குட்டு வெளிப்பட்டது



மறுநாள் சக்கரவர்த்தி அக்பர் பொது மக்களைத் தன் சபையில் நேரடியாக சந்தித்துக் குறைகளை விசாரிப்பார் என்ற செதி கேட்டு அந்தக் கிழவி பரபரப்படைந்தாள். சமூகத்தில் மிக செல்வாக்குடைய குல்ஷா என்ற பணக்கார பிரபுவின் முகத்திரையைக் கிழிக்க அவள் துடித்தாள். ஆனால், தான் அந்தப் பிரபுக்கெதிராக கூறப்போகும் புகாரை அக்பர் நம்புவாரா என்ற சந்தேகமும் ஏற்பட்டது. எதற்கும் அவரை சந்திப்பது என்ற முடிவுக்கு வந்தாள்.

மறுநாள் கிழவி தயங்காமல் தர்பாருக்கே சென்று விட்டாள். வாயிற்காவலர்கள் அவளைத் தடுத்தி நிறுத்தி என்ன வேண்டும் என்று வினவியபோது, தான் சக்கரவர்த்தியை நேரில் சந்திக்க விரும்புவதாக அவள் கூறினாள். உடனே, ஒரு காவலன் அவள் கையைப் பிடித்து அழைத்துச் சென்று தர்பாருக்குள் நுழைந்தான்.


சிம்மாசனத்தில் வீற்றிருந்த அக்பரைக் கண்டு தரையைத் தொட்டு சலாம்செய அவள் முயன்றபோது, அவளை கவனித்த அக்பர் அவளுடைய முதிர்ந்த வயதை மனத்தில்கொண்டு அவளை சிரமப்படாமல்இருக்க சைகை செய்தார்.


பிறகு, "அம்மா! உனக்கு என்ன வேண்டும்?" என்றார். அதற்கு அவள் அக்பரை நோக்கி, "பிரபு! நான் சுந்தரி பாய்! மிக ஏழையானவள்! என்றாள்.


அதற்கு அக்பர், "ஏழையாயினும், பணக்காரராயினும் என் முன் சமநீதி கிடைக்கும். உன் குறையென்ன சொல். தாயே!" என்றார்.


"பிரபு! ஓராண்டு முன் நான் பத்ரிநாத் யாத்திரை செல்ல விரும்பினேன். என்னிடமுள்ள பணத்தையெல்லாம் அதுவரை யாரிடமாவது பத்திரமாக விட்டுச் செல்ல வேண்டுமே என்று திட்டமிட்டு, என்னுடைய உடைமைகளைப் பொற்காசுகளாக மாற்றி ஒரு பையில் போட்டு, வாயை இறுகக் கயிற்றினால் கட்டி விட்டேன். பிறகு, கயிற்றின் முடிச்சின் மேல் மெழுகை உருக்கி ஊற்றினேன். புறாச்சின்னம் உள்ள என் மோதிரத்தை உருகிய மெழுகில் அழுத்தி, முடிச்சை சீல் செய்தேன். சீலில் என் மோதிரத்தின் புறாச்சின்னம் தெளிவாகக் காணப்பட்டது" என்று மூச்சு விடாமல் சொல்லிக் கொண்டே போனவளை அக்பர், "அம்மா! நீ மிகவும் முன்எச்சரிக்கையுடன் நடந்து கொண்டு இருக்கிறாயே! சபாஷ்!" என்று பாராட்டினார்.


"என்ன பயன், பிரபு? அந்தப் பையை மிக கௌரவமான மனிதர் என்று கருதப்படும் குல்ஷாவிடம் நேரில் சென்று கொடுத்து நான் பத்ரிநாத் சென்று வரும் வரை பத்திரமாகப் பாதுகாக்கும்படி வேண்டினேன். அந்தசமயம் கூட யாருமில்லை. என்உடைய பையை அவர் தன் கையினால் தொடக்கூட இல்லை. என்னை வீட்டின் பின்புறம் அழைத்துச் சென்றவர், அங்கு ஒரு குழியைத் தோண்டி, அதனுள் அந்தப் பையைப் போடும்படி சொன்னார். நானும் அப்படியே செய்ய, பிறகு அதை மண்ணைப் போட்டு மூடி விட்டார். பிறகு என்னிடம் பிரயாணம் முடிந்து வந்த பிறகு நானே குழியைத் தோண்டி எடுத்துக் கொள்ளலாம் என்றார்.

"மிக உத்தமமான மனிதர் என்று மனத்தில் அவளுக்கு மரியாதை செலுத்திவிட்டு, நேரில் அவருக்கு நன்றி கூறித் திரும்பினேன். பிறகு பத்ரிநாத் யாத்திரை முடிந்தபின், நான் அவரிடம் செல்ல அதே இடத்திற்கு அவர் என்னை அழைத்துச் செல்ல, நான் குழியைத் தோண்டி, புதைத்து வைத்திருந்த என் பையை எடுத்துக் கொண்டேன். குலுக்கினால் உள்ளே நாணயங்கள் குலுங்கும் ஒலிகேட்டு திருப்தி அடைந்து வீட்டுக்குத் திரும்பினேன். பையின் கயிற்றின் முடிச்சும், அதில் நான் வைத்திருந்த சீலும் அப்படியே இருந்தது.


"ஆனால், என்னவென்று சொல்வது! வீட்டுக்கு வந்து, பையைத் திறந்து பார்த்தால் உள்ளே தங்க நாணயங்களுக்கு பதிலாக செப்பு நாணயங்கள் இருந்தன. குல்ஷா போன்ற கௌரவமான மனிதர் இப்படி ஓர் ஏழைக்கிழவியை மோசம் செய்வார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை" என்று கண்ணீர் வடித்தாள்.


பையிலுள்ள கயிற்றின் முடிச்சை அவிழ்க்காமல் உள்ளிருக்கும் பொற்காசுகளை எப்படி வெளியே எடுத்து செப்புக்காசுகளை நிரப்ப முடிந்தது என்று அக்பருக்குப் புரியவில்லை. அதேசமயம் கிழவி பொய் சொல்கிறாளோ என்று சந்தேகமும் எழ, அக்பர் பதில் சொல்ல முடியாமல் குழம்பிப் போய் பீர்பலை நோக்க, பீர்பல் "பிரபு! இதை நான் தீர்த்து வைக்கிறேன்" என்றார்.


அக்பர் நிம்மதியுடன் ஒரு பெருமூச்சு விட்டார். அடுத்து பீர்பல், "பிரபு! பொற்காசுகள் இருந்ததாகக் கூறப்படும் அந்தப் பையினை நான் பார்க்க விரும்புகிறேன்!" என்று கூறி, அதைக் கிழவிஇடமிருந்து வாங்கிக் கொண்டார்.

அதை மேலுங் கீழுமாகப் புரட்டி உற்று கவனித்த பீர்பலின் புருவங்கள் நெரிந்தன. அதில் ஏதோ மர்மம் இருப்பதாகப் புரிந்தது. உடனே கிழவியை நோக்கி, "அம்மா! உன் பை என் இடமே இருக்கட்டும். நீ சொல்வது உண்மையானால் உன் பொற்காசுகள் உனக்குத் திரும்பக் கிடைக்கும்" என்றார்.


"அந்தக் கடவுள் சத்தியமாக நான் சொன்னது உண்மை!" என்று ஆணித்தரமாகக் கிழவி கூற, "அம்மா! நாளை மறுநாள் வா! அதற்குள் உண்மை புலனாகும்" என்றார் அக்பர். கிழவியும் சலாம் செதுவிட்டுச் சென்றாள்.


அதன்பிறகு தர்பார் கலைய, அனைவரும் எழுந்து செல்ல, பீர்பல் பையைக் கையில் ஏந்திக் கொண்டு தீவிரமாக யோசித்தவாறே சென்றார். பீர்பல் மீது பொறாமை கொண்ட சிலர் இந்த வழக்கைத் தீர்க்க முடியாமல் பீர்பல் தோல்வியடைவார் என்றும், அதன்பிறகு அவர் தலை நிமிர்ந்து நடக்க முடியாதென்றும் பீர்பலை கேலி செய்தவாறு சென்றனர். அவர்கள் தன்னை ஏளனம் செய்வதைப் பொருட்படுத்தாமல் பீர்பல் வீட்டுக்குச் சென்றார்.


கிழவி கூறியது உண்மை என்று அவருடைய உள்ளுணர்வு கூறினாலும், பையில் இருந்து குல்ஷா எப்படி பொற்காசுகளைத் திருடியிருக்க முடியும் என்பதை மட்டும் ஊகிக்கவே முடியவில்லை. தன் மனைவி தன்னை புன்னகையுடன் வரவேற்றதைக் கூட அவர் கவனிக்கவில்லை. மௌனமாக சாப்பிட உட்கார்ந்தார். கைகள் உணவை எடுத்து வாயில் போட்டுக்கொண்டாலும், மனம் அந்த வழக்கைப் பற்றி யோசிப்பதிலேயே தீவிரமாக ஆழ்ந்து இருந்தது.

திடீரென பீர்பலுக்கு ஒரு யோசனை உதயமாயிற்று. உடனே தன் படுக்கை அறைக்குச் சென்ற அவர், விலையுர்ந்த படுக்கை விரிப்பு ஒன்றை எடுத்து, அதைக் கத்திரிக்கோலால் சரசரவெனக் கிழித்தார். அதைப்பார்த்த அவர் மனைவி ஓடி வந்து "ஐயோ, உங்களுக்குப் பைத்தியாமா? என்ன காரியம் செய்கிறீர்கள்?" என்று கூச்சலிட, "உஷ்" என்று அவளை அடக்கிவிட்டுத் தன் வேலையாளை அழைத்த பீர்பல், "இந்த படுக்கைவிரிப்பு கிழிந்ததே தெரியாமல் அருமையாகத் தைக்க வேண்டும். அப்படிப்பட்ட திறமையான தையற்காரர் யாராவது தெரியுமா?" என்று கேட்க அவன், "ஐயா! மன்சூர் அலி எனும் தையற்காரன் ஒரு மேதாவி! அவனிடம் கொடுத்தால், கிழிந்ததே தெரியாமல் தைத்து விடுவான்" என்றான்.

உடனே அவனிடம் பீர்பல் அதைக் கொடுத்தனுப்பினார். மறுநாள் மாலை, வேலைக்காரன் கொடுத்த வேலையைக் கச்சிதமாக முடித்து விட்டுத் திரும்பினான். படுக்கைவிரிப்பைப் புரட்டிப் பார்த்ததும் அது முன்பு கிழிந்திருந்த இடத்தையே பீர்பலினால் கண்டு பிடிக்க முடியவில்லை. அவ்வளவு நன்றாக மன்சூர் அலி தைத்திருந்தான்.
"ஆகா! மிகப் பிரமாதமாகத் தைத்து இருக்கிறானே! இந்த மன்சூர் அலியை நேரில் சந்தித்துப் பாராட்ட விரும்புகிறேன்" என்று கூறிவிட்டு, பீர்பல் தன் வேலைக்காரனுடன் மன்சூர் அலியின் கடைக்குச் சென்றார்.


"அடடா! பிரபு! நீங்களா! சொல்லிஇருந்தால் நானே உங்களைத் தேடி வந்திருப்பேனே!" என்று மன்சூர் அலி ஓடி வந்தான். "மன்சூர்! உன் கடைக்கு வந்து உன்னை நேரிலே பாராட்ட வேண்டும் என்று தோன்றியது. அதனால்தான் நானே இங்கு வந்து விட்டேன்" என்றார் பீர்பல்.


"ஆகா ! உங்கள் பாதம் என் கடையில்பட நான் என்ன பாக்கியம் செய்து இருக்கிறேன்!" என்று மன்சூர் உணர்ச்சிவசப்பட்டான்.

"இந்தா! நீ செய்த அருமையான வேலைக்குக் கூலி!" என்று பீர்பல் ஒரு தங்கக் காசைக் கொடுத்தார். "இருங்கள்! மீதிப்பணத்தைத் தருகிறேன்" என்று மன்சூர் தன் சட்டைப் பையைத் துழாவ, உடனே பீர்பல் அவனைத் தடுத்தப்படி "அவசியமில்லை நீயே வைத்துக் கொள் என்று அடுத்துக் கிழவியின் பையைக் காட்டினார்.


"மன்சூர்! இந்தப் பையை சமீபத்தில் நீ தையல் போட்டாயா?" என்று பீர்பல் கேட்டதும், அவன் அதை அடையாளம் கண்டு கொண்டான்.


"ஆம், பிரபு!" என்ற மன்சூர், பையில் ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி, "இந்த இடம் கிழிந்திருந்தது. இதைத் தையல் போட்டு சரி செய்தேன். ஒரு மாதம் முன்பாக குல்ஷா என்னிடம் இந்த வேலையைச் செய்யச் சொன்னார்" என்றான்.


பீர்பலுக்குத் தேவையான தகவல் கிடைத்துவிட, அவர் மன்சூரிடம் விடை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினார். மறுநாள் தர்பார் கூடியது. பீர்பல் ஏற்பாடு செய்திருந்தபடி, கிழவியும், குல்ஷாவும் தர்பாருக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.



அக்பர் பீர்பலை நோக்கி, "இந்தக் கிழவி கூறியது உண்மைதானா இல்லை வீணாக குல்ஷா மீது பழி சுமத்துகிறாளா?" என்று கேட்டார்.


"கிழவி கூறியதுதான் உண்மை" என்று அழுத்தந்திருத்தமாகக் கூறிய பீர்பல் தான் உண்மையைக் கண்டறிந்த விதத்தை விளக்கினார்.

அதைக் கேட்ட குல்ஷாவின் முகம் பீதியினால் வெளுத்துக் கை, கால்கள் நடுங்கின. கோபமடைந்த அக்பர், "குல்ஷா! பீர்பல் கூறுவது உண்மைதானா மோசடி செதது நீதானா? பொய் சொன்னால் உன்னை இங்கேயே கொன்று விடுவேன்" என்று சீற, குல்ஷா, "பிரபு! பீர்பல் கூறுவது உண்மையே! பேராசை என் கண்களை மறைத்துவிட்டது" என்று அழுதான். கிழவிக்கு அவள் பொற்காசுகள் திரும்பக் கிடைத்தன. பாவம், குல்ஷாவுக்குச் சிறையில் கம்பி எண்ண நேரிட்டது.

0 comments:

Post a Comment

Flag Counter