வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள்

 
ன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி, அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழேஇறங்கி, அவன் அதைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லும் போது அதன்னுள்ளிருந்த வேதாளம், "மன்னா! இந்த நள்ளிரவில் மயானத்தை நோக்கி நீ செல்வது எனக்கு வியப்பைத் தருகிறது. உனது நோக்கம் தான் என்ன? யாருக்காவது உதவி செய்வதற்காக இவ்வாறு நீ நடு இரவில் சுற்றித் திரிகிறாயா? அல்லது யாருடைய அறிவுரையைக் கேட்டு அதன்படி உன்னை நீ இவ்வாறு வருத்திக் கொள்கிறாயா? சில சமயங்களில் மேதாவிகள் என்று சிலரை நம்பி அவர்கள் கூறும் உபதேசங்களின்படி நாம் நடந்தோமானால், நமக்குக் குழப்பமும், துன்பமும்தான் உண்டாகும். மேதாவிகள் சிலர் ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு மாதிரி யோசனை கூறி உன்னைத் தவறான வழியில் செலுத்தி விடுவார்கள்.
அத்தகைய ஞானவர்மர் என்ற குருவின் கதையைக் கூறுகிறேன், கேள்!" என்றது. ஆரவல்லி மலையடிவாரத்தில் ஞானவர்மர் ஒரு குருகுலம் நடத்தி வந்தார். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, அவர் யாத்திரை மேற்கொண்டு நாடெங்கிலும் உள்ள தன் பழைய மாணவர்களை சந்தித்துப் பேசி, அவர்களின் நலனையும், நாட்டு நடப்பையும் அறிந்து வருவார்.
 
ஒருமுறை அவர் அவ்வாறு செல்லும்போது, ஒரு கிராமத்தின் வழியே செல்ல நேர்ந்தது. கிராம எல்லையில் ஒரு மரத்தடியில் ஒரு சிறுவன் ஏதோ ஓலைச் சுவடிகளை கவனமாகப் படித்துக் கொண்டிருந்தது அவருடைய கவனத்தைக் கவர்ந்தது. மாடுகள் சுற்றிலும் மேய்ந்து கொண்டிருக்க, அப்போது அவனது தந்தை, "முத்து! இங்கே வா! வந்து கஞ்சி குடித்து விட்டுச் செல்!" என்றார்.
 
அப்போது, அவனைப் பின் தொடர்ந்து வந்த ஞானவர்மரைக் கண்டு எழுந்து நின்று மரியாதை செலுத்திய முத்துவின் தந்தை, "ஐயா! நீங்கள் யார்? சிறிது கஞ்சி குடிக்கிறீர்களா?" என்று உபசரித்ததும், ஞானவர்மர், "வேண்டாம்! மாடு மேய்க்கும் உன் பிள்ளை ஓலைச்சுவடிகளைப் பிடித்துக் கொண்டிருந்தது எனக்கு பெரும் வியப்பை அளித்ததனால், அவனைப் பின் தொடர்ந்து வந்தேன்!" என்றார். தொடர்ந்து, "உன் பிள்ளைக்குப் படிப்பு நன்றாக வரும் என்று தோன்றுகிறதே! அவனை ஏன் மாடு மேய்க்க அனுப்புகிறாய்?" என்று கேட்டார்.
 
அதற்கு அச்சிறுவனின் தந்தை, "அவன் படிக்க வேண்டும் என்று நானும் ஆசைப்படுகிறேன். ஆனால், என் பிள்ளையை யார் தங்கள் குருகுலத்தில் சேர்த்துக் கொள்வார்கள்? எங்கள் குலத்தொழில் மாடு மேய்ப்பது என்று தெரிந்தால், யாரும் அவனைச் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்!" என்றான்.
"அவனை என் குருகுலத்தில் நான் சேர்த்துக் கொள்கிறேன். உடனே அவனை என்னுடன் அனுப்பு!" என்று ஞானவர்மர் உத்தரவிட, "சாமி!" என்று கூவிக் கொண்டே அவர் காலடிகளில் சிறுவனின் தந்தை விழுந்து வணங்கினான்.
 ஞானவர்மர் உடனே முத்துவைத் தன்னோடு அழைத்துக் கொண்டு குருகுலம் திரும்பினார். அவர் எதிர்பார்த்தபடியே, முத்து மிக நன்றாகப் படித்தான். அவனுக்கு கணிதத்திலும், பொருளாதாரத்திலும் மிகுந்த ஆர்வம் இருந்தது. பத்து ஆண்டுகள் அவரிடம் பயின்றபின், முத்துவின் குருகுலவாசம் முடிவு பெற்றது.
 
அவனுக்கு விடை கொடுத்த ஞானவர்மர், "முத்து! உனக்கு இருக்கும் அறிவிற்கு நீ வியாபாரம் செய்தால் வாழ்வில் முன்னேற்றம் அடைவாய்! வியாபாரம் செய்ய புத்தியும், நல்ல உடல் உழைப்பும் தேவை! முயற்சி திருவினையாக்கும் என்பதைப் புரிந்து கொள்! அயராத உடல் உழைப்பும், விடா முயற்சியும் தான், உனக்கு மிகவும் தேவை! போ! போய் வியாபாரம் செய்! இடையிடையே என்னை வந்து பார்!" என்று அவனை வாழ்த்தியனுப்பினார்.
 
குருபக்தியில் சிறந்து விளங்கிய முத்து அவருடைய அறிவுரையை அப்படியேக் கடைப்பிடிக்கத் தீர்மானித்தான். தன்னுடைய தந்தைக்குச் சொந்தமான சிறிய நிலத்தையும், மாடுகளையும் விற்று, அதில் கிடைத்த பணத்தை மூலதனமாகக் கொண்டு நகரத்தில் ஒரு ஜவுளிக்கடை திறந்தான்.
குரு கூறியபடி தன் வியாபாரத்தின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராமல் உழைத்தான். ஆனால், அவன் எதிர்பார்த்தபடி வியாபாரத்தில் லாபம் கிட்டவில்லை.
அதனால் அவன் குருவிடம் சென்று யோசனைக் கேட்டான். "நல்ல லாபம் வேண்டுமென்றால் உழைத்தால் மட்டும் போதுமா? நீ வியாபாரத்தை விரிவாக்க வேண்டும்.
 
அதற்கு, அதிகமான மூலதனம் தேவை! அதனால், செல்வர்களாக இருக்கும் இன்னும் சிலரையும் உனது வியாபாரத்தில் கூட்டுச் சேர்த்துக் கொள்! பெரிய அளவில் வியாபாரம் நடத்து! லாபமும் அதிகமாக வரும்!" என்றார்.
 
குருவின் அறிவுரையை சிரமேற்கொண்ட முத்து, நகரத்தில் பல செல்வர்களை அணுகினான். இறுதியில் இருவர் அவனோடு கூட்டு சேர ஒப்புக்கொண்டனர். தொடக்கத்தில் செய்த முதலீட்டைப் போல் பல மடங்கு அதிகமாக முத்து முதலீடு இட்டான். தனது கடையை விரிவாக்கினான். இன்னும் சில இடங்களிலும் தன் கடைகளைத் திறந்தான். இவ்வாறு வியாபாரத்தைப் பல மடங்கு பெருக்கியதால் லாபமும் அதிகரித்தது. நகரத்தின் பெரும் புள்ளிகளில் அவன் ஒருவன் ஆனான். நகரத்து செல்வர் ஒருவர் அவனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து வைத்தார். முத்துவிற்குப் பெண் குழந்தை பிறக்க, அதற்கு அன்னபூரணி எனப் பெயரிட்டு நன்கு வளர்த்தான். பெண்ணும் பெரியவள் ஆனாள்.
 
வியாபாரத்தை மேலும் விரிவு படுத்துவதற்காக தனது கூட்டாளிகளைக் கலந்து ஆலோசித்தான். பிறகு வெளிநாடுகளுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்து லாபம் பெறலாம் என முடிவெடுத்தனர். அவ்வாறே அடுத்த மாதத்திலிருந்து வெளிநாடுகளுக்கு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
 
மூன்று மாதங்களுக்குப் பிறகு, தங்கத் தீவிற்கு ஆடைகள் தேவை என்பதைப் புரிந்து கொண்டு தனது பல லட்ச மதிப்புள்ள ஆடைகளுடன் நம்பிக்கைக்குப் பாத்திரமான குமாஸ்தாவையும் ஒரு கப்பலில் ஏற்றி அனுப்பி வைத்தான். தங்கத் தீவை அடைந்ததும் பூகம்பம் ஏற்பட்டதால் கப்பல் மூழ்கி விட்டது. இந்தச் செய்தியைக் கேட்டதும் முத்து மிகவும் பாதிக்கப்பட்டான்.
கூட்டாளிகள் இருவரும் கூட அவனை எதிரியைப் போல் நடத்தினர். இதனால் அவன் மிகவும் துன்பத்திற்கு ஆளானான். அந்த சமயத்தில் அவனது குரு தீர்த்த யாத்திரை மேற்கொண்டிருந்தார்.
அவர் அவனை வந்து பார்த்து, அவனது நிலைமையைக் கண்டு அவனுக்கு ஆறுதல் கூறும் வகையில், "முத்து, இந்த நேரத்தில் தான் நீ மனம் தளரக் கூடாது. வாழ்க்கையில் வெற்றி தோல்வி இயற்கைதான். ஒரு சமயம், ஒரு மரத்தில் ஒரு ஜோடிப் புறாக்கள் அமர்ந்திருந்தன.
 
அப்போது ஒரு வேடன்அவற்றை நோக்கி அம்பு எய்ய முயற்சி செய்வதைப் பார்த்த பெண்புறா ஆண்புறாவிடம் பறந்து விடலாம் என்று கூற, ஆண்புறா வானில் வட்டமிட்ட ஒரு கழுகைக் காட்டி பறந்து சென்றாலும் அபாயம் என்றும், கண்களை மூடிக் கடவுளைப் பிரார்த்தனை செய்வோம் என்றது. அவ்வாறே அவைப் பிரார்த்தனை செய்ய, வேடனைத் தற்செயலாக ஒரு பாம்பு கடித்துவிட, அவன் விட்ட அம்பு குறிதவறி கழுகின் மீது பட, கழுகு இறந்தது. புறாக்கள் தப்பித்தன! அதுபோல், ஏற்றத் தாழ்வுகள் இயற்கையின் நியதி என்று எண்ணிக் கொண்டு, கடவுளைப் பிரார்த்தனை செய்! இறுதியில் உனக்கு நன்மை உண்டாகும்!" என்றார்.
 
 இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம் விக்கிரமனை நோக்கி, "மன்னா! குரு ஞானவர்மர் முத்துவிற்கு "வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு தீராத முயற்சியும் அயராத உழைப்பும் தேவை" என்று முதலில் அறிவுரை கூறினார்.
 
ஆனால் இறுதியில் ஒரு பறவையின் கதையைக் கூறிவிட்டு எல்லாம் காலத்தின் கையில் உள்ளது என்று கூறுகிறார். விதி வலியது என்று கூறி வேதாந்தத்தையும் இழுக்கிறார். இது விசித்திரமானதாகவும் முரண்பாடாகவும் தெரியவில்லையா? அவரது அனுபவம் அவருக்கு இதைத்தான் கற்றுக் கொடுத்ததா? இல்லை என்றால் வயது முதிர்ந்தால் ஏமாற்றமும் எதையும் லேசாக எடுத்துக் கொள்ளும் பக்குவமாக இருக்குமோ? அவரது இரண்டு அபிப்ராயங்களில் எது சரியானது, எது பொய்யானது? எனது இந்த சந்தேகங்களுக்கு விடை தெரிந்திருந்தும் நீ மௌனமாக இருந்தால் உனது தலை வெடித்து சுக்கு நூறாகி விடும்" என்றது.
 
அதற்கு விக்கிரமன், "குரு ஞானவர்மரின் வார்த்தைகளில் எவ்வித முரண்பாடும் இல்லை. அவர் முத்துவிற்கு ஆரம்பத்திலும், இறுதியிலும் கூறியது முற்றிலும் உண்மையே. மனிதன் முயற்சி எதுவும் எடுக்காமலும், உழைக்காமலும் இருந்தால் எவ்வித முன்னேற்றத்தையும் அடைய முடியாது. அவர் தனது முதல் அறிவுரையின் போது, இளைஞர்களுக்கு முயற்சியும் உழைப்பும் உயிர் மூச்சுக்குச் சமமாகும் என்று கூறினார்.
 
அதேபோல் வாழ்க்கையில் பல இன்னல்கள் ஏற்படலாம். அதை நம்மால் முன்பே கற்பனை செய்ய முடியாது. ஏனென்றால் சூழ்நிலைகள் மனிதர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. இவ்வாறு இருக்கையில், நாம் எப்பொழுது பொறுமையாகவும் கடவுள் மீது நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். இதைத்தான் அவர் இறுதியாகவும் கூறினார். இரண்டுமே உண்மைதான். ஆனால் அதை எவ்வாறு உபயோகப் படுத்த வேண்டும் என்பது மனிதனின் திறமை மற்றும் புத்திசாலித்தனத்தில்தான் இருக்கிறது!" என்றான்.
 
விக்கிரமனது இந்த சரியான விடையினால் அவன் மௌனம் கலையவே, வேதாளம் தான் தங்கிஇருந்த உடலுடன் பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.
 

0 comments:

Post a Comment

Flag Counter