பால காண்டம் - 1

வால்மீகி முனிவரின் ஆசிரமம் தமசா நதிக்கரையில் அமைந்து இருந்தது. ஒருநாள் நாரதர் அங்கு வந்தார். அவருக்கு உபசாரங்கள் செய்து வரவேற்ற பிறகு, வால்மீகி முனிவர் அவரை நோக்கி, "நாரதரே, இந்த யுகத்தில் முப்பத்திரண்டு கல்யாண குணங்களும் பொருந்திய நேர்மையான், சத்தியம் தவறாத, வீர தீர பராக்கிரமசாலியான புருஷன் யாராவது இருக்கிறானா?" என்று கேட்டார்.

அதற்கு நாரதர் ராமபிரானுடைய வரலாற்றை முழுவதுமாக வால்மீகிக்கு எடுத்துரைத்தார். நாரதர் இறுதியில் விடைபெற்று சென்றபின், வால்மீகி தனது சீடர் பரத்வாஜருடன் தமசா நதிக்கரைக்குச் சென்றார்.

நதிக்கரையில் உல்லாசமாக அமர்ந்திருந்த ஒரு ஜோடி நாரைகளைப் பார்த்தார். அவற்றின் அந்தரங்க அன்புப் பிணைப்பினைக் கண்டு ரசித்தவாறே அவர் நீராடுகையில், எங்கிருந்தோ வந்த ஓர் அம்பு ஆண் நாரையின் மீது பாய்ந்து அதன் உயிரைக் குடித்தது. அதைக் கண்ட பெண் நாரை துக்கம் தாளாமல் ஓலமிட்டது. இதைக் கண்டு மனம் பதறிய வால்மீகி, அம்பை எய்த வேடனை மிகுந்த சீற்றத்துடன் நோக்கி, "இதயமற்ற அரக்கனே! என்ன காரியம் செய்து விட்டாய் நீ? வாழ்நாள் முழுதும் நீ அமைதியின்றி தவிப்பாய்!" என்று உணர்ச்சி வசப்பட, அவருடைய வாயிலிருந்து வந்த சொற்கள் அவரையறியாமலே ஒருகவிதை வடிவில் வெளிவந்தன. ஆசிரமத்திற்குத் திரும்பி வந்த பிறகும் அவருடையபடபடப்பு அடங்கவில்லை. 


சற்று நேரத்தில், பிரம்மா வால்மீகியைக் காணவந்தார். பிரம்மாவை விழுந்து வணங்கி வால்மீகி வினயத்துடன் நின்ற போது, பிரம்மா, "வால்மீகி, என்னுடைய அருளினால் உனக்கு கவிதை பாடும் திறமை உண்டாகி விட்டது. ராமபிரானது வரலாற்றை இதற்கு முன் நீ கேட்டு இருக்கிறாய். அதை நீ காவியமாக இயற்று. இந்த உலகம் இருக்கும் வரை அவை காவியமாக நிலைத்திருக்கும்!" என்று வாழ்த்தி விட்டுச் சென்றார். பிரம்மாவின் அருளினால் வால்மீகி ராமாயணத்தை இயற்றினார். அதைப் படித்து மகிழாதவர் யாரும் இருக்க மாட்டார்கள்.

சூரியனுடைய மைந்தன் பெயர் வைவஸ்வதன். இக்ஷ்வாகு வைவஸ்வதனின் மைந்தன். சூரியன் மூலமாகத் தோன்றிய வைவஸ்வதனும் அவனுடைய வாரிசுகளும் சூரிய வமிசத்தைச் சேர்ந்தவர்களாகப் போற்றப்பட்டனர். அவ்வாறு சூரிய வமிசத்தில் தோன்றியவர்களில் சாகரனும் ஒருவன். தேவலோகத்தில் இருந்து பூமிக்கு கங்கையை வரவழித்த பகீரதன் சாகரனுடைய மைந்தன் ஆவான். சூரியவமிசத்து மன்னர்கள் அனைவரும் அயோத்தியை தலைநகராகக் கொண்ட கோசல ராஜ்யத்தை ஆண்டு வந்தனர்.

அவ்வாறு அயோத்தியை ஆண்ட சூரியவமிச மன்னர்களில் தசரதர் மிகவும் புகழ் பெற்றவர். அவருடைய சபையில் திருஷ்டி, ஜயந்தர். ஜீயர், சித்தார்த்தர், அர்த்தசாதகர், அசோகர், மந்திரபாலர், சுமந்திரர் ஆகிய புகழ் பெற்ற எட்டு மந்திரிகள் இருந்தனர். வசிஷ்டர் தசரதரின் குலகுருவாக இருந்தார். அவருடன்கூட, வாம தேவரும் புரோகிதர்களாகவும் பணியாற்றி வந்தனர். தனது திறமையான மந்திரிகளின் துணை கொண்டும், படை பலத்தைக் கொண்டும், தசரதர் மிகச் சிறப்பாக ஆட்சி நடத்தி வந்தார்.

தசரதர் வாழ்க்கையில் ஒரேயொரு தீராத குறை இருந்து வந்தது. அவருக்கு நீண்டகாலமாக மகப்பேறு உண்டாகவில்லை. அதை நினைத்து, தசரதர் மனத்திற்குள் மிகவும் வருத்தப் பட்டுக் கொண்டிருந்தார். அசுவமேத யாகம் ஒன்று செய்தால், தனக்கு மக்கட் பேறு உண்டாகும் என நம்பினான் .


    முதல் அவர் பெண்களையே பார்க்காதவர். அழகானப் பெண்களைக் கண்டால், ஒருக்கால் மயங்கிப்போய் நம்முடன் வரலாம். ஆகவே நாம் சில அழகான நாட்டிய மங்கைகளை அழைத்துச் செல்ல வேண்டும். அவர்கள் தங்களுடைய சாகசத்தினால் அவரை மயக்கி தன் கூட அழைத்து வர இயலும். முயன்று பார்ப்போமா?"என்றார். ரோமபாதரும் அதற்கு சம்மதித்தார்.

அதன்படி சில நடன மாதர்கள் தங்களை வெகு அழகாக அலங்கரித்துக் கொண்டு. ரிஸ்யசிருங்கர் வசிக்கும் ஆசிரமத்திற்குச் சென்றனர். அந்த அழகிய பெண்கள் பாடிக் கொண்டும், ஆடிக்கொண்டும் ஆசிரமத்தை அடைந்தனர். தன் வாழ்வில் பெண்களையே பார்த்தறியாத ரிஸ்யசிருங்கர் முதன் முதலாக அழகிய பெண்களைக் கண்டதும், ஆச்சரியத்தில் மூழ்கினார்.

அவர்கள் அவரை நோக்கி, "முனி குமாரரே! தாங்கள் யார்? தாங்கள் ஏன் இந்த வனத்திலே தனியாக வசிக்கிறீர்கள்? "என்று கேட்க, அவர் "நான் ரிஸ்யசிருங்கர். விபாண்டக முனிவரின் புதல்வன்," என்று பதிலளித்து அவர்களுக்கு பழங்கள் தந்து உபசரித்தார். "நாங்கள் தரும் பழங்களை தாங்கள் முதலில் உண்ணுங்கள்!" என்று சொல்லி விட்டு தாங்கள் கொண்டு வந்திருந்த அறுசுவை உணவுப் பண்டங்களை அவருக்கு அளித்தனர். பிறகு காட்டில் தாங்கள் இருக்கும் இடத்தைக் கூறி விட்டு விடைபெற்றனர்.

பழங்களைத் தவிர வேறு எதையும் உண்டு அறியாத ரிஸ்யசிருங்கருக்கு அந்த அறுசுவை உணவுப் பண்டங்கள் அமுதம் போல் சுவையாக இருந்தன. மறுநாள் அவர்கள் வராததால் ரிஸ்யசிருங்கர் தானே அவர்களைத் தேடிச் சென்று விட்டார். அவருடைய மனப்போக்கை அறிந்து கொண்ட பெண்கள் அவரை தங்களுடன் வருமாறு அழைக்க, உடனே அவரும் உற்சாகத்துடன் அவர்களுடன் கிளம்பி விட்டார். அந்த மங்கையர்கள் அவரைத் தன்னுடன் அங்கதேசம் அழைத்துச் சென்றனர்.

அங்கதேசத்தில் ரிஸ்யசிருங்கர் காலடி எடுத்து வைத்தவுடனேயே, மழை பிரவாகமாகக் கொட்டியது. ரோமபாதர் அவரை சகல மரியாதைகளுடன் வரவேற்று, தன் அரண்
மனையில் விருந்தினராகத் தங்க வைத்து இறுதியில் தன் மகள் சாந்தாவையும் அவருக்குத் திருமணம் செய்து வைத்தார். பிறகு ரிஸ்யசிருங்கர் அங்கதேசத்திலேயே இருக்கலானார்.

மேற்கூறிய வரலாற்றைக் கேட்ட தசரதர் சற்றும் தாமதிக்காமல் உடனே தன் மந்திரி பிரதானிகள், குடும்பத்தினருடன் அங்கதேசம் சென்று, ரிஸ்யசிருங்கரையும் சாந்தாவையும் ரோமபாதரின் அனுமதியுடன் அயோத்திக்கு அழைத்து வந்தார். பிறகு ரிஸ்யசிருங்கரிடம் அசுவமேத யாகத்தை நடத்திக் கொடுக்குமாறு வேண்டிக் கொண்டார்.

அதற்கு சம்மதித்த ரிஸ்யசிருங்கர் யாகத்திற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினார். வேதபாராயணம் செய்யும் பண்டிதர்களான சுயக்ஞர், வாமதேவர், ஜாபாலி, காச்யபர் ஆகியோர் வரவழைக்கப்பட்டனர். சரயூ நதியின் வட கரையில் யாக சாலை நிறுவப்பட்டது. நல்லதொரு சுபதினத்தில் யாகம் தொடங்கியது. யாகத்தின் முதல் அவிர் பாகம் இந்திரனுக்கு அளிக்கப்பட்டது. யாகம் முடிந்தபிறகு அதில் பங்கேற்ற பண்டிதர்களுக்கு ஏராளமான நிலங்களும், பொன்னும் பொருளும் வழங்கப்பட்டன. அவற்றை எல்லாம் ரிஸ்யசிருங்கருக்கே அளித்து விட்டு, அவர்கள் சென்று விட்டனர். கடைசியில் வந்த ஓர் ஏழை அந்தணருக்குக் கொடுக்க பொன் இல்லாமல் போன சமயம், தசரதர் தன் கைகளிலிருந்த கங்கணங்களைக் கழற்றி அவருக்கு தானமாகத் தந்து விட்டார். தசரதருடைய தயாள குணத்தை அனைவரும் போற்றிப் புகழ்ந்தனர்.

அசுவமேதயாகம் முடிந்த பிறகு, ரிஸ்யசிருங்கர் தசரதரிடம் புத்திர காமேஷ்டி யாகம் ஒன்று செய்யுமாறு அறிவுரை தந்தார். அதே சமயம் தேவ லோகத்திலிருந்த தேவர்கள் ஒன்று கூடி பிரம்மாவிடம் சென்று, அரக்கன் ராவணனைப் பற்றி முறையிட்டு, அவனால் தங்களுக்கு ஏற்படும் இன்னல்களை விளக்கிக் கூறினர்.

அதற்கு பிரம்மா, "ராவணன் கடவுள், தேவர்கள், யட்சர்கள், கின்னர்கள் ஆகியோர் மூலம் தனக்கு சாவு வரக்கூடாது என்ற வரத்தைப் பெற்றுள்ளான். ஆனால் மனிதர்களைப் பற்றிக் குறிப்பிடவில்லை.

 
 ஏனெனில் அற்பமான மனிதர்களால் தன்னை எதுவும் செய்ய  முடியாது என்ற  ஆணவமே காரணம். ஆகையால் ராவணனைக் கொல்வதற்காக விஷ்ணு மனிதனாக அவதாரம் எடுக்கப் போகிறார். தசரதச் சக்கரவர்த்தியின் மைந்தனாக அவர் அவதரிக்கப் போகிறார்," என்று அறிவித்தார்.

அதன்படியே, புத்திர் காமேஷ்டி யாகத்தின் ஹோம குண்டத்திலிருந்து கண்ணைப் பறிக்கக் கூடிய பிரகாசத்துடன் ஒரு உருவம் வெளியே வந்தது. அதன் கைகளில் ஒரு தங்கக் கலசம் வெள்ளி மூடியுடன் இருந்தது.

அந்த உருவம் கலசத்தை தசரதரிடம் கொடுத்து விட்டு, "சக்கரவர்த்தி! பிரஜாபதியின் ஆணையின்படி இந்தப் பாத்திரத்தில் பாயசம் எடுத்து வந்து உள்ளேன். இதைத் தங்கள் மனைவி மார்களுக்குக் கொடுத்து, அவர்களை அருந்தச் செய்யுங்கள். அவர்களுக்கு சந்தான பாக்கியம் கிட்டும்!" என்று சொல்லி மறைந்தது.

மிகுந்த மகிழ்ச்சியுடன் அதைப் பெற்றுக் கொண்ட தசரதர், அதில் பாதியளவு பாயசத்தை தன் முதல் மனைவி கெளசல்யாவிற்கு அளித்தார். மீதியிருந்ததில் சிறிது இரண்டாவது மனைவி சுமித்ராவிற்குத் தந்து, சிறிது மூன்றாவது மனைவி கைகேயிக்கும் தந்த பிறகு, எஞ்சியிருந்ததை மீண்டும் சுமித்ராவிற்கே தந்தார். மகாவிஷ்ணு தசரதரின் மகனாக கெளசல்யாவின் வயிற்றில் உதிக்கத் தன்னை ஆயத்தம் செய்து கொண்டிருந்த அதே நேரத்தில் தேவர்கள் வானரங்களை சிருஷ்டி செய்வதில் முனைந்தனர்.

தேவேந்திரன் வாலியையும், சூரியன் சுக்ரீவனையும், குபேரன் கந்தமாதனையும், அசுவினி தேவர்கள் மைந்தன் திவிதனையும், விஷ்வகர்மா நளனையும், அக்னி நீலனையும், வருணன்சுஷேணனையும், பர்ஜன்யன் சரதனையும், வாயு அனுமானையும் உருவாக்கினர். மற்ற தேவர்கள் ஆயிரக்கணக்கான மற்ற வானரங்களை உருவாக்கினர். வானரங்கள் அனைவரும் ரிஷ்யமுக மலையடிவாரத்தில் குடியேறினர். வாலியும், சுக்ரீவனும் வானரங்களுக்கு தலைவர்களாகவும், நளன், நீலன், அனுமான் ஆகியோர் மந்திரிகளாகவும் பொறுப்பேற்றனர்.

பாயாசம் அருந்திய தசரதரின் மனைவிகள் அனைவரும் கர்ப்பமுற்று, புனர்பூச நட்சத்திரத்தன்று கெளசல்யா ராமபிரானைப் பெற்று எடுத்தாள். கைகேயி பரதனைப் பெற்றெடுக்க, சுமித்ரா லட்சுமணனையும், சத்ருகனையும் பெற்றெடுத்தாள். இளவரசர்கள் பிறந்ததையொட்டி, அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டது. மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த தசரதர், வந்தவர்களுக்கெல்லாம் தாராளமாக தானம் வழங்கினார்.

நான்கு அரச குமாரர்களும் சீரும் சிறப்புமாக வளர்ந்தனர். ராமரும், லட்சுமணரும் எப்போதும் சேர்ந்து இணைபிரியாமல் பழகி வந்தது போல், பரதனும், சத்துருகணனும் சேர்ந்து பழகினர். நால்வரும் வேத சாஸ்திரங்கள் அனைத்தும் பயின்று, வாட்போர், வில்வித்தை ஆகிய அனைத்துப் போர்க்கலைகளிலும் தேர்ச்சி பெற்றனர்.

ஒருநாள் வாயிற்காப்போன் தசரதரிடம், "சக்கரவர்த்தி! மகா முனிவரான விசுவாமித்திரர் தங்களைக் காண வந்துள்ளார்!" என்று அறிவித்தான். உடனே விரைந்து சென்ற தசரதர் விசுவாமித்திரரை ராஜ உபசாரம் செய்து வரவேற்றார்.

விசுவாமித்திரர், "தசரதா! நீ நலமாக இருக்கிறாயா? உன் நாடு சுபிட்சமாக இருக்கிறதா?" என்று விசாரித்து விட்டு, வசிஷ்டர் ஆகியோரிடம் உரையாடி விட்டு, சபையில் வந்து அமர்ந்தார். பிறகு தசரதர் அவரிடம் மரியாதையுடன், "மகாமுனிவரே! தங்களுக்கு நான் என்ன சேவை செய்ய வேண்டும் என்று கட்டளையிடுங்கள்!" என்றார். அதற்கு முனிவர், "முக்கியமான யாகத்தை இரு அரக்கர்கள் இடைவிடாமல் தொந்தரவு கொடுத்து நடக்க விடாமல் செய்கிறார்கள். அவர்களை ஒழித்துக் கட்ட வேண்டும். அதற்கு உன்னுடைய புதல்வனான ராமனை என்னுடன் அனுப்பி வை! மாரீசன், சுபாஹு என்ற அந்த இரண்டு அரக்கர்களையும் ராமன் வதம் செய்யட்டும்!" என்றார்.

அதைக் கேட்டதுமே, தசரதரின் இதயம் தூள் தூளாக உடைந்தது. உடலெல்லாம் பதறித்துடிக்க அவர் முனிவரை அணுகி, "மகா முனிவரே!            என் புதல்வன் ராமன் பச்சிளம் பாலகன்.  அவனுக்கு பதினாறு வயது கூட நிரம்பவில்லை. அவனால் எப்படி அரக்கர்களை வதம் செய்ய முடியும்? ராமனுக்குப் பதிலாக, என்னுடைய சேனையுடன் நானே சேனையுடன் நானே  வந்து அந்த அரக்கர்களை ஒழித்துக் கட்டுகிறேன்" என்று கெஞ்சினான்.


 அதற்கு முனிவர், "தசரதா? ராவணன் என்ற அரக்கனைத் தெரியுமா உனக்கு? பிரம்மாவிடம் இருந்து பல வரங்களைப் பெற்றவன். அந்த ராவணன் விச்ரவஸ் என்ற ரிஷியின் புத்திரன். குபேரனுடைய இளைய சகோதரன் அவனுடைய அணியைச் சேர்ந்தவர்கள்தான் மாரீசனும், சுபாஹூவும்! தனக்குப் பதிலாக இந்த சாதாரண அரக்கர்களை அனுப்பி வைத்து என் யாகத்திற்கு இடையூறு விளைவிக்கிறான்!" என்றார். "ஐயோ! ராவணனா?" என்று பயத்தில் கூக்குரலிட்ட தசரதர், "அந்த ராவணனை எதிர்த்து என்னாலேயே சண்டை செய்ய முடியாதே! ராமனால் மட்டும் எப்படி முடியம்? என்றான் தசரதன்.

உடனே கோபாவேசத்துடன் விசுவாமித்திரர் எழுந்து நின்றார்."சூரியவமிசத்தில் பிறந்த நீ இப்படித் தான் கொடுத்த வாக்கை மீறுவதா?"என்று கேட்டார்.

உடனே குறுக்கிட்ட வசிஷ்டர் தசரதரிடம், "சக்கரவர்த்தி! நீங்கள் பயப்பட தேவையில்லை. விசுவாமித்திரர் பிறப்பால் க்ஷத்திரியர். வில்வித்தையில் அவருக்கு நிகரில்லை. அவரிடம் மகாமுனிவருக்குள்ள அபரிமிதமான சக்திகள் உள்ளன. அவருடன் ராமனை அனுப்புவதால், ராமனுக்கு நன்மை உண்டாகுமே தவிர நீங்கள் நினைப்பது போல் தீங்கு எதுவும் நேராது. முயன்றால் அவரால் இந்த அரக்கர்களை வதம் செய்ய முடியும். ஆனால் ராமன் மூலம் அவற்றை செய்வித்து, ராமனுக்குப் பயிற்சியும், புகழும் உண்டாக அவர் முயற்சிக்கிறார். பயப்படாமல் அனுப்பி வையுங்கள்" என்றார்.

வசிஷ்டரின் சொற்களால் சமாதானம் அடைந்த தசரதர் தனது மனத்தைத் தேற்றிக் கொண்டு, ராமனை மட்டும் அனுப்பாமல் அவனுக்குத் துணையாக லட்சுமணனையும் முனிவருடன் அனுப்பி வைத்தார். தந்தையின் சொற்படி, ராமனும் லட்சுமணனும் விசுவாமித் திருடன் புறப்பட்டுச் சென்றனர்.

0 comments:

Post a Comment

Flag Counter