முட்டா...! குட்டா...!


முல்லை காட்டில் முட்டா, குட்டா என இரண்டு குரங்குகள் இருந்தன. மற்ற குரங்குகள் போல இல்லாமல் இந்த இரண்டும் சரியான சோம்பேறிகள்.

குரங்குகள் கூட்டமாக பழங்கள் தேடி காடு முழுக்க சுற்றித்திரியும். ஆனால் இவை இரண்டும் ஏதாவது மரத்தில் ஜாலியாக படுத்து நாள்முழுக்க உறங்கும்.

‘‘அலைஞ்சு திரிஞ்சு மரம் ஏறி இறங்கினா கால் வலிக்கும்.. வெயில் வேற அதிகமா இருக்கு, யார் போய் காடெல்லாம் சுத்தறது’’ என்று சாக்குபோக்கு சொல்லிக்கொண்டு எப்போதும் ஒரே மரத்தில் உறங்கிக்கொண்டிருந்தன.

ஆனால் இந்த இரண்டு குரங்குகளுக்கும் மூன்றுவேளையும் பசிக்குமே.. என்ன செய்வது. யார் வீட்டிலாவது திருட வேண்டியதுதான். அப்படித்தான் ஒருநாள் யானையாரின் வீட்டில் தன் கைவரிசையை காட்டின. யானையார் வீட்டில் தன் குட்டிகளுக்காக சமைத்து வைத்திருந்த சோளப்பொறி உருண்டையை திருடி தின்றன. வீட்டில் இருந்த பாத்திரங்களையும் போட்டு உடைத்துவிட்டு ஓடிவிட்டன. 

மாலை நேரம் யானையாரின் குட்டிகள் வெளியே விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்தன. வீடே அலங்கோலமாக கிடந்தது. சாப்பாடும் இல்லை. யானையார் வந்துபார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே நேராக சிங்கராஜாவிடம் சென்று புகார் கொடுத்தார். ‘‘இதை நான் பார்த்துக்கொள்கிறேன் நீங்கள் நிம்மதியாக போய்வாருங்கள்’’ என சிங்கராஜா கூறினார்.

நரியார் நந்து துப்பறிவதில் பலே கில்லாடி. முல்லைக்காட்டில் யார் தப்பு செய்தாலும் அதை துப்பறிந்து கண்டுபிடித்து சரியான தண்டனையை பெற்றுத்தருவார் நம்ம நரியார் நந்து. அதனால் யானையார் வீட்டில் திருடிய திருடனையும் கண்டுபிடிக்கும் பொறுப்பு நரியாரிடம் தரப்பட்டது.

நரியார் நந்து நேராக யானையாரின் வீட்டிற்கு சென்றார். வீட்டை சுற்றி சுற்றி பார்த்தார். யானையாரின் குட்டிகளை அழைத்து விசாரித்தார்.

தன்னுடைய பூதக்கண்ணாடியால் வீட்டிற்கு உள்ளே சென்று சோதனை செய்தார். சாப்பாடு இருந்த இடம், பாத்திரங்கள் கீழே விழுந்த இடம் என எல்லா இடங்களையும ஒன்று விடாமல் பார்த்தார். அங்கே குரங்கள் வந்து போனதற்கான கால்தடங்கள் இருப்பதை கண்டார். அது இரண்டு வெவ்வேறு குரங்குகளின் கால்தடங்கள்.

நேராக சிங்கராஜாவிடம் சென்று ‘‘வணக்கம்! சிங்கராஜா.. யானையார் வீட்டில் பார்த்ததில் இரண்டு குரங்குகள்தான் இந்த வேலையை செய்திருப்பதாக தெரிகிறது. அந்த குரங்குகள் இரண்டு குட்டிகளாக இருக்க வேண்டும். காட்டிலிருக்கும் அனைத்து குரங்கு குட்டிகளையும் வரச்சொல்லுங்க! நான் விசாரிக்கணும்’’ என்றார்.

‘‘குட்டிகள் என்றால் ஏகப்பட்டது இருக்குமே, எப்படி அந்த இரண்டு குட்டிகளை கண்டுபிடிக்கப்போறீங்க நரியாரே?’’ என்றுகேட்டார் சிங்கராஜா.

‘‘அதற்கு ஒரு சூப்பர் ஐடியா வைத்திருக்கிறேன்.. மதியம் பாருங்க என்ன நடக்குதுன்னு’’ என்று சிரித்தார் நரியார் நந்து.

அனைத்து குரங்குகளும் வரவழைக்கப்பட்டன. வரிசையாக நிற்கவைக்கப்பட்டன.

‘‘குரங்கு குட்டீஸ் அனைவருக்கும் வணக்கம். உங்களில் யாரோ இரண்டு பேர் யானையார் வீட்டில் திருடிவிட்டார்கள். அது யார் என கண்டுபிடிக்கவே உங்களை இங்கே வரவழைத்தேன்’’ என்றார் நரியார்.

முட்டாவுக்கும் குட்டாவுக்கும் பயமாகிவிட்டது. ‘‘ஆஹா இவரு கில்லாடியாச்சே கண்டுபிடிச்சிட்டாரா.. மாட்டிகிட்டோம் போலிருக்கே’’ என பயந்துபடி நின்றனர்.

ஒவ்வொருவராக அருகில் சென்று பார்த்தார் நம்ம நரியார் நந்து.

மீண்டும் வெளியே வந்து ‘‘உங்களில் யார் திருடியவர் என கண்டுபிடித்துவிட்டேன்.. அந்த இரண்டு திருடர்களும் யானையார் வீட்டில் சோளப்பொறி உருண்டையை சாப்பிட்டுவிட்டு வாயை துடைக்காமல் இருக்கின்றனர். அவர்களது வாயில் ஒட்டியிருந்த சோளப்பொறிகளை பார்த்து நானே கண்டுபிடித்துவிட்டேன்’’ என்று சொன்னார்.

உடனே முட்டாவும் குட்டாவும் அவசரமாக வாயை துடைத்துக்கொண்டன. ஆனால் வாயில் எதுவுமே இல்லை. அப்போதுதான் இரண்டு குட்டிகளுக்கும் நரியாரின் தந்திரம் புரிந்தது. நரியார் நந்து வேண்டுமென்றே திருடனை கண்டுபிடிப்பதற்காகத்தான் அப்படி சொல்லியிருக்கிறார். அவசரப்பட்டு வாயை துடைத்து மாட்டிக்கொண்டோமே என நினைத்த முட்டாவும் குட்டாவும் தப்பியோட முயன்றன. அருகிலிருந்த மரத்திற்கு தாவ நினைத்தன.

‘‘முட்டா.., குட்டா.. இரண்டுபேரையும் பிடியுங்கள்’’ என நரியார் நந்து உத்தரவிட கரடியார் பாய்ந்து சென்று தப்பி ஓட முயன்ற முட்டா, குட்டா இருவரையும் பிடித்தார். சிங்கராஜா ‘‘முட்டா, குட்டா உங்கள் இருவரையும் குட்டிப்பையன்களாக இருப்பதால் இந்த முறை மன்னித்துவிடுகிறேன். இனிமேல் திருடக்கூடாது மீறி திருடினால் உங்களுக்கு கடுமையான தண்டனை கொடுப்பேன்’’ என்றார்.

‘‘சிங்கராஜா எங்களை மன்னித்துவிடுங்கள் இனிமேல் திருடமாட்டோம்’’ என மனம் வருந்தி மன்னிப்புகேட்டனர் முட்டாவும் குட்டாவும்.

அனால் சிங்கராஜா அவர்களிடம், ‘‘தவறு செய்தல் நிச்சியம் தண்டனை அனுபவிக்க வேண்டும் என கூறி இரண்டு  மாதங்கள் நீங்கள் இருவரும் கிணற்றில் தண்டனை அனுபவிங்கள்’’ என ஆணையிட்டார்.

சமயோசிதமாக செயல்பட்டு திருடர்களை பிடித்துக்கொடுத்த நரியார் நந்துவை அனைவரும் பாராட்டினர்.

நீதி:- அடுத்தவர் பொருளை திருட நினைத்தால் நிச்சியம் தண்டனை கிடைக்கும்.

0 comments:

Post a Comment

Flag Counter