மகாவிஷ்ணு - 6

இரணியகசிபு பிரகலாதனைப் பார்த்து "பிரகலாதா! பேஷ்! உன்னைக் கொண்டு விஷ்ணுவைப் பழிக்குப் பழி வாங்கும் வாய்ப்பு கிடைத்து விட்டது" எனக் கூறி நரசிம்மத்தோடு சண்டை போடலானான். நரசிம்மம் அவன் மீது பாய்ந்து தூக்கிக் கொண்டு அந்த சபாமண்டபத்தின் வாசல் படிக்குக் கொண்டு போயிற்று. 
உள்ளேயும் வெளியேயும் இல்லாமல் இருக்கும் அந்த வாசல்படி மீது நரசிம்மம் இரணியகசிபுவை பகலும் இரவும் கூடும் மாலை நேரத்தில் ஆகாயத்திலும் பூமி மீதும் அல்லாது தன் தொடை மீது வைத்துக் கொண்டு தன் கூரிய நகங்களைக் கொண்டு கிழித்து நார் நாராக ஆக்கியது. பிரம்மா கொடுத்த வரங்கள் பொய்க்காமல் நரசிம்மாவதாரம் எடுத்து மகாவிஷ்ணு இரணிய கசிபுவை இவ்வாறு கொன்றார்.
தம் மன்னனான இரணியகசிபு இறந்ததைக் கண்டு இராட்சஸர்கள் திகைத்துப் போனார்கள். 
அந்த உருவத்தை ஒழிக்க ஒன்று சேர்ந்து மகாவிஷ்ணுவை ராட்சஸர்கள் தாக்க வரவே, அவர் தம் சக்கராயுதத்தைப் பிரயோகித்தார். ராட்சஸர்கள் அனைவரும் அழிந்தனர். கோர ரூபமாய்க் காட்சி அளித்த நரசிம்மரைக் கண்டு தேவர்களே நடுங்கலாயினர். அப்போது பிரகலாதன் நரசிம்மரைத் துதித்து வணங்கி நின்றான்.


அவரும் சாந்தம் அடைந்தார். அவர் பிரகலாதனிடம் "நீ உன் தந்தையின் ஈமக்கிரியைகளைச் செய். பிறகு சிம்மாசனத்தில் அமர்ந்து நாட்டை ஆள்" எனக் கூறி ஆசீர்வதித்து விட்டு மறைந்தார். 
இவ்வாறு ஜெய விஜயர்களின் ஒரு பிறப்பு முடிவுற்றது. பிரகலாதனும் நீண்டகாலம் ஆட்சி புரிந்த பின் தன் மகன் விரோசனனுக்குப் பட்டம் கட்டி விட்டு காட்டிற்குப் போய் விஷ்ணுவை தியானித்துத் தவம் செய்து முக்தி பெற்றான்.
விரோசனனுக்குப் பின் அவனது மகன் பலி அரசனானான். பாற்கடலிலிருந்து வந்த உச்சச்சிரவம் என்ற குதிரையை அவன் தன் வசப்படுத்திக் கொண்டான். மயன் அவனுக்கு தரையிலும் நீரிலும் ஆகாயத்திலும் செல்லக் கூடிய ஒரு விமானத்தை அமைத்துக் கொடுத்தான்.
ராட்சஸர்களுக்கு அமிர்தம் கிடைக்காமல் தேவர்கள் ஏமாற்றி விட்டார்கள் என்று காரணத்தைக் கூறி அவன் தேவர்கள் மீது போர் தொடுத்தான். 

அமிர்தம் சாப்பிட்டதால் தமக்கு மரணமே இல்லை என்ற தைரியத்தில் தேவர்கள் ராட்சஸர்களை எதிர்த்தார்கள். கடும் போரில் ராட்சஸர்கள் படுதோல்வியுற்று இறக்கலானார்கள். அவர்களது குரு சுக்கிராச்சாரியார் தம் மிருதசஞ்சீவினி மந்திரத்தைக் கொண்டு இறந்த ராட்சஸர்களை உயிர்ப்பித்து வரலானார். 
தேவர்களோடு போர் புரிந்து தோல்வி கண்ட பலி பிறகு பூ மண்டலம் முழுவதையும் தன் வசப்படுத்திக் கொண்டான். அதனால் அவனுக்கு பலிசக்கரவர்த்தி என்ற பெயர் ஏற்பட்டது. சுக்கிராச்சாரியார் அவனை நூறு அசுவமேத யாகங்கள் செய்ய வைத்தார். 
இதன் பின்னர் பலி மீண்டும் சொர்க்கலோகத்தின் மீது படை எடுத்து அதையும் தன் வசப்படுத்திக் கொண்டதோடு, பாதாள லோகத்தையும் கைப்பற்றினான். அவனது ஆட்சியும் நல்ல முறையில் சட்டதிட்டங்களோடு நேர்மையாக நடைபெற்று வந்தது. 
தேவர்களின் தாயான அதிதி தன் கணவரான கஸ்யபபிரஜாபதியிடம் தன் மைந்தர்கள் பலிக்கு பயந்து சொர்க்கலோகத்தை விட்டு ஓடிப் போய் காட்டில் படும் அவஸ்தைகளைக் கூறி அவர்கள் மீண்டும் தேவலோகத்தை ஆளும் வழி என்ன என்று கேட்டாள்.


அவரும் அவளை விஷ்ணுவைக் குறித்துத் தவம் செய்யுமாறு கூறினார். அதிதியும் விஷ்ணுவைக் குறித்து தவம் செய்யவே, விஷ்ணுவும் தாம் அவள் வயிற்றில் பிறந்து தேவர்களுக்கு விடிவுகாலம் வரச் செய்வதாக வாக்களித்தார். இதன் பின் அவர் அதிதிக்கும் கஸ்யபருக்கும் மகனாகப் பிறந்தார். மிகவும் குள்ளமாக இருந்த அவரை எல்லோரும் வாமனர் என அழைத்தார்கள். அவர் எல்லா சாஸ்திரங்களையும் கற்றார். 

அப்போது பலிசக்கரவர்த்தி நர்மதை நதிக்கரையில் மிகச் சிறந்த யாகமான விஸ்வஜித் யாகத்தை சுக்கிராச்சாரியாரின் மேற்பார்வையில் செய்து கொண்டிருந்தான். அவன் யாகத்தின் போது தாராளமாக தானங்களைச் செய்து கொண்டிருந்தான். அப்பொழுது வாமனர் அங்கு சென்றார்.
மிகுந்த ஒளிமிக்க முகத்தோடு வரும் வாமனரை பலிசக்கரவர்த்தி பயபக்தியுடன் வரவேற்றான். பிறகு அவன் "ஐயா! தாங்கள் யாரோ?" எனக் கேட்டான். அவரும் "நான் வாமனன். உன்னை கண்டு தானம் பெறவே வந்தேன்" என்றார். பலிசக்கரவர்த்தியும் "அப்படியா? மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள், நீங்கள் என்ன கேட்டாலும் கொடுக்கிறேன்" என்றான். 
அப்போது சுக்கிராச்சரியார் பலியை தனியே அழைத்துப் போய் "இந்த வாமனர் உருவில் வந்திருப்பது சாட்சாத் மகாவிஷ்ணுதான். உன்னை ஏமாற்றி உன்னிடம் உள்ளதை எல்லாம் அவர் பறித்துக் கொள்ளப் போகிறார். எனவே அவர் என்ன தானம் கேட்டாலும் கொடுக்காதே" என்றார். 
 
பலிசக்கரவர்த்தியோ "நீங்கள் கூறுவது போல மகாவிஷ்ணுவே வந்து என்னிடம் தானம் கேட்கிறார் என்றால் அது எனக்கு எவ்வளவு பெருமைக்குரிய விஷயம்! மேலும் அவர் எதைக் கேட்டாலும் நான் கொடுப்பதாக வாக்களித்து விட்டேன்" என்றான். சுக்கிராச்சாரியாரும் "நான் சொல்வதைக் கேள்" என்றார்.


பலியோ "நான் தானம் கொடுத்தே தீர்வேன். இதன் விளைவு எப்படிப்பட்டதானாலும் நான் கவலைப்படமாட்டேன். ஒரு பொருளைக் கொடுப்பதாகக் கூறி விட்டுப் பிறகு அதனை மறுப்பது என் போன்ற வீரனுக்கு அழகாகுமா?" என்றான். இனி என்ன சொன்னாலும் பலி கேட்க மாட்டான் என்பதை சுக்கிராச்சாரியார் தெரிந்து கொண்டார். 
கடைசியாக சுக்கிரர் "இந்த வாமனரான விஷ்ணு உன்னை ஏமாற்றி அதலபாதாளத்தில் அமிழ்த்தி விடப்போகிறார்" என்றார். இதை பொருட்படுத்தாத பலிசக்கரவர்த்தி தன் மனைவி விந்தியாவளியை, நீர் கொண்டு வரச் சொல்லி வாமனரின் பாதங்களைக் கழுவி பூஜை செய்தான். பிறகு அவன் "உங்களுக்கு என்ன வேண்டும் என் பதைச் சொல்லுங்கள். அதனைக் கொடுக்கிறேன்" என்றான். வாமனரும் "என் காலால் மூன்றடி இடம் இருந்தால் போதும். அதில் இருந்து நான் தியானம் செய்ய முடியும். எனவே உன் பரந்த சாம்ராஜ்யத்தில் மூன்றடி நிலம் எனக்குக் கொடு. என் கால்களைக் கொண்டு அளந்து எடுத்துக் கொள்கிறேன்" என்றான். 
"சரி. நீங்கள் கேட்கும் மூன்றடி இடத்தை இப்போதே தானமாக தாரை வார்த்துக் கொடுக்கிறேன்" என பலிசக்கரவர்த்தி கூறி நீர் நிரம்பிய கிண்டியை எடுத்தான். அப்போது சுக்கிராச்சாரியார் சிறிய வண்டின் உருவம் எடுத்து அந்தக் கிண்டிக் குழாயின் வாயில் புகுந்து நீர் வராமல் அடைத்தார். 
வாமனரும் சிரித்தவாறே ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து கிண்டியின் வாயைக் குத்தினார். அதனால் சுக்கிராச்சாரியாரின் ஒரு கண் போய் விட்டது. பலியும் "உங்கள் காலால் நீங்கள் மூன்றடி இடம் எடுத்துக் கொள்ள தானம் செய்கிறேன்" என்று கூறி தாரை வார்த்தான். மறு நிமிடம் வாமனர் தம் உருவைப் பெரிதாக்கி விசுவரூபம் கொண்டார். 
அவரது தலை எங்கே கால் எங்கே என்பது கூடத் தெரியவில்லை. அவர் தம் காலால் பூமியையும் பாதாளம் முழுவதையும் ஒரு அடியாக அளந்தார். அதன் பின் ஆகாயம் முழுவதையும் இரண்டாவது அடியாக அளந்தார். பிறகு அவர் பலியிடம் "பலிசக்கரவர்த்தி! மூன்றாவது அடியை அளக்க இடம் இல்லையே.

எங்கே நீ காட்டு" என்றார். 
பலிசக்கரவர்த்தியும் சட்டென்று "இதோ என் தலை உள்ளது. அதன் மீது தங்கள் காலை வைத்து மூன்றாவது அடியாக அளந்து கொள்ளுங்கள் என்றான். விஷ்ணுவும் தம் விசுவரூபத்தை விட்டு மீண்டும் வாமனரானார். அவர் தம் கால் மகாபலியின் தலை மீது வைத்து "என் காலால் உன் தலையை அளக்க முடியாது போய் விடுமோ என்னவோ" என்று சிரித்தவாறே கூறினார். அப்போது பிரகலாதன் அவர் முன் வந்து "என் பேரன் பலி உங்கள் விரோதியல்லவே. அவனுக்கு அனுக்கிரகம் செய்யுங்கள்" என்று வேண்டிக் கொண்டான். 
விந்தியாவளியும் "வாமனரே! என் கணவருக்கு எவ்விதக் கெடுதலும் நேராமலிருக்க அனுக்கிரக வேண்டும்" என வேண்டிக் கொண்டாள். வாமனரும் "உன் கணவருக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகத்தானே நான் இப்படி வாமனர் உருவில் வந்தேன். அவனது தான புண்ணிய பலம் மிகவும் சக்திவாய்ந்தது. பலியைப் போல யாருமே இதற்கு முன் இருந்ததும் இல்லை.இனியும் இருக்கப் போவதில்லை. இவன் பாளதாள லோக அதிபதியாக இருந்து சுகமாக வாழ்ந்து வருவான்" எனக் கூறினார். பிறகு அவர் தம வாமன உருவத்தை விட்டு விஷ்ணுவாகித் தன் திருப்பாதத்தை அவன் தலை மீது வைத்தார். பிறகு அவர் "பலி! நீ உன் மனைவியுடனும் உன் தாத்தா பிரகலாதனுடனும் பாதாள லோகத்தில் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்வாய்" எனக் கூறி ஆசீர்வதித்து விட்டு மறைந்தார். 
இப்படியாக விஷ்ணு வாமனராக அவதாரம் செய்து மகாபலியின் தானமகிமையை உலகிற்கு எடுத்துக் காட்டியதோடு தன் அருள் பெற்றவன் முடிவில் நல்ல கதியையே அடைவான் என்பதனையும் உலகிற்கு உணர்த்தினார்.

0 comments:

Post a Comment

Flag Counter