மன்னர் மாதவசேனர் கலாரசிகர். அவர் பல அழகிய ஓவியங்களையும் சிலைகளையும் சேகரித்து ஓர் அருங்காட்சியகத்தை அமைத்தார். அதை நன்கு கவனித்து நிர்வகிக்க கலையை மதித்து ரசிக்கக் கூடிய ஒருவனைத் தேர்ந்த எடுக்க விரும்பினார்.
அதனால் அருங்காட்சியகத்தின் நிர்வாகி என்ற பதவிக்கு தேர்வு ஒரு குறிப்பிட்ட நாளில் நடக்கும் என்று நாடெங்கிலும் பறைசாற்றுவிக்கப் பட்டது. அத்தேர்விற்குப் பல கலைஞர்கள் வந்தார்கள். அவர்களை வடிகட்டி மூன்று பேர்களை ஆஸ்தான பண்டிதர் தேர்ந்து எடுத்தார்.
மன்னரும் அந்த மூவரையும் கூட்டிக் கொண்டு அருங்காட்சியகத்திற்குள் சென்றார். அங்கு ஓர் அழகிய சிலையை அவர்களுக்குக் காட்டி அவர் இந்த அழகிய சிலைக்கு எவ்வளவு பணம் கொடுத்து வாங்கி எடுத்துக் கொண்டு போவீர்கள்?" என்று கேட்டார். சாகரன், இந்த அழகிய சிலைக்கு என் சொத்து முழுவதையும் விலையாகக் கொடுத்துவிட்டு இதை எடுத்துக் கொண்டு செல்வேன்," என்றான். சேகரனும், என்னிடம் உள்ளவற்றை எல்லாம் விற்று இதை வாங்கிக் கொண்டு போய்விடுவேன்," என்றான்.
சுதாகரனோ, அரசே! இதன் விலையை மதிப்பிடவே முடியாது. இந்த அழகிய கலை அம்சம் கொண்ட சிலையை எல்லோரும் பார்த்து ரசிக்க வேண்டும். இது இங்கேயே இருக்க வேண்டிய அற்புதப் படைப்பு. இதை விலை கொடுத்து வாங்கவும் மாட்டேன். விற்கக் கூடாது என்றும் கூறுவேன்," என்றான். மன்னர் சுதாகரனையே அருங்காட்சியக நிர்வாகியாக நியமித்தார்.
0 comments:
Post a Comment