அசுரனைத் துரத்திய அதிமேதாவிகள்


 ஒரு கிராமத்தில் இரண்டு நண்பர்கள் இருந்தனர். அவர்களுள் மோயித்திரா என்பவன் பிறவியிலிருந்தே குருடன். மற்றவனான புக்கான் பிறவியில்இருந்து நோண்டி. அவர்கள் அடிக்கடி கிராமத்து ஆலமரத்தின் அடியில் அமர்ந்து கதை பேசுவதுண்டு.

ஒரு சமயம் அந்த கிராமத்தில் பிஹு பண்டிகை கொண்டாடப்பட்டது. கிராமம் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் அமர்க்களப் பட்டது. ஆனால் நண்பர்கள் புக்காலும் மோயித்திராவும் அந்த நிகழ்ச்சிகளை ரசிக்க முடியாமல் கஷ்டப்பட்டனர். அப்போது அவர்கள் நிகழ்ச்சிகளை ரசிக்க ஒரு திட்டம் தீட்டினர். அதன்படி குருடனான மோயித்திரா தன் தோளில் நோண்டியான புக்கானைத் தூக்கிக் கொண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடக்கும் இடத்திற்குச் சென்றான். தான் கண்ணால் காண்பதையெல்லாம் புக்கான் மோயித்திராவுக்கு எடுத்துரைக்க இவ்வாறு அவர்களாலும் நிகழ்ச்சிகளை ரசிக்க முடிந்தது.

பண்டிகை முடிந்த பிறகும் கூட, அவர்கள் இந்த வழக்கத்தைத் தொடர்ந்தனர். இதனால் தங்களுடைய உடல் குறைபாடுகளை ஓரளவு மறந்து விட்டனர் என்றே சொல்லலாம. ஒருநாள் இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் மோயித்திரா புக்கானை நோக்கி, "நாம் எவ்வளவு நாட்கள்தான் இவ்வாறு வீணே காலத்தை கழிப்பது? நாம் இந்த கிராமத்தை விட்டு எங்காவது போய் வேலை செய்து பிழைத்துக் கொள்வோம்" என்றான். "மோயித்திரா இந்த கிராமத்திற்குள் சுற்றி வருவது சுலபம். ஆனால் இங்கிருந்து பக்கத்து நகரத்திற்கெல்லாம் என்னைத் தூக்கிக் கொண்டு செல்ல உன்னால் முடியுமா?" என்று புக்கான் கேட்டான்.

அதற்கு மோயித்திரா," பரவாயில்லை நடக்க முடியும் வரை உன்னை சுமப்பேன். நடுநடுவில் ஓய்வு எடுத்துக் கொள்வேன். ஆகவே நாம் நகரத்திற்குச் செல்வோம் வா" என்று கூறினான்.

 இவ்வாறு தீர்மானித்தபின், மறுநாள் இருவரும் கோயிலுக்குச் சென்று இறைவனை வணங்கிவிட்டு கிராமத்தை விட்டுக் கிளம்பினர். மோயித்திரா புக்கானைத் தோளில் சுமந்து கொள்ள புக்கான் செல்லும் வழியில் தான் காணும் காட்சிகளை எல்லாம் தன் நண்பனுக்கு விவரித்துக் கொண்டே சென்றான். அவ்வாறு செல்லுகையில் வழியில் ஓரிடத்தில் சாலையோரம் ஒரு மத்தளம் தென்பட்டது. அதைப்பார்த்த புக்கான், அதை எடுத்துத் தன்னுடன் வைத்துக் கொண்டான்.

வழியில் ஒரு கிணற்றில் நீர் எடுத்துப் பருகி இருவரும் இளைப்பாறினார்கள். அங்கு கிணற்றடியில் ஒரு கயிறு தென்பட்டது. இதுவும் நமக்குப் பயன்படும் என்று கருதிய நண்பர்கள் அதையும் எடுத்துக் கொண்டனர். கொஞ்சதூரம் சென்றவுடன் ஒரு குளம் தென்பட்டது. குளக்கரையில் அமர்ந்து இருவரும் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த போது அவர்களை நோக்கி ஓர் ஆமை ஊர்ந்து வந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த புக்கான் "நண்பா, ஓர் ஆமை நம்மை நோக்கி வருகிறது. அதையும் எடுத்துக் கொள்வோமா?" என்று கேட்டுவிட்டு, அந்த ஆமையையும் அவன் எடுத்துக் கொண்டான்.

இப்படி நாள் முழுதும் சென்று கொண்டிருந்த நண்பர்கள் இறுதியில் மாலை நேரம் வந்ததும், இரவு தங்குவதற்குத் தகுந்த இடத்தைத் தேடினார்கள். மோயித்திராவின் தோளில் அமர்ந்திருந்த புக்கான் கண்களில் ஒரு வீடு சற்றுத் தொலைவில் தென்பட்டது. இரவு அங்கு தங்கி விடலாம் என எண்ணி, இருவரும் அந்த வீட்டுக்குச் சென்றனர்.

அந்த வீட்டுக்குள் நுழைந்த நண்பர்களுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. அந்த வீட்டிலிருந்த ஓர் அறையில் கோரமான உருவத்துடன் ஓர் அசுரன் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். அவனைக் கண்டு நடுங்கிய இருவரும் சுற்றுமுற்றும் வேறு ஏதாவது வீடு தென்படுகிறதா என்று பார்த்தனர். எங்கும் எதுவும் தென்படாததால், அந்த அசுரன் உள்ள வீட்டில் தங்குவதைத் தவிர வேறு வழி இல்லாமல் போயிற்று.

 முன்னெச்சரிக்கையாக அசுரன் படுத்துறங்கிய அறையின் கதவை வெளிப்புறம் தாழிட்டு விட்டு, நண்பர்கள் மற்றோர் அறையின் உள்ளே சென்று அதை உட்புறம் தாழிட்டுக் கொண்டனர். அந்த அறையில் ஏராளமான உணவுப் பண்டங்களைக் கண்ட நண்பர்கள் இருவரும் மகிழ்ச்சியுடள் வயிறார அவற்றை உண்டனர். அசுரன் விழித்தெழுந்தால் என்ன செய்வது என்பதைப் பற்றி ஒரு திட்டமும் தயார் செய்தனர்.

அவர்கள் கொண்டு வந்திருந்த மத்தளம் தற்செயலாகத் தரையில் உருண்டு விழ, அந்த சத்தத்தில் அசுரன் விழித்துக் கொண்டான். தான் வெளியில் செல்ல முடியாமல் தன் அறைக்கதவு வெளியில் தாளிடப் பட்டுள்ளதை அறிந்தவுடன், அசுரன் கொதித்தெழுந்தான். "யாரடா என் அறைக் கதவை தாளிட்டது? கதவைத் திற" என்று பெரிய குரலில் கத்தினான்.

நண்பர்கள் முன்னமே திட்டமிட்டபடி மத்தளத்தை பலமாகக் கொட்டினார்கள். அந்த ஒலியைக் கேட்டுத் துணுக்குற்ற அசுரன் "யார் நீ?" என்று கத்தினான். உடனே மோயித்திரா கட்டைக் குரலில் "நீ யாரென்று முதலில் சொல்" என்று உரக்கக் கத்தினான். "நான் அசுரன். ஆமாம் நீ யார்?" என்று அசுரன் கேட்க. "நான் அசுரர்களின் தலைவன்" என்று மோயித்திரா பதிலுக்குக் கத்தினான். அதைக் கேட்டு திடுக்கிட்ட அசுரன் "இல்லை, நீ பொய் சொல்கிறாய். வெளியில் வா" என்றான்.

"நீ தான் பொய் சொல்கிறாய். நீ அசுரன் என்பதற்கு என்ன அத்தாட்சி?" என்று மோயித்திரா பயப்படாமல் கேட்க, அசுரன் தன் தலைமுடி ஒன்றைப் பிய்த்து ஜன்னல் வழியே வீசினான். "பார் என் முடியை எவ்வளவு பருமனாகஇருக்கிறது என்று! இப்போது சொல்" என்றான் அசுரன்.

உடனே மோயித்திரா தாங்கள் கொண்டு வந்த கயிற்றை அசுரன் பக்கம் வீசி எறிந்து "என்னுடைய முடியைப் பார்" என்று சவால் விட்டான். அதைக் கயிறு என்று அறியாத அசுரன் உண்மையாகவே பயந்து போனான். இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, தன் தலை முடியிலிருந்து ஒரு பேனை எடுத்துத் தூக்கி எறிந்தான். "தவளை அளவு பெரிதான என் தலைப் பேனைப்பார்" என்று அசுரன் வால் விட்டான். "ஹாஹ்ஹா" என்று சிரித்த மோயித்திரா" இதுதான் உன் பேனா! என்னுடைய தலையிலுள்ள பேனைப்பார்" என்று ஆமையைத் தூக்கி அசுரனிடம் எறிந்தான். ஆமையைப் பார்த்த அசுரன் கதி கலங்கி விட்டான்.

 உண்மையிலேயே வெளியில் உள்ளவன் பெரிய அசுரன் என்ற தப்புக் கணக்குப் போட்ட அசுரன் "ஐயா, நீங்கள் பெரிய அசுரன் என்று ஒப்புக் கொள்கிறேன். கதவைத் திறவுங்கள். நாம் இருவரும் நண்பர்கள் ஆகலாம்" என்று சமாதானமாகப் பேசினான்.
"தாராளமாகக் கதவைத் திறக்கிறேன்.

வெளியில் வா. எனக்கு ஒரே பசி. நீ வெளியில் வந்ததும் உன்னை கடித்துக் குதறித் தின்னப் போகிறேன்" என்று மோயித்திரா சொன்னதும் அசுரன் பெருத்த அதிர்ச்சி அடைந்தான். மோயித்திரா புக்கானின் உதவியுடன் சத்தமின்றி அசுரன் அறைக் கதவுத் தாழ்ப்பாளை நீக்கி விட, இருவரும் ஒளிந்து கொண்டனர். இதற்குள் அசுரன் தன் அறைக் கதவை இலேசாகத் திறக்க முயற்சி செய்ய கதவு உடனே திறந்து கொண்டது. மெதுவாக வெளியில் எட்டிப்பார்த்த அசுரன் கண்களில் யாரும் தென் படாததால் தப்பித்தேன் பிழைத்தேன் என்று அந்த வீட்டை விட்டு ஒரே ஓட்டம் பிடித்து விட்டான்.

பிறகு இரு நண்பர்களும் தைரியமாக வெளியே வந்து, அசுரனுடைய உடமைகளை ஆராய்ச்சி செய்தனர். அவனிடம் இருந்த ஏராளமான பணம், காசு ஆகியவற்றை எடுத்துக் கொண்டனர். அசுரன் வைத்திருந்த தைலங்களில் ஒன்றை தன் கண்களில் தடவ, மோயித்திராவுக்குக் கண் பார்வை திரும்பி விட்டது. மற்றொரு தைலத்தைத் தன் கால்களில் தடவ, புக்கானுக்குக் கால்கள் சரியாகி விட்டன. இருவரும் அசுரனிடம்இருந்த பணம், காசு, உணவுப் பொருட்கள், தைலங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு தங்கள் கிராமத்திற்கேத் திரும்பி விட்டனர். அதன்பிறகு தாங்கள் கொண்டு வந்தப் பணத்தைக் கொண்டு சுக வாழ்வு வாழத் தொடங்கினர்.

0 comments:

Post a Comment

Flag Counter