காளியும் தெனாலி ராமனும்:

தெனாலிராமன் ஊர் ஆந்திரா.

அந்த ஆண்டு அங்கு மழையே பெய்யவில்லை. விவசாயம் இல்லாமல் எங்கும் வறட்சி ஏற்பட்டது. அப்போது அக்கிராமத்துக்கு ஒரு சாமியார் வந்து சேர்ந்தார். அவர் வந்து சேர்ந்த அன்றே பலமான மழை பெய்யத் துவங்கியது. ஆறு, ஏரி, குளம், குட்டை எல்லாம் நிரம்பிவிட்டன. சாமியார் வந்ததால்தான் மழை பெய்தது என்று அவ்வூர் மக்கள் சாமியாரை புகழ்ந்தார்கள். 

இதை பார்த்துக் கொண்டிருந்த தெனாலி ராமன் சிரித்து விட்டான். இதைப் பார்த்த சாமியார், தெனாலிராமனை அருகில் அழைத்து "தம்பி நீ ஏன் சிரிக்கிறாய்?" என வினவினார்.
http://i1327.photobucket.com/albums/u663/roojavanam/thenaliraman_zps57f4268a.jpg
அதற்கு தெனாலிராமன் "மழை பெய்வதும் பெய்யாமல் போவதும் இறைவன் செயலே. அப்படியிருக்க தாங்கள் வந்தவுடன் தங்கள் மகிமையால்தான் மழை பெய்துள்ளது என்று மக்கள் எண்ணுவது ஒரு 'காக்கை உட்கார்ந்ததும் பனம் பழம் கீழே விழுந்த' கதை போல " என்றான் தெனாலிராமன்.

இதைக் கேட்ட சாமியார் அவன் மேல் கோபப்படாமல், " தம்பி உன்னிடம் திறமை இருக்கிறது. நீ காளி மகாதேவியின் அருளைப் பெற்றால் பிற்காலத்தில் புகழ் பெற்று விளங்குவாய்" என்று நல்லாசி கூறினார்.

இதைக்கேட்ட தெனாலிராமன் காளிமகாதேவியின் சந்நிதியை அடைந்தான். அவளைக் காண பலவாறு வேண்டி தவம் இருந்தான். கடைசியில் தெனாலிராமன் முன் தோன்றினாள் காளிதேவி. அவளது உருவத்தைப் பார்த்துப் பயப்படுவதற்குப் பதிலாக பலமாக சிரித்தான். 

அவன் சிரிப்பதைப் பார்த்த காளிதேவி, "என் கோர உருவத்தைப் பார்த்து எல்லோரும் அஞ்சுவார்கள். நீயோ பலமாகச் சிரிக்கிறாய்? ஏன்?" என்று வினவினாள்.

அதற்கு தெனாலிராமன் "எனக்கு சளிபிடித்தால் என்னுடைய ஒரு மூக்கை சிந்துவதற்கு என்னுடைய இரண்டு கைகளே போதவில்லை. அப்படியிருக்க உனக்கு ஆயிரம் தலை உள்ளது. ஆனால் கைகள் இரண்டே பெற்றுள்ளாய். உனக்கு சளிபிடித்தால் ஆயிரம் மூக்கையும் எப்படி இரண்டு கைகளால் சிந்துவாய் என்று எண்ணினேன். அதனால் எனக்கு சிரிப்பு வந்தது" என்றான். இதைக் கேட்டதும் காளிமகாதேவியே சிரித்து விட்டாள்.

பின் "மகனே, உன்னை ஆசீர்வதிக்கிறேன். பெரும் பேரும் புகழும் பெற்றுத்திகழ்வாய். உனக்கு கஷ்டம் நேரும் போதெல்லாம் என்னை நினை. உனக்கு உதவி செய்கிறேன்" எனக்கூறி மறைந்தாள் காளிதேவி.

0 comments:

Post a Comment

Flag Counter