தகடூர் கிராம அதிகாரி தங்கப்பனுக்கு காலனும் மாலனும், வேலனும் மருதனும் கோட்டூரில் வேலை செய்து பணம்

சம்பாதித்து வருகிறார்கள் என்று தெரிந்தது. ஆனால் அவர்கள்  தங்கப்பனைப் பற்றி அவதூறாகப் பேசித் தூற்றி வருகிறார்களாம்.
அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள்ள என்று பார்க்க தங்கப்பன் ஆவல் கொண்டான்.தங்கப்பன் தன் வண்டிக்காரன் வரதனிடம் "வரதா! நம் வில் வண்டியைக் கட்டிக் கொண்டுவா. நாம் கோட்டூர் போகலாம்" என்றான். வரதனும் வண்டியைப் பூட்டிக் கொண்டு வந்து நிறுத்தவே தங்கப்பன் அதில் ஏறி உட்கார்ந்தான். வரதன் வண்டியை ஓட்டிக் கொண்டு சென்றான்.

கோட்டூர் தகடூரிலிருந்து ஐம்பதுமைல் தூரத்தில் இருந்தது. போகும் பாதையோ கரடு முரடானது. அதில் வேகமாகப் போய்க் கொண்டிருந்த வில்வண்டி ஒரு பாறாங்கல்லின் மீது ஏறி குடை சாய்ந்தது. தங்கப்பன் வண்டியில் இருந்து விழவே அவனது தலையில் பலத்த அடி பட்டது. அவன் நினைவை இழந்து விழுந்து கிடந்தான். வண்டிக்கார வரதனும் வண்டியிலிருந்து விழவே அவனது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அச்சமயத்தில் காலன் அவ்வழியே வந்து கொண்டிருந்தான்.

அவன் குடை சாய்ந்த வண்டியையும் அதன் பக்கம் நின்ற எருதையும் கண்டான். கீழே நினைவு இழந்து விழுந்து கிடந்த தங்கப்பனையும் காயம் அடைந்து துடிக்கும் வரதனையும் பார்த்தான். உடனே வண்டியைச் சரியாக நிறுத்தி அதில் எருதைப் பூட்டி தங்கப்பனையும் வரதனையும் வண்டியில் ஏற்றினான். பிறகு அவன் அருகிலுள்ள பழுதூருக்குப் போய் அங்கு ஒரு வைத்தியரிடம் சிகிச்சைக்குக் கொண்டு சென்றான்.

வண்டிக்காரன் வரதனின் காயம் இரண்டே நாட்களில் ஆறிவிட்டது. ஆனால் தங்கப்பன் நினைவை அடைந்து குணம் அடைய ஒரு வாரகாலம் பிடித்தது. தங்கப்பன் பணக்காரன் என்று அறிந்த வைத்தியரும் அவர்கள் குணம் அடைந்ததும் அவர்களிடமிருந்து பணம் வாங்கிக் கொள்வதாகக் காலனிடம் சொல்லிவிட்டே சிகிச்சை அளித்தார். காலனும் அவர்கள் இருவரும் முழுவதுமாக குணம் அடையும் வரை அவர்களோடு இருந்து அவர்களுக்கு

 வேண்டிய வேலைகளைச் செய்தான். வரதன் குணம் அடைந்ததுமே வண்டியை ஓட்டிக் கொண்டு தகடூருக்குப் போய் தங்கப்பன் பழுதூரில் இருப்பதாயும் விபத்து நடந்ததையும் கூறினான். உடனே தங்கப்பனின் மனைவியும் மக்களும் உறவினர்களும் நீலகண்டரும் மற்றும் பலரும் உடனே கிளம்பி பழுதூருக்குப் போய் தங்கப்பனை பார்த்து நலம் விசாரித்தார்கள்.

அப்போது காலன் "நான் செய்தது தவறே. என் போலத்தான் மாலனும் வேலனும், மருதனும் தவறு செய்தவர்கள். நாங்கள் திருந்த வாய்ப்பை அளிக்க வேண்டும் என்று கடவுளை தினமும் வேண்டி வருகிறோம். முதன் முதலாக அவர் எனக்கு வாய்ப்பு அளித்து இவருக்குப் பணி புரியும்படி செய்து என்னைத் திருத்தி விட்டார்" என்று களிப்புடன் கூறினான்.

தங்கப்பன் வைத்தியருக்கு நிறையப் பணத்தைக் கொடுத்தான். அதன் பின் தகடூருக்கு வந்தான். அவன் நீலகண்டரிடம் "காலன் தன் தவறை உணர்ந்து விட்டான். அவன் விபத்தில் அடிபட்டு விழுந்து கிடந்த என்னையும் வரதனையும் கண்டு இரக்கப் பட்ட தோடு எங்களை ஒரு வைத்தியரிடம் அழைத்துச் சென்று சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்தான். நாங்கள் குணம் அடையும் வரை எங்களோடு இருந்து எங்கள் தேவைகளையும் கவனித்துக் கொண்டான். இப்படி எல்லாம் அவன் நற்செயல்களைச் செய்ததால் அவன் திருந்திவிட்டான். எனவே அவனை நம் ஊருக்கு வரச் சொல்லி ஒரு வேலையும் போட்டுக் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? "என்று கேட்டான்.

நீலகண்டரும் "நீங்கள் காலன் விஷயமாக என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். அது உங்கள் இஷ்டம். இனிமேல் நீங்கள் இந்த ஊரிலிருந்து வண்டியில் வேறு எந்த ஊருக்கும் போகக் கூடாது. போக்கிரிகள் இன்னும் மூன்று பேர்கள் இருக்கிறார்கள். அவர்களும் காலனைப் போலக் கடவுளிடம் வேண்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள். காலன் திருந்திவிட்டான் என உறுதியாகக் கூறவிட முடியாது. அன்று ஏதோ


 அவனுக்கு அவ்வாறு செய்ய வேண்டும் என்று தோன்றிய தால் அவ்வாறு செய்தான். இந்த ஒரு நிகழ்ச்சியைக் கொண்டு அவன் திருந்தி விட்டான் என்ற முடிவுக்கு வந்து விடக் கூடாது. காலன் விஷயம் காக்கை உட்காரப்பனம் பழம் விழுந்த கதை போலத்தான்" என்றார்.

வேதாளம் இக்கதையைக் கூறி "நீலகண்டர் அறிவாளியாக இருந்தாலும் தயை, கனிவு, தாட்சணியம் ஆகிய இயல்புகள் கொள்ளாதவர் போலத் தோன்றுகிறதே.

காலன் சமயத்தில் செய்த உதவியால் தானே கிராம அதிகாரி தங்கப்பன் உயிர் பிழைத்தான்? அப்படிப்பட்ட காலன் பால் அவர் ஏன் இரக்கம் காட்டாமல் இருந்தார்? இதற்குச் சரியான விடை தெரிந்ததும் நீ கூறாவிட்டால் உன் தலை வெடித்துச் சுக்கு நூறாகிவிடும்" என்றது. விக்கிரமனும் "மனிதன் மிருகங்களை விட உயர்ந்தவன் என்பதற்கு அவன் அறிவு படைத்தவன் என்பதே முக்கிய காரணம். அந்த அறிவை இடம், பொருள், காலத்திற்கு ஏற்ப சரியாக அவன் பயன்படுத்த வேண்டும். காலன் தன் பிரார்த்தனையாலே தக்க வாய்ப்பை பெற்று தான் நற்செயலைச் செய்து திருந்தி விட்டதாக எண்ணி விட்டான். இது தற்செயலாக நேர்ந்தது. காலனுக்கு வேலை கொடுத்தால் மற்ற மூவரும் யாரோ ஒருவருக்கு உதவி விட்டுத்தாம் திருந்தி விட்டதாகக் கூறி கிராம அதிகாரியிடம் வேலை கேட்பார்கள். இது அவர்களை ஊக்குவிப்பது போலாகி விடும். எனவே காலனின் ஒரு செயலைக் கொண்டே அவன் திருந்தி விட்டான் என எண்ணுவது தவறு. இதனால் தான் நீலகண்டர் காலனுக்கு கிராம அதிகாரி வேலை கொடுப்பதை விரும்பவில்லை" என்றான்.

விக்கிரமனின் சரியான இந்த பதிலால் அவனது மெளனம் கலையவே அவன் சுமந்து வந்த உடலோடு வேதாளம் உயரக்கிளம்பிப் போய் மீண்டும் முருங்க மரத்தில் ஏறிவிட்டது. 


0 comments:

Post a Comment

Flag Counter