போலி சன்னியாசியின் திட்டம்!

 

வெகு காலத்திற்கு முன் பாஞ்சால நாட்டை ரேணுகன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் சாது சன்னியாசிகளை மிகவும் மதித்து கௌரவிப்பான். ஒரு முறை இமயமலையிலிருந்து மகாரட்சிதர் என்ற முனிவர் தம் பல சீடர்களுடன் பாஞ்சால நாட்டிற்கு வந்தார். அவரை ரேணுகன் வரவேற்று உபசரித்து எல்லாரும் தங்க வசதிகளைச் செய்து கொடுத்தான்.

மழை ஆரம்பமாகி விட்டது மகாரட்சிதரும் தன் சாதுர்மாச விரதத்தை அங்கேயே மேற்கொண்டு நான்கு மாதங்கள் சீடர்களுடன் தங்கி விட்டார். பாஞ்சால மன்னனும் அவர்கள் எல்லாருக்கும் எவ்விதக் குறையும் இல்லாது பார்த்துக் கொண்டான். மழைக்காலம் முடிந்து சாதுர்மாச விரதமும் முடியவே, மகாரட்சிதர் ரேணுகனிடம் விடைபெற்றுக் கொண்டு தம் சீடர்களுடன் இமயமலைக்கு கிளம்பினார். அன்று மதியம் மகாரட்சிதரும் அவரது சீடர்களும் வழியில் ஓரிடத்தில் தங்கி இளைப்பாறினார்கள்.

அப்போது யாவரும் பாஞ்சால மன்னனின் நல்ல குணத்தைப் பாராட்டிப் பேசினர். சீடர்களில் சோதிடம் தெரிந்த ஒருவன் “பாஞ்சால மன்னனுக்கு இப்போது குழந்தையே பிறக்கவில்லை. ஆயினும் அடுத்த ஆண்டிற்குள் ஒரு ஆண் குழந்தை பிறக்கப் போகிறது அது தெய்வாம்சத்தோடு கூடி எல்லாராலும் மதிக்கப்பட்டு வரும்” என்றான்.

இதைக் கேட்ட யாவரும் மகிழ்ந்தனர். அந்தச் சீடர்களில் ஒரு போலி சன்னியாசி இருந்தான். அவன் மனதில் பாஞ்சால மன்னனிடம் இந்த நற்செய்தியைக் கூறி நிறையப் பரிசு பெற வேண்டுமென்ற ஆசை பிறந்தது. எனவே அவன் ஏதோ சாக்குச் சொல்லி அந்தக் கூட்டத்தோடு போகாமல் பின் தங்கினான். பிறகு பாஞ்சால மன்னனின் தலைநகருக்குப் போய் மன்னனைக் கண்டு “அரசே உமக்கு அடுத்த ஆண்டிற்குள் அழகிய ஆண் குழந்தை பிறக்கும். இதை என் ஞான திருஷ்டியால் அறிந்தேன்” என்றான்.
 அது கேட்டு மன்னன் மகிழ்ந்து “மிக்க மகிழ்ச்சி, யோகீஸ்வரரே! நீங்கள் இங்கேயே இருந்து எமக்கும் என் குழந்தைகளுக்கும் நற்போதனைகளை அளித்து வாரும்” எனக் கூறி அரண்மனை ஓரத்தில் ஒரு தோட்டத்தை அமைத்து வசதியான வீட்டையும் கட்டிக் கொடுத்தான். அந்தப் போலி சன்னியாசி அத்தோட்டத்தில் காய்கறிகளைப் பயிரிட்டு அவற்றை விற்றுப் பணம் சேர்க்கலானான். அவனிடம் நிறைய பணம் சேரலாயிற்று. ஓராண்டு கழிந்தது. அம்மன்னனின் மனைவி ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். போதிசத்வரே அப்படி பிறந்தவர். அவருக்கு சுமனன் என்ற பெயர் வைத்து வளர்த்தார்கள். அவனும் வளர்ந்து பெரியவனானான்.

அப்போது அந்தப் போலி சன்னியாசி அரண்மனைத் தோட்டத்திலேயே இருந்தான். அரசனுக்கோ அவன் சொல்வதுதான் வேத வாக்காக இருந்தது. அவனது கபடத்தன்மையை ரேணுகன் அறியவில்லை. சுமனனோ அறிந்து கொண்டு விட்டான். அவன் அந்த சன்னியாசியின் உண்மை குணத்தை வெளிபடுத்த தீர்மானித்துக் கொண்டான். ஒருநாள் போலி சன்னியாசி காய்கறி தோட்டத்தில் பாத்தி கட்டிக் கொண்டிருந்த போது சுமனன் “ஏய் தோட்டக்காரா!” என்று உரக்கக் கத்திக் கூப்பிட்டான்.

இது போலி சன்னியாசிக்கு எரிச்சலை மூட்டியது. சுமனன் தன்னைப் பற்றித் தெரிந்து கொண்டு விட்டான் என அவன் கண்டு அவனைப் பழி வாங்க எண்ணினான். அதற்கான வழியும் அவனுக்கு தெரிந்தது. அதன்படி ஒருநாள் அரசன் வரும் வேளை தன் வீட்டிலிருந்த பொருள்களை எல்லாம் வாரி மூலைக்கு ஒன்றாகப் போட்டு விட்டு, தன் உடலில் எண்ணெய் தடவிக் கொண்டு போலி சன்னியாசி படுத்து முனகலானான்.

ரேணுகன் தான் மதிக்கும் யோகியின் நிலை கண்டு “சுவாமி! என்ன இது? யார் இப்படிச் செய்தது?” எனக் கேட்டான். அந்த சன்னியாசியும் “எல்லாம் உன் மகன் சுமனன்தான். என்னையும் அடித்து என் பொருள்களை எல்லாம் தூக்கிப் போட்டு உடைத்து விட்டான்” என்றான். உடனே ரேணுகன் தன் வீரர்களிடம் “இப்படி அக்கிரமம் செய்த சுமனனின் தலையை வெட்டி எறியுங்கள்” என்று கட்டளையிட்டான்.
கட்டளையை நிறைவேற்றத் தலையாரி சுமனனைக் காணச் சென்றான். அப்போது அவன் தன் தாயுடன் இருந்தான். தந்தையின் கட்டளையைக் கேட்டு அவன் ரேணுகனைக் கண்டு “தந்தையே, நீங்கள் மகாத்மா என்று போற்றும் பேர்வழி போலி சன்னியாசி. பேராசை பிடித்தவன். அரண்மனையில் காய்கறி பயிரிட்டு காவல் வீரர்களை விற்று வரச் சொல்லி பணம் சேர்த்து வைத்திருப்பவன். உண்மையை விசாரியுங்கள்” என்றான்.

ரேணுகனும் தன் அரண்மனைக் காவலாளிகளை விசாரித்து சுமனன் கூறியது உண்மையே எனத் தெரிந்து கொண்டான். போலி சன்னியாசியின் வீட்டைச் சோதனை போட்டதில் அவன் மறைத்து வைத்திருந்த ஏராளமான பணமும் அகப்பட்டது.

உடனே ரேணுகன் போலி சன்னியாசியை மிரட்டவே, அவன் உண்மையை ஒப்புக் கொண்டான். சுமனன் அவனை ஒன்றுமே செய்யவில்லை என்பதும் வெளியாயிற்று. பொய்க் குற்றச்சாட்டுகளுக்காக சன்னியாசிக்கு மன்னன் மரண தண்டனை விதித்தான். தான் தவறு செய்ததாக கூறி ரேணுகன் சுமனனை ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் படிக் கூறினான். அவனோ “வேண்டாம். நான் இமயமலைக்குப் போய் தவம் செய்கிறேன்” எனக் கூறிக் கிளம்பி விட்டான்.


ரேணுகனுக்கு அப்போது முதல் சன்னியாசிகள் என்றாலே எரிச்சல். எந்த சன்னியாசி அவனைக் காண வந்தாலும் அவரை அவன் மதிக்கவில்லை. ஒரு போலி சன்னியாசியின் செய்கையால் நல்ல சன்னியாசிகளுக்கும் மதிப்பு போயிற்று.

0 comments:

Post a Comment

Flag Counter