காலத்தால் செய்த உதவி

காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
                                      ஞாலத்தின் மாணப் பெரிது


விளக்கம் : மிகவும் தேவைப்படும் நேரத்தில் ஒருவருக்கு செய்யப்படும் உதவி சிறிதாக இருந்தாலும், அது உலகத்தை விடப் பெரிதாக மதிக்கப்படும்.

மகேந்திரன் ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் பெரிய அதிகாரியாகப் பணிபுரியும் இளைஞன். அந்நகரத்தில் முக்கிய பிரமுகராகவும் மதிக்கப்ப்டுபவன். அந்நகரத்துக்கு அருகிலிருக்கும் நல்லூர் கிராமத்துக்கு ஆண்டுதோறும் சென்று, ஜீவானந்தம் எனும் முதியவரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அங்கு செல்லும் போதெல்லாம் அவருக்கு பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்து, வணங்கி விட்டு வருவான்.
நகரின் பெரிய செல்வந்தரின் மகளுடன் மகேந்திரனுக்கு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து மறுநாளே தன் புது மனைவியை அழைத்துக் கொண்டு நல்லூர் புறப்பட்டான்.  காரணம் கேட்ட மனைவியிடம், வயது முதிர்ந்த ஜீவானந்தம் திருமணத்துக்கு வர இயலாததால், அவரைச் சந்தித்து ஆசி பெறுவதற்கு செல்வதாகக் கூறினான்.

"நேரில் சென்று ஆசி பெறும் அளவுக்கு அவர் உங்கள் நெருங்கிய உறவினரா? அல்லது உங்கள் தந்தையின் நெருங்கிய நண்பரா?" என அவன் மனைவி கேட்டாள். இதற்கு பதிலளித்த மகேந்திரன், "அதெல்லாம் இல்லை. சிறு வயதில் என்னை ஒருமுறை பள்ளிக்கு அழைத்துச் சென்றார்" என்றான். "இவ்வளவு தானா...இந்த சிறிய உதவிக்காகவா அவரிடம் ஆசி வாங்கச் செல்கிறீர்கள்?" எனக் கேட்டு சிரித்தாள்.

"சாதாரண உதவி என்று சொல்லாதே. என்னைப் பொருத்தவரை அது மிகப் பெரிய உதவி. அன்று எனக்கு பள்ளி இறுதியாண்டுத் தேர்வு. பள்ளிக்கு சைக்கிளில் மிக வேகமாகச் சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு கல்லில் இடறி தலை கீழாக விழுந்தேன். என்னால் எழுந்து நடக்க முடியவில்லை. சைக்கிளும் பழுதாகி விட்டது. அப்போது அவ்வழியே அவசர வேலையாக சைக்கிளில் வந்த ஜீவானந்தம், என் நிலையை உணர்ந்து என்னை தன் சைக்கிளில் அமர வைத்து சரியான நேரத்தில் பள்ளியில் சேர்த்தார். தனது அவசர வேலையைக் கூட மறந்து என்னை பள்ளியில் சேர்க்கவில்லை என்றால் கண்டிப்பாக நான் தேர்வெழுதியிருக்க முடியாது. அந்தத் தேர்வில் வெற்றி பெற்று பள்ளியிலேயே முதலாவதாக வந்தேன். .நான் ஏன் அவருக்கு நன்றி பாராட்டுகிறேன் என்று இப்போது புரிகிறதா?" என்றான் மகேந்திரன்.

இதைக் கேட்டு தன் தவறை உணர்ந்த மகேந்திரனின் மனைவி, அவனிடம் மன்னிப்பு கேட்டாள். பின்னர் இருவரும் ஜீவானந்தத்தின் வீட்டிற்ஷ்கு சென்று அவரிடம் ஆசி பெற்றனர்.

0 comments:

Post a Comment

Flag Counter