தகுதியானவர் யார்?

தக்கார் தகவிலர் என்பதவரவர்
எச்சத்தாற் காணப்படும்


விளக்கம்:  ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ, அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்.






குழந்தைகளுக்கான உடைகள் தயாரிக்கும் பெரிய நிறுவனம் ஒன்றின் தலைமை நிர்வாகியான கிருஷ்ணா தீவிர ஆலோசனையில் ஆழ்ந்திருந்தார். அதே நிறுவனத்தில் பொறுப்பான பதவி வகித்து வந்த அவருடைய மகள் ரம்யா, தன் தந்தை எதைப் பற்றி யோசிக்கிறார் என்று அறிந்து கொள்ளும் ஆவலுடன் அவரிடம், "என்ன யோசிக்கிறீர்கள் அப்பா?" எனக் கேட்டாள்.

"நமது நிறுவனத்தின் புதிய கிளையை பக்கத்து நகரத்தில் தொடங்க இருக்கிறோம் என்பது உனக்குத் தெரியும். நம்மிடம் பணிபுரியும் சூர்யா, திலீப் ஆகிய இருவரில் யாரை அந்தக் கிளைக்கு பொறுப்பேற்கச் செய்யலாம் என்று தான் யோசிக்கிறேன். திலீப் பெரிய குடும்பத்துப் பிள்ளை. பல்கலைக்கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்ற பட்டதாரி. நல்ல பேச்சுத் திறமை கொண்டவன். அவன் தந்தை எனக்கு நெருங்கிய நண்பர்.  அவனோடு ஒப்பிடுகையில் சூர்ய ஒரு சாதாரண பட்டதாரி. அதிகம் பேசாமல் அமைதியாக இருப்பவன். மிகச் சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவன். ஆனால் நமது விற்பனையை அதிகரித்ததில் பெரும் பங்காற்றியவன். இருவரும் ஒவ்வொரு விதத்தில் தகுதியானவர்கள். அதனால் தான் கொஞ்சம் யோசிக்க வேண்டியுள்ளது" என்றார்.


"இரண்டு பேரின் திறமையையும் கவனித்துள்ளேன். சூர்யா தான் நம் புதிய கிளையை நிர்வகிக்க தகுதியானவர்" என்றாள் ரம்யா. "அது எப்படி ரம்யா?" என்று கிருஷ்ணா கேட்டார்.


"அப்பா, கல்லூரியில் பட்டம் பெறுவது என்பது வேலை கிடைக்கத் தேவையான அனுமதி பத்திரம் மட்டும் தான்! பதவி உயர்விற்கான ஒருவனது தகுதியை அவனது சாதனைகளைக் கொண்டு மதிப்பிட வேண்டுமே தவிர, அவன் முன்பு பெற்ற பட்டத்தைக் கொண்டோ, பணக்கார குடும்பப் பின்னணியைக் கொண்டோ, அல்லது பேச்சுத் திறமையைக் கொண்டோ மதிப்பிடக் கூடாது. நம் விற்பனையை பன்மடங்கு பெருகச் செய்ததில் சூர்யாவின் சாதனை திலீப்பை விடப் பெரியது. எனவே இந்தப் பதவி உயர்விற்கு சூர்யா தான் தகுதியானவர்" என்று அடித்துக் கூறினார்.
"நீ சொல்வது தான் சரி" என்று கிருஷ்ணாவும் அதை ஆமோதித்தார்.

0 comments:

Post a Comment

Flag Counter