பேச்சுத் திறமை



 அமெரிக்காவில் புகழ் பெற்ற வழக்கறிஞர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் ஜோசப் சோட். அவரை எதிர்த்து வாதாட ஆளில்லை எனும் அளவுக்கு, தனது வாதத் திறமையால் நீதிமன்றங்களைக் கலக்குவார். பத்திரிகைகளில் அவரை பேட்டியெடுக்க போட்டா போட்டி நடக்கும். ஒரு பத்திரிகையாளர் வித்தியாசமாக ஜோசப்பின் தாயாரை பேட்டியெடுத்தார்.

"உங்கள் பிள்ளை இந்தளவுக்கு புகழ் பெறுவார் என்று நினைத்தீர்களா?"

"ஜோசப் சிறுவனாக இருந்த போதே, சில நிகழ்ச்சிகள் மூலம் அவனது சொல்லாற்றலைப் பார்த்து வியந்திருக்கிறேன். அவன் தனது வாய்த் திறமையால் பெரியாளாக வருவான் என யூகித்து விட்டேன்."

"என்ன அது... சொல்லுங்களேன்!"

"ஒரு நாள் சமையலறையில் வேலையாக இருந்தேன். இவன் அப்பா வெளியே செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் ஜோசப்பின் அறையில் பூனை அலறும் சத்தம் கேட்டது. எப்போதும் பூனையில் வாலை இழுத்து விளையாடுவது ஜோசப்பின் வழக்கம். உடனே நான் அவனை அதட்டினேன்"
"டேய் ஜோசப்.. பூனை வாலை பிடிச்சி இழுக்காதே..அது பாவம்" என்றேன்.

அதற்கு அவன் "பூனை வாலை நான் இழுக்கலை. அதோட வாலை அதுவே இழுத்துகிட்டு கத்துது. நான் சும்மா நிக்கறேன்" என்றான்.

எனக்கு குழப்பமாகி விட்டது. உடனே அந்த அறையை எட்டிப் பார்த்தேன். அங்கு பூனை வாலை ஜோசப் மிதித்துக் கொண்டிருந்தான். பூனை வலி தாங்காமல் தன் வாலை இழுத்துக் கொண்டிருந்தது. நடந்த நிகழ்ச்சியை அப்படியே மாற்றிச் சொல்லி ஏற்றுக் கொள்ள வைக்கும் திறமை அவனுக்கு அப்போதே இருந்தது.
-இது அந்த தாயாரின் மலரும் நினைவுகள்.


வார்த்தைகளை தனக்கு சாதகமாக்கி, அடுத்தவர்களை ஏற்றுக்கொள்ளச் செய்வது ஒரு கலை. அது வழக்கின் திசையை மட்டுமல்ல, வாழ்க்கையின் திசையைக் கூட மாற்றவல்லது.
மனஇயல் நிபுணர்கள் என்ன சொல்வது என்ன தெரியுமா?

"எவன் ஒருவன் தன் வீசப்படும் கற்களைக் கொண்டே வலிமையான அடித்தளம் அமைத்து முன்னேறுகிறானோ, அவனே சாதனையாளன் ஆகிறான்"

0 comments:

Post a Comment

Flag Counter