ஒரு பெரிய மரத்தின் உச்சியில், தேன் கூடு ஒன்று அமைந்திருந்தது. தேனீக்களின் தலைவியாகிய ராணி தேனீக்கு, கடவுளைச் சந்திக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அது கடவுளை நினைத்து தவம் செய்தது.
“ராணித் தேனீயே... உனக்கு என்ன வரம் வேண்டும்?'' என்று கேட்டார் கடவுள்.
கடவுளே தன் முன் பிரசன்னமாகியிருக்கும் போது, உயர்ந்த நோக்கத்துடன் கூடிய ஒரு வரத்தைக் கேட்கும் நல்ல புத்தி ராணித் தேனீக்கு ஏற்படவில்லை.
“இறைவனே! என்னிடமிருக்கும் தேனை நாடி வருபவர்களைக் கொட்டி, அவர்கள் சகிக்க முடியாத வேதனையை அனுபவிக்குமாறு செய்தருள வேண்டும்,'' என்று ராணித் தேனீ கேட்டுக் கொண்டது. அதைக் கேட்டு கடவுள் மிகவும் வருத்தம் கொண்டார்.
“ராணித் தேனீயே! பிறருக்கு உதவி செய்யக்கூடிய நல்ல வாய்ப்பை, வசதியை நீ கேட்டிருந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பேன். நீயோ பிறருக்குத் தொல்லை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே வரம் கேட்கிறாய்! நீ கேட்ட வரத்தை கொடுக்காமலிருக்க முடியாது. வரம் கொடுக்கும் அதே சமயம், உனக்கு ஒரு பாடமும் போதிக்க விரும்புகிறேன்.
“என்னுடைய வரத்தின் மூலம் உனக்கு கொடுக்கு ஒன்று ஏற்படும். அந்தக் கொடுக்கால் மற்றவர்களைக் கொட்டி வேதனைக்குள்ளாக்கும்போது, உனது கொடுக்கின் நுனி, உன்னால் கொட்டப்படுபவர்களின் உடலில் தொற்றிக் கொள்ளும். உடனே நீ உயிரிழந்து விடுவாய்.'' இவ்வாறு கூறிவிட்டு மறைந்தார் கடவுள்.
அன்று முதல் அந்த தேனீ யாரையும் அந்தக் கொடுக்கால் கொதவில்லை. தேனீ தான் செய்த தவறை எண்ணி வருந்தியது. காரணம் அந்த தேனீ யாரையாவது கொத்தினால் அது இறந்துவிடும்.
நீதி : வன்முறையில் விருப்பம் கொண்டவர்கள், தாங்கள் கையாளும் வன்முறையாலேயே அழிந்து விடுவர். மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று நினைத்துச் செயல்படுபவர்களுக்கு நன்மையே வந்து சேரும்.
0 comments:
Post a Comment