அயோத்தியா காண்டம் - 2

 
கூனி தான் விரித்த வலைக்குள் கைகேயி நன்கு அகப்பட்டு விட்டாள்என்பதை அறிந்து கொண்டாள். அவள் பேசாமல் இருப்பாளா? "இதோ பார் இராமனைக் காட்டிற்கு விரட்டி விட்டு உன் மகன் பரதன் சிம்மாசனத்தை அடைய ஒரு வழியைக் கூறகிறேன் கவனமாகக் கேள்" என்றாள் அவள்.
 
கைகேயியும் அவள் என்ன சொல்லப் போகிறாளென்பதைக் கேட்கலானாள். கூனியும் "நீ ஒரு முறை அமரர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போரின்போது தசரத மன்னருக்குத் தேரோட்டியது நினைவிருக்கிறதா? தசரதர் தேவர்களுக்கு உதவி புரியச் சென்றார். அது சமயம் தசரதர் நினைவிழந்து கிடந்தார் எதிரிகளின் கடுமையானத் தாக்குதல்களுக்காளாகாமலிருக்க நீ உடனேயே அவரைப் போர்க்களத்திலிருந்து தொலைவில் எடுத்துப்போய் மூர்ச்சையை போக்கி காயங்களுக்கு சிகிச்சை செய்தாய். அப்போது மன்னர் மனம் மகிழ்ந்து தன் உயிரைக் காப்பாற்றியதற்காக உனக்கு இரண்டு வரங்கள் கொடுத்தார். நீ அவற்றை அப்போது கேளாமல் பின்னால் எப்போதாவது கேட்டுக் கொள்வதாக கூறினாய். இப்போது அவற்றைக் கேள். ஒரு வரத்தால் இராமனைப் பதினான்கு வருடகாலம் காட்டிற்கு அனுப்பிவிடு. மற்றதால் உன் மைந்தன் பரதனுக்குப் பட்டாபிஷேகம் நடக்க வழி செய்" எனக் கூறினாள்.
 
கைகேயி என்னவோ மிகவும் நல்ல குணம் படைத்தவள்தான். ஆனால் அடிமேல் அடி வைக்க அம்மியும் நகரத்தானே செய்யும்? அதுபோல கூனியின் துர்போதனையால் அவளது தூய உள்ளமும் மாசுற்றது. அவள் "பேஷ் பேஷ் மந்தரை, நீ மிகமிகப் புத்திசாலி. எவ்வளவு முன் யோசனை கொண்டு இதையெல்லாம் செய்கிறாய்!
 
உண்மையிலேயே நீ எனக்கு சிறந்த முறையில் சேவை செய்திருக்கிறாய். உனக்கு என்றென்றும் கடன் பட்டிருக்கிறேன்" எனக் கூறினாள்.
 
பின்னர் அவள் கூறியதுபோல கைகேயி தன் நகைகளையெல்லாம் கழற்றி விட்டு அழுக்கான கிழிந்த புடவையைக் கட்டிக் கொண்டு கோபக்கிருகத்திற்குள் போய் வெறும் தரைமீது படுத்துக் கொண்டாள்.
 
கூனியும் "பேஷ். உன் கோபத்தையும் உன் வருத்தத்தையும் கண்டு மன்னன் மனம் தாளமாட்டான். அவன் உனக்காக தன் உயிரை வேண்டுமானாலும் தியாகம் செய்துவிடுவான். நீ எப்படியாவது நான் கூறியபடி இரு வரங்களைப் பெற்றுவிடு. சமயத்தில் மனம் இளகி மன்னனின் பசப்பு வார்த்தைகளைக் கேட்டு ஏமாந்து விடாதே" என எச்சரித்துவிட்டுப் போனாள்.
 
தசரதன், பட்டாபிஷேகத்திற்குச் செய்ய வேண்டியவற்றிற்கெல்லாம் தக்க ஏற்பாடுகளைச் செய்து விட்டு அந்த நற்செய்தியை தானே கைகேயிக்குச் சொல்ல வேண்டுமென நினைத்து அவளது அறைக்குச் சென்றான். அங்கு கைகேயி இல்லாது போகவே பணியாளிடம் அவள் இருக்குமிடத்தைக் கேட்டான். அவளும் ராணி கோபக்கிரகத்தில் இருப்பதாகக் கூறினாள்.
 
தசரதன் மனம் கலங்கியவனாக அங்கு சென்றான். கைகேயி அலங்கோல நிலையில் தரைமீது படுத்திருப்பதைக் கண்டான். ஆபரணங்கள் அங்கங்கே விழுந்து கிடந்தன. தசரதன் கைகேயியை அணுகினான். மெதுவாக "கைகேயி, உனக்கு என்ன கோபம்? யாராவது உன்னைக் கோபித்துக் கொண்டார்களா? ஏன் இப்படி இருக்கிறாய்? உனக்கு ஒரு வேளை உடம்புதான் சரியாக இல்லையோ?" என்று கேட்டான்.
 
கைகேயியோ "என்னை யாரும் கோபித்துக் கொள்ளவில்லை. நான் என் நிலையை நினைத்து நொந்து கொண்டிருக்கிறேன். என் மனத்தில் ஒரு கோரிக்கை உள்ளது. அதை நீங்கள் இப்போதே நிறைவேற்றி வைப்பதாக உறுதிமொழி கொடுத்தால் தான் என் மனம் நிம்மதி அடையும்" என்றாள்.
 
அதுகேட்டு தசரதன் சிரித்தவாறே "பூ இவ்வளவுதானா! இதற்கா இப்படி இருக்கிறாய். நீ காலால் இடும் வேலையைத் தலையால் செய்யத்தான் நான் காத்துக் கொண்டுஇருக்கிறேனே. உம் என்ன செய்ய வேண்டும்? சொல், உடனே நிறைவேற்றுகிறேன்" என்றான்.
 
அப்போது கைகேயி தான் மன்னனிடம் முன்பு ஒருமுறை இரு வரங்கள் பெற்றதை நினைவூட்டினாள். அப்போது வேண்டாம்என்று கூறி வேறு சமயத்தில் அவற்றைக் கேட்பதாகச் சொன்னதையும் சொல்லவே தசரதனும் "ஆமாம். நன்றாக நினைவிலிருக்கிறது. அதை மறந்து விடுவேனா? என் உயிரையே தக்க சமயத்தில் காத்தாயல்லவா நீ? வரங்களை தாராளமாகக் கேள். உனக்கு இல்லையென்று என்னால் கூற முடியுமா?" எனக் கூறினான்.
 
கைகேயியும் "சரி. ஒரு வரத்தால் இராமன் மர உரி தரித்து பதினான்கு வருடங்கள் காட்டில் போய் வசிக்க வேண்டும். இரண்டாவது வரத்தால் என் மகன் பரதன் இந்த நாட்டை ஆள வேண்டும்" என்றாள்.
 
அதைக் கேட்ட தசரதன் பாம்பைமிதித்தவன் போல திடுக்கிட்டான். அப்படியே மூர்ச்சையாகி அடியற்ற மரம்போல விழுந்து விட்டான். சற்று நேரத்திற்கெல்லாம் மயக்கம் தெளிந்து கைகேயியின் ஈன மனப்பான்மையைக் குறித்து வையலானான்.
 
 "நீயும் அரசவம்சத்தில் தோன்றியவளா? இப்படிப்பட்ட விஷம் கக்கும் பாம்பா? பால்முகம் வடியும் பாலகன் ராமன் உன்னை தன் தாயாகவல்லவா கருதி வந்திருக்கிறான். அவனுக்கா இப்படிப்பட்ட துரோகம் இழைக்கிறாய்? இந்த மாதிரி வரங்களைக் கேட்டு எனக்கல்லவா நீ கொடிய தண்டனையை அளிக்கிறாய். ராமனைவிட்டுப் பிரிந்திருக்க என்னால் முடியுமா? இராமன் போனால் என் உயிரும் போய்விடும். வேண்டாம் இராமனைக் காட்டிற்கு அனுப்பாதே. நாட்டை வேண்டுமானாலும் பரதன் ஆளட்டும். அது பற்றிக் கவலைப் படவில்லை. ஆனால் இராமனை ஏன் காட்டிற்கு அனுப்ப வேண்டும்? வேண்டாம் அந்த எண்ணத்தை மட்டும் விட்டு விடு. உன்னை நான் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்" என்றான். 
தசரதனின் இந்தச் செய்கை கைகேயியின் அடத்தை மேலும் அதிகமாக்கியது. அவளோ "அதெல்லாம் முடியாது. எனக்குக் கொடுப்பதாகச் சொன்ன வரங்களை இப்போது நான் கேட்டபடி கொடுத்தாலாயிற்று. இல்லாவிட்டால் எனக்கு உங்கள் வரமும் வேண்டாம். வேறெதுவும் வேண்டாம்" என்றாள் கடுகடுப்புடன்.
 
அப்போது தசரதனின் மனம் பட்ட வேதனையை என்னென்பது? இராமனிடம் "நீ காட்டிற்குப் போ" என்று எப்படிக் கூறுவது? எப்படிப்பட்ட இக்கட்டான நிலை? வரங்களைக் கொடுத்தேயாக வேண்டும். இல்லைஎன்றால் சொன்ன சொல்லைக் காக்க முடியாதவனென்ற அபகீர்த்தி ஏற்பட்டு விடும். ஆனால் இராமனின் பட்டாபிஷேகம் நின்று காட்டிற்கு அவன் போனாலோ தசரதனின் உடலில் உயிர் இருக்காது. தசரதன் அதை நினைக்க நினைக்க அவனது தலையே சுற்றலாயிற்று. நினைவிழந்து விழுந்து விட்டான்.
 
இரவு மெதுவாகத் தவழ்ந்து பகலின் வாசலை அடைந்து விட்டது. வசிஷ்டர் அதிகாலையில் எழுந்து தசரதனின் அறையை அடைந்து அங்கிருந்த சுமந்திரனிடம் தான் வந்திருப்பதாக மன்னனிடம் கூறும்படிச் சொன்னார். சுமந்திரனும் தசரதன் படுத்திருந்த கைகேயியின் கோபக்கிரகத்தை அடைந்தான். அங்கு தசரதன் படுத்திருப்பதைக் கண்டு மெதுவாக எழுப்ப முயன்றான்.
 
 தசரதன் கண்ணீர் தோய்ந்த கண்களோடு சுமந்திரனைப் பார்த்தான். சுமந்திரனோ மன்னன் மனத்தை மாபெரும் துக்கம் வருத்துகிறதெனத் தெரிந்து கொண்டான். மௌனமாக அவன் திரும்பும்போது கைகேயி "சுமந்திரா, நீ போய் உடனே இராமனை இங்கே அனுப்பு. இது மன்னனின் கட்டளை" என்றாள்.
 
 சுமந்திரனுக்கு அவளது வார்த்தைகள் ஏனோ நாராசம்போல இருந்தன. ஏதோ அனர்த்தம் விளையப் போகிறதென்று அவன் ஊகித்து கொண்டான்.
நகரமோ பட்டாபிஷேக வைபவத்தில் மூழ்கிக் கிடந்தது. யாவரும் தசரதனின் வருகையையே ஆவலுடன் எதிர்பார்த்தனர். சுமந்திரனைக் கண்டதுமே யாவரும் அவனைச் சூழ்ந்துகொண்டு "மன்னர் எங்கே? முகூர்த்த காலம் சமீபிக்கப் போகிறதே" என்று கேட்டனர்.
 
சுமந்திரனும் "இப்போது மன்னர்இருக்கும் இடத்திலிருந்துதான் வருகிறேன். அவர் இராமனை அழைத்துவரச் சொல்லி இருக்கிறார்" என்று கூறிவிட்டு மீண்டும் ஒருமுறை தசரதன் இருந்த இடத்திற்குப் போய் மௌனமாகப் பார்த்தவாறே அவன் முன் வணங்கி நின்றான்.
 
அப்போது தசரதன் "ஏன், இராமனை கூட்டிக் கொண்டு வரவில்லையா? கைகேயி கூறியது நான் உனக்குக் கட்டளையிட்டது போலத்தானே. உம் போ உடனே அவனை இங்கே அழைத்துவா" என்றான்.
 
சுமந்திரனுக்கு எல்லாம் புதிராகவே இருந்தது. ஆயினும் அரசனின் கட்டளை. அதை மீற முடியுமா? இராமனிருக்கும் மாளிகைக்குச் சென்றான். வழியிலே மக்களின் குதூகலத்தையே அவன் கண்டான். எங்கும் தோரணங்கள்! அலங்காரங்கள், புத்தாடைகள் மற்றும் பட்டாடைகள் என ஜொலித்தன. நகரத்தில் வீரர்கள் அணிவகுத்துச் சென்றனர். பிரபுக்கள் தமது அந்தஸ்திற்கேற்ப பட்டாபிஷேகத்தைக் காண வந்து கொண்டு இருந்தனர்.
 
இதையெல்லாம் பார்த்தவாறே சுமந்திரன் இராமனிருக்கும் இடத்தை அடைந்தான். இராமனும் பட்டாபிஷேகத்திற்காக தன்னை நன்கு அலங்கரித்துக் கொண்டு அமர்ந்துஇருந்தான். சீதையும் அவனருகே நின்று சைத்ரோபசாரங்கள் புரிந்து கொண்டிருந்தாள். சுமந்திரன் அவர்களைக் கண்டு வணங்கி "மன்னர் கைகேயி மகாராணியின் அந்தப்புரத்தில் இருக்கிறார். தங்களை உடனே அழைத்து வரும்படிக் கூறினார்" என்றான்.
 
இது கேட்டு இராமன் மகிழ்ச்சிஅடைந்தான். அவன் சீதையை உள்ளே போகச் சொல்லிவிட்டு அதே அலங்காரங்களுடன் சுமந்திரனைப் பின் தொடர்ந்து சென்றான். இராமன் செல்லுமிடத்திற்கெல்லாம் இலட்சுமணனும் செல்வானென்பதைச் சொல்லவும் வேண்டுமா? இராமர் இரதத்தில் ஏறியதும் இலட்சுமணனும் பின்தொடர்ந்து சென்றான். இரதம் அங்கிருந்து கைகேயி இருக்குமிடத்திற்குக் கிளம்பச் சென்றது. இராமனைக் கண்டதுமே மக்கள் ஆரவாரம் செய்தனர். "அதோ இராமன்! இன்னும் சிறிது நேரத்தில் பட்டாபிஷேகம் நடக்கப் போகிறது. நாம் கண் குளிரப் பார்க்கப் போகிறோம்" எனக் கூறினர். இராமனின் இரதமும் தசரதனிருந்த மாளிகையை அணுகியது.
 
 இரதத்தை நிறுத்திவிட்டு இராமன் கீழே இறங்கி நடந்து உள்ளே சென்றான். தசரதனும் கைகேயியும் ஒரு ஆசனத்தில் அமர்ந்திருந்தனர். இராமன் தன் தந்தையையும் மாற்றந்தாயான கைகேயியையும் நமஸ்கரித்தான். "இராமா" என்று கூறிய தசரதன் மேற்கொண்டு ஒன்றும் சொல்ல முடியாது கண்ணீர் பெருக்கிக் கொண்டு தொண்டை அடைத்துப் போக பேசாமல் மௌனமாக இருந்தான்.                                      
 
 
 

0 comments:

Post a Comment

Flag Counter