ஆனந்தனின் அமரகாவியம்


தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீது ஏறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின் கீழே இறங்கி அவன் அதைச் சுமந்துக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்கையில் அதனுள் இருந்த வேதாளம் எள்ளி நகைத்து "மன்னனே, நீ இப்படி சிரமப்படுவது ஏன்? இந்த பயங்கர இரவில் இந்த முயற்சியை யாருக்காக மேற் கொண்டிருக்கிறாய்? நீ உதவுகிறாயே. அவன் இதைப் பெறத்தகுதி பெற்றவனா? இதை எல்லாம் யோசித்துப் பார்த்தாயா? இதை எல்லாம் ஏன் கேட்கிறேன் என்றால் நீயும் அரசகுமாரன் அனங்க பாலன் ஆனந்தனுக்கு உதவியது போல யாருக்காவது வீணாக உதவுகிறாயோ என்னவோ? உனக்கு வழியில் சிரமம் தெரியாது இருக்க அந்தக் கதையைக் கூறுகிறேன். கவனமாகக் கேள்" என்று கதையைச் சொல்லத் தொடங்கியது.


ஆலந்தூரிலிருந்த ஆனந்தன் என்பவன் தான் புகழ் பெற்றவனாகத் திகழ வேண்டும் என்று எண்ணினான். அவன் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன். ஆனாலும் உழைத்துச் சம்பாதித்து சிக்கனமாக இருந்து, வாழ ஒரு வீட்டை வாங்கி விட்டான். தன் மனைவிக்கும் நகைகள், பட்டுப் புடவைகள் என்று வாங்கியும் கொடுத்தான். ஒருவாறாக வாழ்க்கையில் நிலைத்து அவன் சுகமாக நாட்களைக் கழித்து வந்தான்.
கொஞ்சம் வசதி ஏற்பட்டதும் தான் புகழ் பெற ஏதாவது ஒரு அரிய செயலைச் செய்ய வேண்டும் என்று அவன் எண்ணினான். ஏனெனில் அப்போது வசதியாகப் பெரிய மனிதனைப் போல வாழ்ந்த போதும் அவன் தன்னை யாரும் புகழ் வில்லையே என்று நினைத்ததே அதற்குக் காரணம். அவன் பலரிடம் தான் வாழ்ந்து வரும் உயரிய வாழ்வைப் பற்றிப் பெருமையாகச் சொல்லிப் பார்த்தான். ஆனால் அவன் கூறியதை யாரும் சட்டை செய்ய வில்லை.

அந்த ஊரில் புராண கதா காலட்சேபம் செய்யப் பரமேசுவரர் என்பவர் வந்தார். அவர் ஒரு மாத காலத்திற்கு ராமாயணப் பிரசங்கம் செய்தார். அவரை ஊரில் எல்லோரும் புகழ்ந்தார்கள் தினமும் அவரை யாராவது அழைத்துப் போய் விருந்தும் வைத்தார்கள். ஆனந்தனும் ஒரு நாள் தன் வீட்டிற்கு வந்து சாப்பிடும்படி அழைத்தான். அவரும் அவனது வீட்டிற்குச் சென்றார்.
சாப்பிட்டு முடித்ததும் அவன் பரமேசுவரரிடம் "இராமாயணத்தில் ராமர் பல கஷ்டங்களைப் பட்டதாக நீங்கள் கூறி வருகிறீர்கள்.

ஆனால் ராமரின் கஷ்டங்கள் அவரது குடும்ப சம்மந்தப்பட்டவை தான். தன் தந்தை கொடுத்த வாக்கை காக்க வன வாசத்தை மேற்கொண்டார். தன் மனைவியை அபகரித்தான் என்பதற்காக அவர் ராவணனுடன் போர் புரிந்தார். இந்த மாதிரிப் பிரச்சினைகள் எல்லாக் குடும்பங்களிலும் தான் இருக்கின்றன. ஆனால் ராமரை மகாபுருஷர் என்று வர்ணித்து வால்மீகி முனிவர் ராமாயணத்தை எழுதி உலகப் புகழ் பெற்றார். அதனால் எல்லோரும் ராமரைக் கடவுளாகக் கருதி வழிபடுகிறார்கள். எனவே சாதாரணமானவர்களைப் போற்றி ஏன்  காவியங்கள் எழுதி ராமரைப் போல அவர்களையும் தெய்வப் பிறவிகளாக்கவில்லை?" என்று கேட்டான்.


பரமேசுவரரும் "நீ கேட்ட கேள்வி மிக முக்கியமானதே. ராமாயணத்தில் வரும் நிகழ்ச்சிகள் போல உலகில் எந்த நாட்டிலும் எந்தக் குடும்பத்திலும் நடைப் பெற்றே வருகின்றன. ராமர் அவதாரம் எடுத்தது நல்லவர்களைக் காக்கவும் கெடுதல் செய்பவர்களை அழிக்கவும் தான். அதனால் பகவானே ராமராக மானிட ஜென்மம் எடுத்து சாதாரண மனிதனைப் போலக் கஷ்ட நஷ்டங்களை அனுபவித்தார். எனவே அவரை அவதார புருஷர் என வால்மீகி முனிவர் எழுதினார். ராமரின் சரிதத்தை வால்மீகி எழுதியது போல வேறு யாரும் ஒருவரைப் பற்றி  எழுதியதாக எனக்குத் தெரிய வில்லை. அதனால் தான் ராமரை எல்லோரும் தெய்வமாகக் கருதுகிறார்கள்" என்றார்.

அப்போது அவன் "ஐயா! நான் என் கதையைக் கூறுகிறேன். அதை ராமாயணம் போல நீங்கள் எழுதிக் கொடுங்கள். என்னை எல்லோரும் நினைத்துக் கொண்டே இருப்பார்கள். உங்களுக்கும் வால்மீகியைப் போலப் பேர் கிடைக்கும்" என்றான். பரமேசுவரரும் "சரி, உன் வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் கூறு. அவை ராமருடையவை போல உள்ளனவா என்று பார்க்கலாம்" என்றார். அவனும் தன்னைப் பற்றிக் கூறவே அவரும்" நீயே உன் கதையை வால்மீகி முனிவர் எழுதியது போல எழுதி எல்லோருக்கும் சொல்லலாமே. உன் திறமை வால்மீகி முனி வரது போலவே உன்னுள் மறைந்துள்ளது" என்றார்.

அதன் பின் அவன் தன் வரலாற்றைச் செய்யுள் வடிவில் எழுதி அதைத் தன் மனைவிக்குப் படித்துக் காட்டி "எப்படி இருக்கிறது நான் எழுதிய காவியம்?" என்று கேட்டாள். அவளும்  "ராமாயணத்தை எவ்வளவு தடவை நீ கேட்டாலும் சலிப்பு அடைவது இல்லையே. அது போல இதை கேட்டால் சலிப்பு அடைவது ஏனா?" அது இனிமை யாக இருப்பதால் கேட்க முடிகிறது" என்றாள் அவள். அப்போது ஆனந்தன் "ஓ! லவனும் குசனும் ராமாயணத்தை இனிமையாகப் பாடிப் பரப்பினார்கள். நானும் என் பேரன்களிடம் இதைப் பாடச் சொல்லிப் பரப்புகிறேன்" என்று எண்ணித் தான் இயற்றியதைப் பாடச் சொன்னான்.

அவர்களோ "இந்தக் கதை நன்றாகவே இல்லை. இராமாயணத்தைப் பாடிக் காட்டுவது போல இதைப் பாட முடியாது" என்று கூறி விட்டு ஓடி விட்டார்கள்.

தான் எழுதிய தன் கதையைக் கேட்க யாராவது கேட்பார்களா என்று அவன் தன் ஊரில் இரண்டொருவரை அணுகினான். அவர்கள் அவனைக் கண்டதுமே ஓட்டம் பிடித்தார்கள் இனி அந்த ஊரில் யாரும் கேட்க மாட்டார்கள் என்று எண்ணி அவன் அடுத்த ஊரை நோக்கிச் சென்றான். சற்று தூரம் போனதுமே ஒரு மரத்தடியில் ஒரு இளைஞன் நினைவு இழந்து விழுந்து கிடப்பதைக் கண்டான். அவனைத் தூக்கி ஒரு வண்டியில் போட்டு ஆனந்தன் தன் ஊருக்குக் கொண்டு போய் ஒரு வைத்தியரிடம் காட்டினான். அவரும் அந்த  இளைஞன்  ஏதோ ஒரு விஷக்கனியைச் சாப்பிட்டிருக்க வேண்டும் என்று கூறி மூன்று நாட்கள் சிகிச்சை அளித்தார்.

நான்காவது நாள் அவன் தன் நினைவு பெற்று எழுந்து உட்கார்ந்தான். தன்னைக் காப்பாற்றியன் ஆனந்தன் என்று அறிந்த அந்த இளைஞன் அவனுக்கு நன்றி செலுத்தினான். அப்போது ஆனந்தன் "நன்றி செலுத்தியது சரி. நான் என் சரிதையைக் காவியமாக எழுதி இருக்கிறேன். அதைப் படிக்கிறேன் கேட்டு எவ்வளவு நன்றாக இருக்கிறது என்று கூறு" எனக் கூறித்தான் எழுதி வைத்துள்ளதைப் படிக்கலானான். இளைஞனும் அதைக் கேட்கலானான். ஆனால் வெகு நேரம் வரை அதைக் கேட்டுக் கொண்டிருக்கப் பொறுமை இல்லை. ஆனால் தன்னை ஆனந்தன் காப்பாற்றினானே என்பதற்காகப் பல்லைக் கடித்துக் கொண்டு பேசாமல் இருந்தான்.

அப்போது ஆனந்தன் "பேஷ்! நீ இதைக் கேட்டு ரசித்தாய். இனி இதற்கு மன்னரின் அங்கீகாரம் கிடைக்கப் பாடுபடுகிறேன்" என்றான். அப்போது அந்த இளைஞன் "நான் மன்னன் அல்ல என்றாலும் மாறுவேடத்தில் வந்த இளவரசனே நான் சொன்னால் என் தந்தை கேட்பார்" என்றான். அதைக் கேட்ட ஆனந்தன் மகிழ்ந்து போய் "ஆகா! என் அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம் என் இந்தக் காவியம் ராமாயணத்தைப் போலப் போற்றிப் புகழ்ந்து பேசப் பட வேண்டும். அதை நீங்கள் செய்து விட்டால் எனக்கு நன்றி செலுத்தியது போலாகிவிடும்" என்றான்.


அதைக் கேட்ட இளவரசன் அனங்கபாலன் திகைத்துப் போனான். வால்மீகியின் ராமாயணம் எங்கே? இவன் எழுதிய இந்த குப்பை எங்கே! இவ்வாறு யோசித்த இளவரசன் அவனிடம் "சரி என்னைப் போல இதை இன்னமும் எத்தனை பேர்கள் கேட்டார்கள்?" என்று விசாரிக்கவே ஆனந்தனும் உற்சாகமாக "இது  வரை உங்களையும் சேர்த்து மொத்தம் பன்னிரண்டு பேர்கள் கேட்டிருக்கிறார்கள்" என்றான்.

அப்போது அனங்கபாலன் "நம் நாட்டின் மக்கள் தொகை பத்து லட்சம். நீ கூறிய பன்னிரண்டு பேர்கள் போக மீதம்  உள்ளவர்கள் உன் காவியத்தைப் புகழ்ந்து பேச ஏற்பாடு செய்கிறேன். ஆனால் நீ எனக்கு ஒரு வாக்குக் கொடுக்க வேண்டும் வால்மீகி முனிவர் தம் வாழ் நாளில் ராமாயணம் ஒன்றைத் தான் எழுதினார். அவரைப் போல இந்த ஒரு காவியம் எழுதியதோடு நிறுத்தி விட வேண்டும் இனிமேல் எதுவும் எழுதக் கூடாது" என்றான். ஆனந்தனும் அந்த வாக்கைக் கொடுத்தான். அனங்க பாலன் ஆனந்தனைத் தன்னோடு கூட்டிக் கொண்டு தலைநகருக்குச் சென்றான். அங்கு அவன் தன் தந்தையிடம் ஆனந்தனை அறிமுகப்படுத்தி "இவர் வால்மீகி போன்ற கவிஞர். ராமாயணத்திற்கு இணையாக இவர் ஒரு காவியம் எழுதி இருக்கிறார். அதனை நாட்டில் பிரபலப் படுத்த வேண்டும். இவருக்கு ஒரு உயரிய பதவியும் அளிக்க வேண்டும்" என்று கூறி ஆனந்தன் எழுதிய காவியத்தின் ஒரே பிரதியாக இருந்ததை மன்னனிடம் நீட்டினான்.

மன்னனும் அதன் மீது ராஜமுத்திரை போட்டு அனங்கபாலனிடம் கொடுத்தான். அவனும் அதை பத்திரமாக வைத்திருப்பதாகக் கூறி எடுத்துச் சென்றான். அன்று முதல் நாடெங்கிலும் ஆனந்தன் ராமாயணத்தைவிட உயர்ந்த காவியம் ஒன்று எழுதி இருக்கிறான் என்று பேசப் பட்டது. ஆனால் அந்தக் காவியத்தை யாரும் படித்துப் பார்த்ததாகக் கூறவில்லை. அந்தக் காவியத்தின் ஒரே பிரதி இளவரசனிடம் இருந்தது அதைப் படித்து விட்டுத் தருவதாகக் கேட்டவர்களிடம் எல்லாம் அவன் "அது நெருப்புப் பிடித்து எரிந்து போயிற்று. ஆனந்தனிடம் அதை மீண்டும் எழுதச் சொன்னால் எழுத முடியாது என்று கூறி விட்டான். எனவே அது ஒன்று இருந்தது என்று பேசிக் கொண்டு தான் இருக்க முடியுமேயொழிய அதனை யாராலும் படிக்க முடியாது என்றே கூறி வந்தான். ஆனந்தனின் அமரகாவியத்தின் கதி இப்படி ஆயிற்று.


வேதாளம் இந்தக் கதையைக் கூறி "ஆனந்தனின் காவியத்தின் புகழைப் பரப்புவதாகக் கூறிய அனங்கபாலன் அதை வாங்கி வைத்துக் கொண்டு அதை யாருக்கும் படிக்க ஏன் கொடுக்கவில்லை? அதைப் படிக்க விரும்பியவர்களிடம் அது எரிந்து போய் விட்டதாக ஏன் கூறினான்? இக்கேள்விகளுக்குச் சரியான விடைகள் தெரிந்திருந்தும் நீ கூறா விட்டால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகி விடும்" என்றது.

விக்கிரமனும் "ஆனந்தனிடம் இருந்தது அவன் எழுதிய ஒரே பிரதி. அதை அவன் பன்னிரண்டு பேர்களுக்கு மட்டுமே படித்துக் காட்டினான்.
அதைக் கேட்டவர்கள் யாருமே அதைப் பாராட்டவில்லை. அது மகாமட்டமானது என்றும் அதற்குப் போய் ராஜ முத்திரை வைக்க வேண்டிய நிலை வந்ததே என எண்ணியே அனங்கபாலன் அதனை யாரும் படித்து விடக் கூடாதே என்று எண்ணி மனம் குமறினான்.


அதற்கு வழி என்ன என்று யோசித்து பார்த்தான் முடிவில் அதனை வாங்கி வைத்துக் கொண்டு அது தீப்பிடித்து எரிந்து விட்டதாகக் கூறினான்" என்றான்.
விக்கிரமனின் சரியான இந்த பதிலால் அவனது மெளனம் கலையவே அவன் சுமந்து வந்த உடலோடு வேதாளம் உயரக் கிளம்பிப் போய் மீண்டும் முருங்க மரத்தில் ஏறிக் கொண்டது.

 

0 comments:

Post a Comment

Flag Counter