வீண் போட்டி ஏன்?

 

பிரம்மதத்தன் காசியை ஆண்ட காலத்தில் போதிசத்வர் குத்திலன் என்ற வீணை வித்வானாக இருந்தார். அவர் தம் பதினாறாவது வயதிலேயே தமக்கு இணையாக யாராலும் வீணை வாசிக்க முடியாது என்பதைக் காட்டி விட்டார். அவரது புகழ் எங்கும் பரவி இருந்தது. இதைக் கண்ட காசி மன்னனும் அவரைத் தன் ஆஸ்தான வித்வானாக நியமித்துக் கொண்டான்.

இது நடந்து சில ஆண்டுகளுக்குப் பின் காசியிலிருந்து சில வியாபாரிகள் உஜ்ஜயினி நகருக்குத் தம் தொழில் சம்பந்தமாகச் சென்றனர். அவர்கள் குத்திலனது வீணை வாசிப்பைப் பல முறை கேட்டு ரசித்து மகிழ்ந்தவர்கள். உஜ்ஜயினியில் தம் வேலை சற்றுத் தாமதமாகும் என்பதால் சில நாள்கள் தங்கினர். அப்போது ஒரு நாள் இரவு யாரையாவது வீணை வாசிக்கச் சொல்லிக் கேட்கலாம் என அவர்கள் நினைத்தனர்.

யாராவது நல்ல வீணை வித்வான் இருக்கிறாரா என அவர்கள் விசாரித்த போது பலர் மாசிலன் என்ற பெயரைக் கூறினார்கள். எனவே காசி வியாபாரிகள் தம் பொழுது போக்கிற்காக மாசிலனை வீணைக் கச்சேரி செய்ய அழைத்து வந்தார்கள். ஆனால் மாசிலனது வீணை வாசிப்பு அவர்களில் ஒருவரைக் கூட கவரவில்லை. அவர்கள் ரசிக்கவும் இல்லை.

இதைக் கண்ட மாசிலன் "நான் இவ்வளவு நேரமாக வீணை வாசித்தது எப்படி இருந்தது?" என்று கேட்டான். அப்போது காசி வியாபாரிகளில் ஒருவன் "நீங்கள் வீணை வாசித்தீர்களா? நீங்கள் சுருதி கூட்டினீர்கள் என்றல்லவா நினைத்தேன்" என்றான்.

அதைக் கேட்ட மாசிலனின் முகம் அவமானத்தால் சுண்டியது. அவன் அவர்களிடம் "அப்படியானால் என்னை விட நன்கு வாசிக்கக் கூடிய வீணை வித்வான் இருக்கிறார் என்று தானே பொருள்" என்று கேட்டான்.

 அப்போது இன்னொருவன் "அப்படியானால் நீங்கள் எங்கள் காசி வீணை வித்வானை பற்றிக் கேள்வி பட்டதில்லையா?" என்று கேட்டான். "அவர் பெரிய வித்வானா?" என்று மாசிலன் கேட்டான்.
வேறொருவனோ "அவரது வீணை வாசிப்பைக் கேட்ட பின் நீங்கள் வீணையை வாசிப்பதைக் கேட்டுச் சகித்துக் கொண்டிருக்க முடியுமா?" என்றான். அப்போது மாசிலன் "நான் அவருக்குச் சமமாக வீணை வாசித்துக் காட்டி உங்களிடமிருந்த பணம் வாங்கிக் கொள்கிறேன். இப்போது நீங்கள் எனக்கு பணம் கொடுக்க வேண்டாம்" எனக் கூறி அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.

மாசிலன் அன்றே உஜ்ஜயினியை விட்டுக் கிளம்பி காசி நகரை அடைந்தான். அங்கு குத்திலனான போதிசத்வரைக் கண்டு "ஐயா! நான் உஜ்ஜயினியை சார்ந்தவன். தங்களிடம் வீணைப் பயிற்சி பெற வந்திருக்கிறேன். தங்கள் தயவு இருந்தால் தங்களைப் போல வீணை வாசிக்கும் பேறு பெறுவேன்" என்றான். போதிசத்வரும் அவனைத் தம் சீடனாக ஏற்று தினமும் வீணையில் அவனுக்குப் பயிற்சி அளிக்காலானார். மாசிலனும் குத்திலனான போதிசத்வரிடம் நன்கு வீணை கற்கலானான்.

இப்படியாக சில ஆண்டுகள் கழிந்தன. ஒரு நாள் போதிசத்வர் தம் சீடனிடம் "நீ என்னிடம் கற்க வேண்டியதெல்லாம் கற்றாகி விட்டது. இனி நீ உன் நாட்டிற்குத் திரும்பிச் செல்லலாம்" என்றார். மாசிலனுக்கோ உஜ்ஜயினிக்குத் திரும்பிப் போக இஷ்டமே இல்லை. காசியிலேயே அரச சபையில் உத்தியோகத்தில் அமர்வது என அவன் தீர்மானித்துக் கொண்டான்.

அவன் போதிசத்வரிடம் "குருவே! நான் உஜ்ஜயினிக்குப் போக விரும்பவில்லை. உங்களுக்குத் தெரிந்ததெல்லாம் நானும் கற்றுக் கொண்டு விட்டதால் உங்களோடு எனக்கும் சமஸ்தானத்தில் வித்வானாக இருக்கும் வேலையை வாங்கிக் கொடுங்கள். நான் உங்களுக்கு மிகவும் கடமைப் பட்டவனாக இருப்பேன்" என்றான். போதிசத்வரும் மறுநாள் காசி மன்னனிடம் மாசிலனுக்கு வேலை போட்டுக் கொடுக்கும்படி கேட்டார்.

 மன்னனும் "மாசிலன் உங்கள் சீடன் என்பதற்காகத்தான் நான் அவனை வேலையில் வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு அவனுக்கு உங்களுக்குக் கிடைக்கும் சம்பளம் அளவிற்குக் கொடுக்க முடியாது. உங்களுக்கு கொடுப்பதில் பாதிதான் கொடுப்பேன். இதற்கு சம்மதமானால் அவன் இந்த வேலையை ஏற்கட்டும்" என்றான்.

போதிசத்வரும் வீடு திரும்பி மாசிலனிடம் மன்னன் கூறியதைச் சொன்னார். மாசிலன் அது கேட்டு மனம் வருந்தினான். இது என்ன நியாயம்! ஒரே மாதிரியாக உள்ள இருவரில் ஒருவருக்கு நிறையச் சம்பளம்? மற்றவனுக்கு அதில் பாதியா? மன்னனிடமே இதற்கு விளக்கம் கேட்க எண்ணி அவன் மன்னனை பேட்டி கண்டான்.

மாசிலன் மன்னனிடம் "அரசே இப்போது ஆஸ்தான வித்வானாக உள்ளவரின் சம்பளத்தில் பாதி கொடுத்து என்னை வேலைக்கு வைத்துக் கொள்ளவதாகக் கூறினீர்களாமே. நான் எந்த விதத்தில் அவரை விடக் குறைந்து போனேன்? அவர் எப்படியெல்லாம் வீணை வாசிக்கிறாரோ அதுபோல என்னாலும் வாசிக்கமுடியும். இது பற்றி என் குருவிடமே நீங்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். எனவே நீங்கள் எனக்கும் அவருக்குக் கொடுக்கும் அளவிற்கு சம்பளம் கொடுங்கள்" என்றான்.

மன்னனுக்கு ஒரே எரிச்சலாக இருந்தது. அவன் "நீ குத்திலரின் சீடன் என்ற ஒரே காரணத்திற்காகத் தான் உனக்கு உத்தியோகம் அளிக்கச் சம்மதித்தேன். நீ அவருக்குச் சமமான வீணை வித்வான் என நான் எப்படி நம்பமுடியும்?" என்று கேட்டான்.

மாசிலனும் "நீங்கள் எனக்கும் அவருக்கும் போட்டி வைத்துப் பாருங்கள். அப்போது தெரியும்" என்றான். காசி மன்னனும் அதற்கு இணங்கி ஒரு போட்டியை வைத்தான். அவன் "நீ இந்தப் போட்டியில் வென்றால் உனக்கு இங்கே உத்தியோகம் கிடைக்கும், தோற்றால் நீ இந்த நாட்டை விட்டே ஓடி விட வேண்டும். தெரிந்ததா?" என்றான். மாசிலனும் அதற்கு இணங்கினான்.

மறுநாளே குருவிற்கும் சீடனுக்கும் இடையே போட்டி நடந்தது. அந்த போட்டியைக் காண்பதற்காகவும், கேட்பதற்காகவும் எல்லாரும் கூடி விட்டார்கள். இருவரும் ஒருவரை மற்றவர் வெல்வதற்காக வீணையை வாசிக்கலானார்கள். சற்று நேரத்திற்குப் பின் போதிசத்வரின் வீணை கம்பிகளில் ஒன்று அறுந்து போகவே அவர் மூன்று கம்பிகளில் வாசிக்கலானார். இது கண்டு மாசிலன் தன் வீணையின் ஒரு கம்பியை அறுத்து விட்டு அவரைப் போல வாசித்தான். போதிசத்வரின் வீணையில் மேலும் இரு கம்பிகள் அறுந்து போகவே ஒரே கம்பியில் வாசித்தார். மாசிலனும் தன் வீணைக் கம்பிகளில் இரண்டை அறுத்து விட்டு ஒரே கம்பியில் வாசித்தான்.

போதிசத்வரின் வீணையின் கடைசி கம்பியும் அறுந்தது. கம்பி இல்லாமலேயே வீணையிலிருந்து அவர் இனிய நாதம் கிளம்பி வரச் செய்தார். மாசிலனும் தன் வீணையின் கடைசிக் கம்பியை அறுத்து விட்டு வாசிக்க முயன்றான். ஆனால் அவனது வீணையிலிருந்து எவ்வித நாதமும் வரவில்லை.

சபையோர் போதிசத்வரைப் பாராட்டினார்கள். மாசிலனை கேலி செய்தார்கள். இதனால் மாசிலனுக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டது. இதனால் அன்றே தன் ஊரான உஜ்ஜயினிக்குக் கிளம்பி விட்டான்.

0 comments:

Post a Comment

Flag Counter